Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
2015: தமிழ் சினிமாவை அதிரவைத்த "டாப் 10" சம்பவங்கள்
சினிமாவையே மிஞ்சும் வகையில் சினிமாவுலகில் இந்த வருடம் பல்வேறு ஆச்சரிய நிகழ்வுகள் அரங்கேறின. இதில் முன்னணி நடிகர்களும் அடக்கம் என்பதுதான் ஹைலைட்.
த்ரிஷா தொடங்கி சிம்பு வரை இந்த வருட தமிழ் சினிமாவில் அதிக பரபரப்புகளை ஏற்படுத்தியவர்களைப் பற்றி இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.
2015 தமிழ் சினிமாவில் அதிக பரபரப்பை ஏற்படுத்திய டாப் 10 நிகழ்வுகள் உங்களுக்காக.
த்ரிஷா - வருண்மணியன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழும் த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி 23 ம் தேதி நிகழ்ந்தது. தெலுங்கு நடிகர் ராணாவைக் காதலிக்கிறார் என்றும் அவருடனான உறவு முறிந்து விட்டது என்றும் செய்திகள் வெளியான நிலையில் அதனை உறுதிப் படுத்துவது போல தொழிலதிபர் வருண் மணியன் - த்ரிஷா நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது. இது நிகழ்ந்து 3 மாதங்களில் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. பிரிவிற்கான காரணம் குறித்து இருவரும் வாயைத் திறக்கவில்லை எனினும் இந்த பிரிவிற்கு பின் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக த்ரிஷா பேட்டி அளித்தார்.
இந்த வருடத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளில் த்ரிஷாவின் நிச்சயதார்த்ததிற்கு ஒரு முக்கிய இடமுண்டு. தற்போதைய நிலவரப்படி த்ரிஷா மீண்டும் ராணாவுடன் இணைந்து சுற்றுவதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.
நடிகர் சங்கத் தேர்தல்
இந்த வருடத்தின் மெகா பெரிய திரைப்படம் என்றால் அது நடிகர் சங்கத் தேர்தல் தான். சரத்குமார் - விஷால் இருவரும் தனித்தனி அணியில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர். கமல்ஹாசன், குஷ்பூ மற்றும் இளைய தலைமுறை நடிகர்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக அள்ளிய விஷால் இறுதியில் வெற்றிக்கனியை சுவைத்து மகிழ்ந்தார். என்னதான் விஷாலிற்கு ஆதரவு குவிந்தாலும் கடைசிவரை அவருக்கு சரத்குமார் டப் கொடுத்தது தனிக்கதை.மொத்தத்தில் காமெடி, ஆக்ஷன், பஞ்சாயத்து, செண்டிமெண்ட் எல்லாம் கலந்து கட்டியதில் இந்திய ஜனநாயகத் தேர்தலையே மிஞ்சியது இந்த நடிகர் சங்கத் தேர்தல்.
ரஞ்சித் - ரஜினி
அட்டக்கத்தி, மெட்ராஸ் என்று 2 படங்களை மட்டுமே எடுத்த இயக்குநர் ரஞ்சித்திற்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்து ஒட்டுமொத்த திரையுலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ரஜினி. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கபாலி என்று பெயர் வைத்த அன்றே பிரச்சினைகள் எழ இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது ரஜினியின் கபாலி. விஜய்யின் தெறி படத்திற்கும் இதே போல தலைப்புப் பிரச்சினைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
தொடர்ந்து 3 வது முறையாக காதலில் விழுந்தார் நயன்தாரா. இதை எழுதாத பத்திரிக்கைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சினிமா பகுதிகளின் தலைப்புச் செய்தியானார் நயன். போடா போடி படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இந்தப் படத்திற்காக அவர் சொந்தக்குரலில் டப்பிங்கும் பேசியிருந்தார். நயன்தாராவின் நடிப்பு படத்தைத் தூக்கி நிறுத்த இந்த வருடத்தின் வெற்றிப் படங்களில் நானும் ரவுடி தான் இடம் பிடித்தது. தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று வதந்திகள் எழுந்து வரும் நிலையில் இது எதைபற்றியும் கவலைப்படாமல் ஹாட்ரிக் நாயகி, தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.
