twitter
    Celebs»Mohanlal»Biography

    மோகன்லால் பயோடேட்டா

    மோகன்லால் விஸ்வநாதன் நாயர், மோகன்லால், இந்தியத் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர். இவர் பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நான்கு முறை தேசிய விருதுகளைப் பெற்றவர், இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளையும், ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றவர். 

    மேலும் ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றிருக்கிறார், இவர் இந்திய திரைப்பட உலகத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டுபத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், இந்தியத் தரைப்படை இவரை கௌரவிக்கும் வகையில் லெப்டினன்ட் காலோனல் பதவியை வழங்கியது, இவ்விருதை பெரும் முதல் இந்திய நடிகர் இவரே. மேலும் காலடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்க்ரித பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் வழங்கி கௌரவித்தது . தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்கான மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவரேயாவார்.

    மோகன்லால் கேரளத்திலுள்ள பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூர் என்ற இடத்தில், வழக்கறிஞரும் அரசு ஊழியருமான விஸ்வநாதன் நாயர் - சாந்தகுமாரி தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். பிறகு இவர்களுடைய குடும்பம் திருவனந்தபுரத்திலுள்ள முடவன்முகள் என்ற இடத்தில் அமைந்திருக்கும் அவருடைய தாயாரின் வீட்டிற்கு இடம் பெயர்ந்தது. முடவன்முகளில் 'LP' பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார், அதற்குப்பின் திருவனந்தபுரத்தில் உள்ள மாடல் பள்ளிக்கூடத்தில், தனது படிப்பைத் தொடர்ந்தார். 

    பள்ளிக்கூட படிப்பில் சராசரி மாணவனாகத்தான் திகழ்ந்தார், அதே சமயம் கலை உலகம் அவர் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது, பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார். பொதுவாக பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களே சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் ஆறாவது வகுப்பு மாணவரான மோகன்லால் பள்ளிக்கூடத்தில் சிறந்த நடிகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் தமது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இவர் நடிப்புடன் கொண்டிருந்த இணைப்பை தொடர்ந்துவந்தார் மேலும் சிறந்த நடிப்பிற்கான பல விருதுகளை இவர் வென்றார். இங்குதான் இவர் நாடகத்தின் மீதும் திரைப்படங்களின் மீதும் பற்றுகொண்ட சக மாணவநண்பர்களுடன் நட்பு ஏற்பட்டது. அவர்களில் சிலர் இவருடைய முதல் சாதனைக்கு வித்திட்டனர், அவர்களில் ப்ரியதர்ஷன் ,M.G.ஸ்ரீகுமார் மற்றும் மணியன்பிள்ளராஜு போன்றவர்கள் மிகவும் பிரபலமான இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் உருவெடுத்தார்கள்.

    ஆரம்ப காலங்கள் (1978–1985)

    மோகன்லால் முதன் முதலில் "திறநோட்டம்" (1978) என்ற படத்தில் நடித்தார். தணிக்கைக் குழுவினருடன் (சென்சார் போர்ட்) ஏற்பட்ட தகராறுகள் காரணமாக இப்படம் ஓரிடத்தில் மட்டும் வெளியானது . 1980 ஆம் ஆண்டில் இவர் ''மஞ்சில் விரிஞ்ச பூக்கள்'' என்ற மாபெரும் வெற்றிபடத்தின் மூலம் ஒரு முரண்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து சாதனைப் படைத்தார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இவர் படிப்படியாக தனக்கு முக்கியத்துவம் நிறைந்த பாத்திரங்களை ஏற்று நடித்தார். 1983 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 25 க்கும் மேலான திரைப்படங்களில் நடித்தார். 

    அந்த காலக் கட்டத்தில் பிரபலமான எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் எழுதி ஐ.வி சசி இயக்கிய படமான உயரங்களில் என்ற படத்தில் நடித்தார், அதன் கதை ஏமாற்றுவது மற்றும் துரோகம் இழைத்தலை கருத்தாகக் கொண்டது, இது அவருடைய சிறப்பை உயர்த்திக்காட்டிது. அதற்குப்பிறகு அவரது நண்பனும் கல்லூரியில் சக மாணவருமான இயக்குநர் ப்ரியதர்ஷனின் அறிமுகத் திரைப்படமான பூச்சைக்கு ஒரு மூக்குத்தி என்ற படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.

