Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சிவப்பு மல்லி முதல் தொண்டன் வரை...
திராவிட முன்னேற்ற கழகம் தங்களை வளர்த்துக் கொள்ள சினிமாவை பிரச்சார மேடையாக அறிவுப்பூர்வமாகப் பயன்படுதியது. எம்.ஜி.ஆர் அதிமுக தொடங்கும் வரை சினிமாவை அரசியல் பிரச்சாரத்திற்கு வேறு கட்சிகளால் புத்திசாலித்தனமாக பயன்படுத்த முடியாதவாறு திமுக தலைவர் கருணாநிதி ஆட்சி தலைமையில் இருந்ததால் தடுத்து வந்தார்.
இடதுசாரிகள் கூட்டு முயற்சியில் 'பாதை தெரியுது பார்' எனும் பெயரில் படம் தயாரிக்க விஐயா வாஹினியில் தொடக்க விழா நடத்தினார்கள். தொடர்ந்து அப்படம் தொடராமல் முடக்ங்கி போக திராவிட இயக்கமே காரணமாய் இருந்தது. அரசியலை விமர்சிக்கும் படங்கள் கருணாநிதி முதல்வராக பதவி வகித்தவரை தயாரிக்க முடியாதவாறு பார்த்துக் கொண்டார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு அரசியல் விமர்சனங்கள் நிரம்பிய படங்கள் கருணாநிதி கதை வசனத்தில் தயாரிக்கப்பட்டது தனி வரலாறு. அதே நேரம் தமிழகத்தில் இடதுசாரி சிந்தனை மேலோங்கியிருந்த 1980 காலகட்டத்தில் அதனை வியாபார நோக்கில் சினிமாவாக தயாரித்து வெளியான சிவப்பு மல்லி, சாதிக்கொரு நீதி படங்கள் வசூல் ரீதியாகமிகப் பெரும் வெற்றி பெற்றன. குடும்பப் படங்களை தயாரித்து வந்த சாதுவான ஏவிஎம் நிறுவனம் அனல் தெறிக்கும் அரசியல் படம் எடுத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அதற்குப் பின் அரசியலை கிண்டல், கேலி செய்து வசனங்கள் இடம்பெற்ற எண்ணற்ற திரைப்படங்கள் வெளிவந்திருகின்றன. ஆனால் குறிப்பிட்ட விஷயங்களை முன்வைத்து எடுக்கப்பட்ட படம் என்று அடையாள ப்படுத்தக்கூடிய அரசியல் சினிமாவாக எதையும் கூற முடியாது.
சினிமாவை சுயநல நோக்கமின்றி சமூகப் பார்வை, அதனை வியாபாரத்துடன் இணைத்து, சினிமா ரசிகனை தியேட்டருக்கு அழைத்து வரும் வித்தையில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி வெற்றி பெற்றிருக்கிறார் தொண்டன் படம் மூலம். இந்த பார்முலாவில் 1980 களில் வெற்றி பெற்றவர்கள் அமரர் ராமநாரயணன், மற்றும் எஸ்ஏ சந்திரசேகர்.
நடிகர், டப்பிங் கலைஞர், திரைக்கதை, வசனகர்த்தா, சீரியல் இயக்குநர், திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை மிக்கவரான சமுத்திரக்கனி இயல்பாகவே மாற்றத்துக்கான சிந்தனையைத் தூண்டுவதற்கான படைப்புகளிலேயே திரைப் பயணத்தைத் தொடர்ந்திருப்பதன் உச்சகட்டமாக தொண்டன் படத்தின் மூலம் வியாபாரம், வசூல் ரீதியாக வெற்றியடைந்திருக்கிறார்.
சமூகப் பார்வை கொண்ட எல்லா இயக்குநர்களுக்கும் இந்த வெற்றி கிடைத்ததில்லை என்றே கூறலாம். தன்னலம் கருதாது மக்கள் நலன் சார்ந்து பணியாற்றிய ராஜபாளையம் குமாரசாமி ராஜா (முன்னாள் தமிழக முதல்வர் ) பிறந்த ஊர்க்காரரான சமுத்திரக்கனி அதை தன் வயப்படுத்த கால் நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் போராடியிருக்கிறார். கமர்சியல் சினிமாக்களில் பயணித்தாலும் குறைந்த பட்ஜெட்டில் 2016ல் இவர் நடித்து இயக்கி வெளிவந்த 'அப்பா' படம் வசூலில் பெரும் சாதனை நிகழ்த்தியது. அதைக்காட்டிலும் கல்வி பற்றிய புதிய சிந்தனையை சமூகத்தில் உருவாக்கியது அப்பா. வியாபார ரீதியாக அப்பா தியேட்டர்களில் வெற்றி பெற்றாலும் அந்த படத்தை டிவிடியாக தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களும் சட்ட ரீதியாக வாங்கி பாதுகாக்க சமூக அக்கறையுடன் இவர் மெனக்கெட்டது எந்த தயாரிப்பாளரும் இதுவரை செய்யாத ஒன்று. அதன் தாக்கம் சமுத்திரகனி மீது சினிமா ரசிகனை நம்பிக்கை கொள்ள வைத்தது. தொண்டன் படத்தை வெற்றி காணச் செய்திருக்கிறது.
பிரம்மாண்டமான சினிமாக்கள் அசலை தேத்தவே போராடி கொண்டிருக்கின்றன. இன்றைய சினிமா வர்த்தகத்தில் குறைந்த பட்ஜெட், பிரபலமான முகங்கள் இல்லாமல், குத்து பாட்டு, ஹீரோயிச சண்டைக் காட்சிகள் இல்லாமல் வந்த படம் தொண்டன். குறிப்பிட்ட அரசியல் சாயம் இன்றி மாற்று அரசியல் வேண்டும், மக்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தும் அரசியல் படமாக தொண்டன் திரையில் விரிகிற போது சினிமா ரசிகன் மட்டுமல்ல, வெகுஜன தளத்திலும் தொண்டன் படத்துக்கு ஆதரவு அதிகரித்தது.
முதல் நாளில் இந்த படம் சுமார் 1.50 கோடியை 282 தியேட்டர்களில் வசூல் செய்தது. நான்கு நாட்களில் நான்கு கோடியைக் கடந்து 282 திரையரங்குகளில் தொடர்வது அரசியல், சமூக மாற்றங்களுக்கான பிரசாரத்தை முன்னிறுத்தும் படங்களை தமிழ் சினிமா ரசிகன் ஆதரிக்கத் தவறுவது இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
- ராமானுஜம்