twitter
    Celebs»Senthil»Biography

    செந்தில் குமார் பயோடேட்டா

    மிர்ர்ச்சி செந்தில் என்று அறியப்படும் செந்தில் குமார் ஒரு பிரபல இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் ரேடியோ மிர்ர்ச்சி என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்னும் நெடுந்தொடரில் நடித்து வருகிறார். தவமாய் தவமிருந்து என்னும் திரைப்படத்தில் தொடங்கி, செங்காத்து பூமியிலே, கண் பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

    செந்தில் அக்டோபர் 18, 1978ல் அன்று சென்னையில் கோவிந்தன், பிரேமாவதி அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் சென்னை பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோவில் பள்ளி படிப்பை முடித்தபின், பச்சையப்பா கல்லூரியிலும், மதுரை காமராஜ் பல்கலைகழகத்திலும் உயர் கல்வியை முடித்தார். சில மாதங்கள் வங்கித்துறையில் பணியாற்றிவிட்டு, கலைத்துறைக்கு வந்தார்.

    வானொலி

    செந்தில் 2003ம் ஆண்டு சென்னை ரேடியோ மிர்ர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார் . பின்பு கோவை ரேடியோ மிர்ர்ச்சியின் நிலைய தலைவராக நான்கு ஆண்டுகள் பணி ஆற்றினார். மிர்ர்ச்சி கோல்ட், மிர்ர்ச்சி பஜார், பேட்டை ராப், லவ் டாக்கீஸ் போன்ற பல நிகழ்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார். இப்போது இசைஞானி இளையராஜாவால் பாராட்டப்பட்ட நீங்க நான் ராஜா சார் நிகழ்ச்சியை செய்கிறார்.

    தொலைக்காட்சி

    ஸ்டார் விஜய் டிவியில் 2007 ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட மதுரை தொடரில் செய்கை சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். இந்த தொடருக்கிருந்த வரவேற்பைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி எனும் நெடுந்தொடரில் நடித்து வருகிறார்.

    திரைப்பட இயக்குனர் மனோபாலாவின் இயக்கத்தில் பாலிமர் தொலைக்கட்சியில் 777 குறுந்தொடரிலும் நடித்துள்ளார்.

    தொடர்களைத் தவிர செந்தில் பல நிகழ்சிகளை ஸ்டார் விஜய்க்காக தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இந்த வாரம் என்னும் நிகழ்ச்சியில் பல திரைப்பட குழுவினருடன் இணைந்து பட விமர்சனம் செய்துள்ளார். பாலிமர் தொலைக்கட்சியில் பெண்களுக்கான பாக்சிங் நிகழ்ச்சியை செய்தார்.

    திரைப்படங்கள்

    செந்தில் இயக்குனர் சேரனால் தவமாய் தவமிருந்து என்னும் திரைபடத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். இதில் இவர் சேரனின் சகோதரனாக நடித்ததற்காக பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்க பட்டார். இதனை அடுத்து செங்காத்து பூமியிலே என்னும் திரைபடத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, கண் பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.