    பொன்னான காலகட்டம் (1986-1995)

    1986 ஆம் ஆண்டு முதல் 1995 வரையிலான கால கட்டம் பரவலாக மலையாளத் திரைப்பட உலகின் பொன்னான காலகட்டமாகக் கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் விரிவான திரைக்கதைகள், தெளிவான விவரணம் மற்றும் அருமையான நோக்கங்கள் நிறைந்த படங்களாக சிறப்பித்தன. கலை ரீதியிலான படங்களுக்கும், வணிக ரீதியில் எடுத்த படங்களுக்கும் இடையிலேயான இடைவெளியை மிகவும் குறுக்கியது.

     படிப்படியாக உயர்ந்து வரும் இளம் கலைஞர்களில் ஒருவரான திறமை வாய்ந்த மோகன்லால், பல தரப்பட்ட உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தக்கூடிய அழகான பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக்களைப் பெற்றதோடல்லாமல், இவர் மலையாளத் திரை உலகில் பிரபலமடைந்த பல எழுத்தாளர்களுடனும் இயக்குனர்களுடனும் நல்லுறவை மேம்படுத்திக் கொண்டார்.

    1986 ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் சிறந்த ஆண்டாக விளங்கியது. சத்யன் அந்திக்காடு அவர்களின் டி.பி. பாலகோபாலன் எம்.ஏ. என்ற திரைப்படம் அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை முதன்முறையாக பெற்றுத்தந்தது. இவர் நிழலுலக தாதாவாக நடித்த ராஜாவின்டே மகன் என்ற படம் மலையாளத் திரையுலகில் மோகன்லால் ஒரு சூப்பர் ஸ்டாராக வெளிப்படுவதை உறுதி செய்தது. 

    அதே வருடத்தில் இவர், தாளவட்டம் என்ற படத்தில் காப்பிடத்தில் இருக்கும் மனநிலை குன்றியவராக நடித்திருக்கிறார், சன்மனசுள்ளவர்க்கு சமாதானம் படத்தில் பெரும் தொல்லைகள் கொடுக்கும் வீட்டு உரிமையாளர் கதாபாத்திரத்திலும் , எம்.டி. வாசுதேவன் நாயரின் பஞ்சாக்னியில் பத்திரிகையாளர் வேடத்திலும், நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் படத்தில் காதல் வசப்பட்ட பண்ணையாளராகவும், காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட் படத்தில் வேலையில்லாது தவிக்கும் இளைஞன் கூர்காவாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதை சித்தரிக்கும் கதப்பாதிரமாக, என பல்வேறுவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

    எழுத்தாளர் - இயக்குனர் ஜோடியாக திகழ்ந்த ஸ்ரீநிவாசன் ,சத்யன் அந்திக்காடு ஆகியோர் போன்ற சமூக பொறுப்போடு, சமுதாய சீர்கேடுகளை நையாண்டி செய்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தவர்களுடன், இணைந்து பணியாற்றிய படம் நாடோடிக்கட்டு, இதில் வேலையில்லா இளைஞனாக நடித்தார். ''வரவேல்பு'' என்ற படத்தில் இவர் அரபு நாட்டில் இருந்து திரும்பி வரும் நாயகனாக நடித்தார், பேராசை கொண்ட உறவினர்களும் , பகைமை உணர்வுடன் நடத்தும் நாட்டுநிலவரத்தைக் கண்டு அஞ்சும் தொழில்முனைவோர் வேடத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ப்ரியதர்ஷனின் இயக்கிய சித்ரம், கிலுக்கம் படங்களில் வசீகரமான காதல் கதாப்பாத்திரங்களில் நடித்து இளம் ரசிகர்களுக்கிடையே மிகவும் பிரபலமானார். இத்திரைப்படங்கள் இசைக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இந்திய கதாநாயகர்கள் வழக்கமான கதாப்பாதிரங்கலையே ஏற்று நடித்து வந்த நேரத்தில் தூவானத்தும்பிகள் என்ற படத்தில் இரு பெண்களிடம் காதல் கொண்டு அவதிப்படும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் முதல் நாயகியிடம் அடி வாங்கிய மறு கணமே இன்னொரு பெண்ணிடம் காதல் வசப்படும் கோமாளி நாயகனாக இவர் நடிக்கத் துணிந்தார். அம்ரிதம்கமைய என்ற படத்தில் இவர் கல்லூரியில் நையாண்டி செய்து அறியாமல் கொன்று விட்ட ஒரு சிறுவனின் வீட்டிற்கே அவர் கடைசியில் வந்துசேரும் கதாப்பாத்திரம், தாழ்வாரம் என்ற படம் இந்த கால கட்டத்தில் வெளிவந்த குறிப்பிடத்தக்கப் படமாகும்.

