twitter

    நான் ஈ கதை

    நான் ஈ 2012ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் ஈகா என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்ட படம் இது. இப்படம் மலையாளம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இறந்தவர் தன்னைக் கொன்றவரை பழிவாங்குவதற்காக ஈயாக மறுபிறவி எடுப்பதே கதை. தமிழில் வெளியான அறிவியல் கதைகளைக் கொண்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

    கதை:

    நானி தன் எதிர் வீட்டு பெண் பிந்து மீது 2 ஆண்டுகளாக காதல் கொண்டுள்ளார். தன் காதலை பலவிதங்களில் பிந்துவுக்கு தெரியப்படுத்துகிறார். பிந்துவும் நானியை காதலிக்கிறார் ஆனால் தன் காதலை நானியிடம் சொல்லாமல் மறைத்து அவரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்.

    சுதிப் பெரும் பணக்கார தொழிலதிபர். அவர் பெண்களை மயக்குபவராகவும் உள்ளார். பணத்திற்காக தன் மனைவியை கொன்றவர். ஒரு நாள் பிந்து சுதிப்பின் அலுவலகத்துக்கு தன்னுடைய லாப நோக்கற்ற அமைப்புக்கு நன்கொடை கேட்க வருகிறார். பிந்துவின் மீது விருப்பம் கொண்ட சுதிப் அவருக்கு 15 இலட்ச ரூபாயுக்கு காசோலை தருகிறார். சுதிப்பின் உண்மையான நோக்கத்தை அறியாத பிந்து அவருக்கு தன் அமைப்பு பற்றி விளக்குகிறார். சுதிப் பிந்துவை மதிய உணவு உண்ண வெளியில் செல்லலாம் என சொல்கிறார்.

    உணவகத்தில் பிந்து நானியை பார்த்து விடுகிறார். நானி நீச்சல் குளத்திற்கு அந்தபுறம் உணவகத்திற்கு வாணவெடிகளை பொருத்துகிறார். பிந்து நானியை பார்ப்பதை அறிந்து சுதிப் நானி மேல் பொறாமை கொள்கிறார். பிந்து இரவு நீண்ட நேரம் வேலை செய்ததால் நானியை துணைக்கு வர கூப்பிடுகிறார். அப்பொழுது பிந்துவுக்கு கழுத்தணி செய்வதற்கான சில குறிப்புகளை நானி தருகிறார். இக்கழுத்தணியை செய்து முடித்ததும் நானியிடம் தன் காதலை சொல்ல பிந்து முடிவு செய்கிறார்.

    பிந்துவை அவர் வீட்டில் விட்டதும் நானியை சுதிப் இடுகாட்டிற்கு கடத்திச்சென்று நன்றாக அடித்து தான் பிந்துவை காதலிப்பதாகவும் நானி இனி பிந்துவை பார்க்கக்கூடாது என்றும் மிரட்டுகிறார். பிந்துவின் பக்கத்தில் சுதிப் சென்றால் அவரை கொன்று விடுவேன் என்று நானி சொல்கிறார். நானியை கழுத்தை நெரித்து சுதிப் கொல்கிறார். பிந்து நானியை காதலிப்பதாக அவருக்கு அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்புகிறார். பிந்து தன்னை காதலிப்பதை அறிந்தபின் நானியின் உயிர் பிரிகிறது. அவர் 'ஈ'யாக மறு பிறப்பெடுக்கிறார்.

    சுதிப்பின் அலுவலகத்திற்கு ஈ (நானி) வருகிறது. சுதிப்பை கண்டதும் ஈக்கு தன் பழைய பிறப்பு பற்றி நினைவுக்கு வருகிறது. சுதிப் பண்ணிய கொடுமைகளுக்கு பழிதீர்க்க முயலுகிறது. சுதிப் எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து அவருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. நானியின் இறப்பை நினைத்து பிந்து வருந்துவதை அறிந்து நானியை மறந்து தன்னை காதலிக்க வைக்க சுதிப் முயற்சிகளை மேற்கொள்கிறார்.

    கல்வித்துறை அமைச்சரை சந்திக்க தன்னுடன் டில்லி வரும்படி பிந்துவை சுதிப் கேட்கிறார். அவரை சந்தித்தால் பிந்துவின் லாப நோக்கற்ற அமைப்புக்கு தேசிய அளவில் அறிமுகம் கிடைக்கும் என்கிறார், பிந்து டில்லி வர ஒப்புக்கொள்கிறார். இதை அறிந்த ஈ (நானி) சுதிப் வானூர்தி நிலையம் செல்லும் வழியில் விபத்தில் சிக்க வைக்கிறது. விபத்தில் சிக்கிய மகிழுந்தில் நான் உன்னை கொல்லுவேன் என ஈ (நானி) எழுதி காட்டுகிறது. அதிலிருந்து சுதிப் ஈயை கண்டால் பயப்பட ஆரம்பிக்கிறார், தன் வீட்டில் எந்த ஈயும் வர முடியாதவாறு பல ஏற்பாடுகளை செய்கிறார்.

    பிந்துவின் வீட்டை அடையும் ஈ (நானி) அவருக்கு ஈ உருவத்தில் உள்ளது நானி என புரியவைக்கிறது. தன்னைக்கொன்றது சுதிப் என சொல்கிறது. பிந்துவிற்கு சுதிப்பின் உண்மையான குணம் பற்றி தெரிகிறது அவர் ஈ (நானி) யுடன் இணைந்து சுதிப்பின் வாழ்வை சீரழிக்க திட்டமிடுகிறார். பிந்துவின் உதவியால் சுதிப்பின் வீட்டிற்குள் நுழையும் ஈ (நானி) அவருக்கு பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த அவரின் பணம் முழுவதையும் எரித்துவிடுகிறது. சுதிப் மந்திரவாதியை அழைத்து ஈ (நானி)யை ஒழிக்க ஓமம் செய்கிறார், ஈ (நானி) அதிலிருந்து தப்பித்து மின் இணைப்பில் குறுஞ்சுற்றிணைவு கசிவு ஏற்படுத்துகிறது அதனால் மந்திரவாதி இறக்கிறார், சுதிப் மயக்கமடைகிறார்.

    அடுத்த நாள் மயக்கம் தெளிந்த சுதிப் ஈ (நானி)யும் பிந்துவும் இணைந்து செயல்படுவதை கண்டுபிடிக்கிறார். கோபமடைந்த சுதிப் பிந்துவை தன் வீட்டுக்கு கூட்டி வந்து அவரை இழிவாக பேசுகிறார். ஈ (நானி)யின் இறக்கைகளை வெட்டி விடுகிறார், அதை ஊசியால் குத்துகிறார். இறக்கும் தருவாயில் சிறிய பீரங்கியில் தீ வைத்து சுதிப்பை கொல்லுகிறது.

    பின்னர், பிந்து சாலையிற்செல்லும்போது ஓரிளைஞன் அவருடன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கின்றார். அப்போது, நானி மீண்டும் இன்னோர் ஈயாகப் பிறப்பெடுத்து அவ்விளைஞனைத் தாக்கி, எப்போதும் பிந்துவுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie நான் ஈ with us? Please send it to us ([email protected]).