விளம்பரத்தில் கமல்ஹாசன்
தனது 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தவொரு விளம்பரப் படத்திலும் நடிக்காத கமல்ஹாசன் முதல்முறையாக போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றினர். இந்த விளம்பரம் கடந்த தீபாவளி முதல் சின்னத் திரைகளில் வலம்வந்தது. இதற்காக 2 ஆண்டுகள் முயற்சி செய்து பெரும் தொகையை செலவு செய்து கமலை வளைத்துப் போட்டது போத்தீஸ். இது மகிழ்ச்சி என்றால் மழை, வெள்ளத்தில் மக்களின் வரிப்பணம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பி மற்றொருபுறம் சங்கடத்திலும் சிக்கிக்கொண்டார் உலகநாயகன்.
லட்சுமி ராமகிருஷ்ணன் vs விஜய் டிவி
லட்சுமி ராமகிருஷ்ணனின் புகழ் பெற்ற வசனமான என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா என்ற வசனத்தை வைத்து விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க கொதித்துப் போன லட்சுமி ராமகிருஷ்ணன் விஜய் டிவிக்கு தனது வக்கீல் மூலமாக நோட்டிஸ் அனுப்பினார். இந்த வழக்கில் விஜய் டிவி மீது மான நஷ்ட வழக்குப் போடுவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவித்தது தனிக்கதை.
சிவகார்த்திகேயன்
தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிவகார்த்திகேயனை மதுரை ஏர்போர்ட்டில் வைத்து கமல் ரசிகர்கள் தாக்க முயற்சித்தனர். இதைக் கேள்விப்பட்ட கமல் தனது ரசிகர்களுக்கு அறிக்கை அனுப்பி விளக்கம் கேட்டார். இந்த விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது பங்கிற்கு ஒரு விளக்கம் அளித்து தான் நன்றாக இருப்பதாக கூறினார். தற்போதைய நிலவரப்படி சிவகார்த்திகேயன், சுருதி ஹாசனுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது இதில் ஹைலைட்டான விஷயம்.
விஜய் - புலி
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புலி படத்தின் வெளியீட்டு தினத்திற்கு முதல்நாள் ஐடி துறையினர் விஜய் உள்ளிட்ட புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு நடத்தினர். இதனால் சற்றுத் தாமதமாகவே வெளியானது புலி. வழக்கம் போல விஜய் படங்களுக்கு பிரச்சினை வரும் என்பதை புலி படமும் நிரூபித்தது. பாகுபலியுடன் ஒப்பிடப்பட்ட இப்படம் ருத்ரமாதேவியை தள்ளி வைத்தும் கூட திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை. இதற்கிடையில் விஜய் மற்றும் புலி படத்தை கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ரசிகர்கள் புகார் கொடுக்க கொஞ்ச நாட்களுக்கு பரபரப்பிலேயே இருந்தது புலி விவகாரம்.
விஜயகாந்த் - சண்முகப் பாண்டியன்
கட்சி ஆரம்பித்து அதில் பிஸியாக இருந்த விஜயகாந்த் 5 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்தது கோலிவுட்டில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியங்களையும் ஏற்படுத்தியது. அறிமுக இயக்குநர் இயக்கும் தமிழன் என்று சொல் படத்தில் ராஜாவாக நடிக்கிறார் விஜயகாந்த். ஆரம்ப காலத்தில் விஜய், சூர்யாவை தனது நடிப்பின் மூலம் தூக்கி விட்டதால் அதே போல தனது மகன் சண்முகப் பாண்டியனையும் கொண்டுவர கேப்டன் தன் பாணியில் களமிறங்கியதாகவும் ஒரு பேச்சு அடிபட்டது. இதற்கிடையில் கேப்டனின் பிறந்த நாளில் தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் தேசிய அளவில் ட்ரெண்டை உருவாக்கி மகிழ்ந்தனர் அவரது ரசிகர்கள்.
பீப் பாடல்
இந்த வருடத்தின் கடைசி பரபரப்பாக வெளியாகி தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது பீப் பாடல். சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான இப்பாடலை தான் வெளியிடவில்லை என்று சிம்பு கூற, கனடா சென்ற அனிருத் அங்கேயே தஞ்சம் புக பட ட்விஸ்ட்களை மிஞ்சும் வகையில் இருக்கிறது இந்த விவகாரம்.
இந்தப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் 2 வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீனுக்கு தாக்கல் செய்திருக்கிறார் சிம்பு. தமிழக மழை, வெள்ளத்தை திசை திருப்பிய இந்த வழக்கில் கோவை போலீசுடன் இணைந்து சென்னை போலீசாரும் களத்தில் குதித்து இருப்பதால் அடுத்தடுத்த பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப் படுகிறது.