    எழுத்தாளர் லோஹிததாஸ் மற்றும் இயக்குனர் சிபி மலையில் ஆகியோர் இணைந்து ஜோடியாக தயாரித்த படங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமான மனம் கவரும் பாத்திரங்களைப் பெற்றுத்தந்தன. கிரீடம் என்ற படத்தில் சேது மாதவன் எனும் ஒருவன் போலீஸ்காரனாக வேண்டும் என்ற கனவு கண்டு கடைசியில் குற்றவாளியாக கூண்டில் நிற்பவனாக நடித்திருந்தார், இது அவருக்கு சிறப்பு நடுவர் குழு விருதைப் பெற்றுத் தந்தது. 

    இதற்கு அடுத்த வருடத்தில், பாரதம் என்ற படத்தில் இவர் ஒரு மரபார்ந்த பாடகர் வேடத்தில் நடித்தார், இதில் பாடகரான தன் சகோதரன் மீது பொறாமை கொல்வதும், அவருடைய இறப்பால் மனம் வெதும்பும் வேடத்தில் நடித்ததற்கு இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

    90 ஆம் ஆண்டுகளிலும் இவர் தமது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாஹ் போன்ற மனதைக் கொள்ளை கொள்ளும் (மனோரஞ்சிதமான) படங்கள் வெளியானது, இதில் இவர் இஸ்லாமியராக நடித்தார், அதில் நம்பூதிரி வேடம் பூண்டு ஒரு ராஜவம்சத்தினனைக் கொல்லத்துணிகிறார். இந்த கால கட்டத்தில் வணிக ரீதியாக வெற்றியடைந்த இதர திரைப்படங்கள் மிதுனம் , மின்னாரம் , தேன்மாவின் கொம்பத்து போன்ற படங்கள் 80 ஆம் ஆண்டுகளைப்போலவே மரபு சார்ந்த நல்ல திரைப்பட கதைகள் கொண்டவையாகவும், நல்ல பாத்திர அமைப்பு பெற்றவையாகவும் திகழ்ந்தன. 

    தேவாசுரம் , ரஞ்சித் எழுதி ஐ.வி சசியின்இயக்கத்தில் உருவானது, மத்திய கேரளாவில் இராணுவ ஆட்சியின் காலத்தை சுட்டி காட்டும், அப்படத்தில் மோகன்லால் திமிர் பிடித்த, பணக்கார முரட்டுத்தனம் நிறைந்த வாலிபனாக தோன்றி வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் காரணமாக சஞ்சலமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அடக்கமானவராக மனம் மாறும் பாத்திரத்தை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். இயக்குனர் பத்ரனின் ஸ்படிகம் என்ற படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் புதுமையாக அமைந்து மாபெரும் வெற்றி படமானது. சிறந்த படங்கள் குறைவாக வந்துக்கொண்டிருந்த இக்கால கட்டத்தில் மணிசித்திரத்தாழ், போன்ற கலை மற்றும் வியாபார ரீதியான வெற்றிப்படங்கள் வெளிவந்தன மனிச்சித்திரத்தாழ் படத்தில் நடித்ததற்காக சோபனா சிறந்த நடிகிக்கான தேசிய விருதைப்பெற்றார்.

    பிந்தைய வருடங்கள் (1996-தற்பொழுது)

    அவருடைய திரைப்பட வாழ்க்கையின் இந்த கால கட்டத்தில் கேரளாவில் மோகன்லால் அடைந்த அளவற்ற மக்கள் செல்வாக்கின் காரணமாக, படத் தயாரிப்பாளர்கள் அவரை திரைப்படங்களில் எதற்குமே அஞ்சாத, யாராலும் வெல்ல முடியாத, நிஜ வாழ்க்கையை மிஞ்சும் கதாநாயகனாக பல படங்களில் நடிக்க வைத்து வியாபாரமாக்கினர். அந்த நாயக அந்தஸ்த்தை பயன்படுத்தி ஆறாம் தம்புரான் , நரசிம்ஹம் , ராவணப்பிரபு, நரன் போன்ற திரைப் படங்களைத் தயாரித்தனர். அவை யாவும் வெற்றிப்படங்களாகவே திகழ்ந்தன. 

