Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
துணை நடிகர் ரொனால்டு கொலை: நடிகை ஸ்ருதி சந்திரலேகா கைது
சென்னை: மதுரவாயலில் கடந்த மே மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சினிமா துணை நடிகர் ரொனால்டு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை ஸ்ருதி சந்திரலேகா 8 மாதங்களுக்கு பின்னர் போலீசில் சிக்கியுள்ளார்.
ஆபாச திரைப்படங்களில் நடிக்கக் கோரி சித்திரவதை செய்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாலேயே கொலை செய்துள்ளதாக நடிகை கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்ட் பீட்டர் பிரின்ஸ் (37). கணினி மையம் நடத்தி வந்த இவர், இணையதளம் மூலம் உணவுப் பொருள் விற்பனை செய்யும் தொழிலும், திரைப்படங்கள் தயாரிப்பதற்கு நிதியுதவியும் செய்து வந்தார். "காகிதபுரம்' என்ற படத்திலும் நடித்தாராம். அப்போது, துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுடன் ரொனால்ட் பீட்டருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே, இணையதளம் மூலம் ரொனால்ட் பீட்டருடன் சேர்ந்து தொழில் செய்து வந்த அவரது நண்பர் திருநெல்வேலியைச் சேர்ந்த உமாசந்திரன், ரொனால்ட் பீட்டரிடம் பணம் கேட்டாராம். ஆனால், அவர் பணம் கொடுக்கவில்லையாம். இந்நிலையில், ஸ்ருதி சந்திரலேகாவுக்கும் ரொனால்ட் பீட்டருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் கொலை
இதனால், ஸ்ருதியும், உமாசந்திரனும் சேர்ந்து ரொனால்ட் பீட்டரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.அதன்படி, ரொனால்ட் பீட்டரின் கார் ஓட்டுநர் ஜான் பிரின்சன் உதவியுடன் ரொனால்ட் பீட்டரை கடந்த ஜனவரி 18-ஆம் தேதி சென்னையில் வைத்து கொலை செய்துள்ளனர்.
பாளையங்கோட்டையில் சடலம்
பின்னர், காரில் அவரது உடலை திருநெல்வேலிக்கு கொண்டு வந்து பாளையங்கோட்டை ஆசீர்வாதபுரத்தில் புதைத்துள்ளனர். ரொனால்ட் பீட்டரை கொலை செய்ததை மறைக்கத் திட்டமிட்ட ஸ்ருதி சந்திரலேகா, அவரை காணவில்லை என மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஸ்ருதி தலைமறைவு
தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இப்படி நாடகமாடிய ஸ்ருதி பின்னர் தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில்தான் ரொனால்டு கொலை செய்யப்பட்டது வெளியில் தெரிய வந்தது.
மூவரும் உடந்தை
ரொனால்ட் பீட்டர் உடலைப் புதைக்க உமாசந்திரனின் நண்பர்களான பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரபீக் உஸ்மான், ஆனஸ்ட்ராஜ், விஜய் ஆகியோர் கணிசமான தொகையைப் பெற்றுக் கொண்டு உதவி செய்ததை கண்டு பிடித்த போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
பெங்களூருவில் வாழ்க்கை
இதனிடையே கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஸ்ருதி பெங்களூருக்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு விசாரணையை கோயம்பேட்டில் புதிதாக பொறுப்பேற்ற உதவி கமிஷனர் மோகன்ராஜ் முடுக்கி விட்டார்.
ஸ்ருதி கைது
மதுரவாயல் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் கடந்த 10 நாட்களாக பெங்களூரில் முகாமிட்டு ஸ்ருதியை தேடினர். இதன் விளைவாக ஸ்ருதி போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ருதி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆபாச படங்களில் நடிக்க
அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை பிரின்ஸ் ஆபாச திரைப்படங்களில் நடிக்கக் கோரி சித்திரவதை செய்ததாகவும், அடிக்கடி அடித்ததாகவும் தெரிவித்தாராம். மேலும் அவர் கொலை செய்ததையும் விளக்கமாக போலீசில் கூறியுள்ளார்.
கொலைக்கான பின்னணி
தொழிலில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பிரின்ஸிடம், உமா சந்திரன் கேட்டார். ஆனால் அவர் தரமுடியாது என்று மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
சினிமாவில் கவனம்
உமா சந்திரனின் தொடர்பை ரொனால்ட் துண்டித்தார். அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதன் பிறகு பிரின்ஸ் சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வந்தார். அப்போது எங்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கணவன்-மனைவியாக வாழத் தொடங்கினோம்.
வேறு பெண்களுடன் தொடர்பு
அப்போது, பிரின்ஸ் வேறு பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வேறு வழியில்லாமலேயே அவருடன் வாழத் தொடங்கினேன்.
கொலைக்கான திட்டம்
இதை அறிந்த உமா சந்திரன், ரொனால்டு என்னையும் ஏமாற்றி விட்டார். உன்னையும் ஏமாற்றி விட்டார். அவரை விட்டு வைக்கக் கூடாது என்று கூறினார். பின்னர் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினோம்.
விஷம் கொடுத்து கொலை
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 18-ஆம் தேதி ரொனால்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, பழரசத்தில் விஷம் கலந்து கொடுத்தோம். பழரசம் குடித்த சிறிது நேரத்தில் ரொனால்டு மயங்கி கீழே விழுந்து இறந்து விட்டார்.
பணம், நகைக் கொள்ளை
அங்கு மறைந்து இருந்த உமா சந்திரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் வந்தனர். அவர்கள் ரொனால்டு வைத்து இருந்த ரொக்கப்பணம் ரூ.75 லட்சம், கழுத்தில் அணிந்து இருந்த 14 பவுன் தங்க சங்கிலி, கையில் அணிந்து இருந்த வைர மோதிரம் ஆகியவற்றை எடுத்து கொண்டனர்.
உடல் புதைப்பு
பின்னர், ரொனால்டு உடலை காரில் ஏற்றி பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். காரில் உமா சந்திரன் கூட்டாளிகள் 2 பேர் வந்தனர். அவர்கள் ஏற்கனவே பாளையங்கோட்டையில் தன்னுடைய நண்பர்களுக்கு தகவல் கொடுத்து ஆசீர்வாத நகரில் குழி தோண்டி தயாராக வைத்திருந்தனர். அந்த குழியில் உடலை போட்டு புதைத்தனர் என்றார்.
கண்டு பிடித்தது எப்படி?
இது நடந்து சில நாட்கள் கழித்து ரொனால்டின் சகோதரர் ஜஸ்டீன் நெல்லையில் இருந்து சென்னைக்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தார். மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே சென்ற போது ரொனால்டின் கார் நின்று கொண்டு இருந்தது.
துப்பு துலங்கிய கொலை
அந்த காரில் நாகர்கோவிலைச் சேர்ந்த சுனில்குமார் என்பவர் இருந்தார். அவரிடம் இந்த கார் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று கேட்டார். அதற்கு அவர், உமா சந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பேசி ரூ.1 லட்சம் முன் பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன் என்று கூறினார்.
எழுந்த சந்தேகம்
ஏற்கனவே பிரின்சுக்கும், உமா சந்திரனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததை அறிந்த ஜஸ்டின் சந்தேகம் அடைந்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன் பிறகே இந்த வழக்கில் துப்பு துலங்கியது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதியிடம் விசாரணை
நடிகர் ரொனால்டிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.75 லட்சம் பணம், 14 பவுன் நகை ஆகியவை பற்றி நடிகை ஸ்ருதியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த பதில் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கஷ்டமான குடும்பம்
ரொனால்டிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது தந்தை ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். எங்களது குடும்பம் மிகவும் கஷ்டமான குடும்பம் என்று தெரிவித்துள்ளார்.
உமா சந்திரன் தலைமறைவு
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உமாசந்திரன் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார். அவர்தான் இந்த பணத்தை எங்காவது பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஸ்ருதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலீசார் தேடுதல் வேட்டை
உமாசந்திரனை கடைசியாக எங்கு வைத்து சந்தித்தீர்கள், அப்போது என்ன பேசிக் கொண்டீர்கள் என்பது பற்றியெல்லாம் ஸ்ருதியிடம் விசாரித்து ஏராளமான தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர். இதை வைத்து உமாசந்திரனை பிடிக்கவும், ரூ.75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.