    ஆரம்பத்தில் அவை புதுமையாக காணப்பட்டாலும், காலப்போக்கில் இவ்வாறான படங்கள் நிஜ வாழ்க்கைக்கு ஒவ்வாமலும், மோகன்லாலை சுற்றியே வடிவமைந்ததாகவும் பல இடங்களில் இருந்து கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது. 90 களின் இறுதியில் வெளிவந்த இயக்குநர் ப்ரியதர்ஷனின் காலாபானி இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தில் அந்தமான் தீவில் உள்ள குறுகிய சிறைகளில் அடைத்து சித்திரவதைக்கு உட்பட்ட கைதிகளைப்பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது), லோஹிததாஸ் அவர்களின் கண்மடம் படமும் இவர் நடித்த சில பெயர்பெற்ற படங்களாகும்.

    இந்த நேரத்தில் தான் மலையாளம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தியாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் மொழிப்படமான இருவரில் நடித்தார். இந்தப் படத்தில் மோகன்லால் அவரது அண்டை மாநிலமான தமிழ் நாட்டில் தனக்கென தனிப்பெரும் செல்வாக்கு பெற்ற நடிகர் எம்ஜிஆர்(தமிழக முன்னாள் முதல்வர்) அவர்களின் வேடத்தில் நடித்தார். 

    பின் இந்திய-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பான வானப்ரஸ்தம் என்ற படத்தில், தமது அடையாளத்தையே இழந்த கதகளி நாட்டிய விற்பன்னராக வேடம் புனைந்தார், இது அவருக்கு சிறந்த நடிகருக்கான இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுத்தந்தது, மேலும் உலக அளவில் அவரது திறமையை அறியவைத்த முதல் படமாக இது திகழ்ந்தது. கான்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் பிரிவில் இப்படம் தெரிவு செய்யப்பட்டு திரையிடப்பட்டது, அவரது நடிப்பு பல திறனாய்வாளர்களின் பாராட்டைப் பெற்றது.

    2002 ஆம் ஆண்டில், மோகன்லால் அவரது முதல் பாலிவுட் படமான, கம்பெனி யில் நடித்தார், இப்படம் இந்தியாவில் பரவலாக பேசப்படும் ஹிந்தி மொழி ரசிகர்களிடம் அவரை அறிமுகப்படுத்தியது. இப்படம் வணிக ரீதியில் சிறப்பான வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. 2006 ஆம் ஆண்டில், இவர் நடித்த தன்மாத்ரா ("மொலிக்யுள்") என்ற படத்தில், அல்செய்மர்ஸ் நோயால் (முதுமை வியாதி) அவதியுறும் ஒரு பாத்திரத்தின் நடிப்பு அவருக்கு கேரள மாநிலத்தின் சிறந்த நடிகாருக்கான விருதைப் பெற்றுத்தந்தது. 

    அவரது இரண்டாவது பாலிவுட் திரைப்படம் ராம் கோபால் வர்மா கி ஆக் , இப்படம் 1975 ஆம் ஆண்டில் வெளிவந்த வெற்றிப்படமான ஷோலே படத்தின் மறு தயாரிப்பாகும் மேலும் அதில் சஞ்சீவ் குமார் அவர்கள் நடித்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் தோன்றினார். பரதேசி என்ற படத்தில் வலியகத்து மூசா என்ற வேடத்தில் நடித்ததற்காக மோகன்லால் அவர்களுக்கு கேரள மாநிலத்தின் மிகச் சிறந்த நடிகருக்கான விருது 2007 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. தேசிய அளவில் பரதேசி என்ற படத்தில் அவருடைய நடிப்பிற்கு கிடைக்கவேண்டிய சிறந்த நடிகருக்கான விருதை மோகன்லால் அவர்கள் ஒரே ஒரு வோட்டு வித்தியாசத்தில் இழந்தார். 2009 ஆம் ஆண்டில் மோகன்லால் டாக்டர் கமல் ஹாசனுடன் தமிழ் படமான உன்னைப்போல் ஒருவனில் நடித்தார். அவரது நடிப்பை தமிழ் ரசிகர்கள் மிகவும் போற்றினர். 

    2010 ஆம் ஆண்டை இவர் மிகவும் நல்ல முறையில் துவங்கினார், ஓர் உண்மையான குடும்பக் கதையை சித்தரிக்கும் [சான்று தேவை] குடும்பப் படமான இவிடம் ஸ்வர்கமாணு என்ற ரோஷன் ஆண்ட்ர்யூஸ் இயக்கிய வெற்றிப் படத்தில் இவர் நடித்துள்ளார்.