Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அதிசயம்... பத்து ஆண்டுகள் தன் இயக்குநர்களுடன் இணக்கமாகப் பயணிக்கும் தயாரிப்பாளர்!
இன்றைக்கு ஒரு படம் முடிவதற்குள் அதன் தயாரிப்பாளரும் இயக்குநரும் இரு துருவங்களாக மாறி மோதிக் கொள்வதைப் பார்க்கிறோம்.
ஆனால் ஜே சதீஷ்குமார் கடந்த பத்து ஆண்டுகளாக தனது இயக்குநர்களுடன் இணக்கமாகவே பயணிக்கிறார். அதை நேற்று மேடையில் அரங்கேற்றிக் காட்டினார்.
ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'அண்டாவ காணோம்'. ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் வேல்மதி இயக்கியிருக்கிறார்.
விஜய் சேதுபதி ஒரு முக்கிய பங்காற்றி இருக்கும் இந்த படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அத்தோடு ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினர். இந்த பத்தாம் ஆண்டை கொண்டாடும் வகையில் தன் பேனரில் படம் செய்த இயக்குநர்கள் அனைவரையும் விழாவுக்கு வரவழைத்து மேடையில் ஏற்றி நினைவுப் பரிசு வழங்கினார்.
ஆர்கே சுரேஷ்
"என் சினிமா கேரியரில் தெரிந்தோ, தெரியாமலோ ஆரம்பத்தில் இருந்தே சதீஷ்குமாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். அவர் மாதிரி ஒரு படத்தை கொண்டு சேர்ப்பது என்பது யாராலும் முடியாது. தேசிய விருதுக்கு படங்களை அனுப்பி, அவற்றிற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருவது என்பது அவரால் மட்டும் தான் முடியும். அவரை பின்பற்றி தான் தர்மதுரை படத்துக்கு தேசிய விருது பெற்றோம். எதிர் அணியில் நான் இருந்தால் கூட என் நலனுக்காக யோசிப்பவர்தான் சதீஷ்குமார்," என்றார் ஆர்கே சுரேஷ்.
யுரேகா
"சென்னைக்கு சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படத்தை எடுத்தேன். அதை தணிக்கை குழுவில் கூட வரவேற்கவில்லை. அந்த நேரத்தில் மிகவும் தைரியமாக அந்த படத்தை வாங்கி வெளியிட்டார். பணத்துக்காக அந்த படத்தை வெளியிடவில்லை, நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் வெளியிட்டார். நல்ல சினிமா கொடுக்க தமிழ் சினிமாவில் அவர் போல சிலர் தான் இருக்கிறார்கள், அவர் தொடர்ந்து படம் தயாரித்துல் கொண்டே இருக்க வேண்டும்," என்றார் இயக்குநர் யுரேகா.
மனோபாலா
"ஸ்ரியா ரெட்டியை தமிழ் சினிமாவின் ஸ்மிதா படேல், ஷபனா ஆஸ்மி என சொல்லலாம். இந்த மாதிரி படங்களை தைரியத்தோடு எடுக்க சதீஷ்குமாரால் தான் முடியும். யார் அதிக இயக்குனர்களை அறிமுகப்படுத்துவது என்ற போட்டி அவருக்கும் எனக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனாலும் அதில் எனக்கு முன்னால் சென்று கொண்டேயிருக்கிறார் சதிஷ்," என்றார் மனோபாலா.
பாலகிருஷ்ணன்
"ஜேஎஸ்கே சாரின் கணிப்பு எப்போதும் தவறியதேயில்லை. கூட மேல கூட வச்சி பாடல் சென்சேஷனல் ஹிட் ஆகும் என அப்போதே சொன்னார். அது நடந்தது. சினிமா தெரிந்த ஒரு தயாரிப்பாளர்," என்றார் இயக்குநர் பாலகிருஷ்ணன்.
பாலாஜி தரணிதரன்
"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை நிறைய பேர் பார்த்தார்கள், நிறைய காட்சிகளை கட் செய்ய சொன்னார்கள். யாரும் படத்தை வாங்கவில்லை. படத்தை பார்த்த சதிஷ்குமார் சார் கட் எதுவும் செய்ய தேவையில்லை, அப்படியே ரிலீஸ் செய்யலாம்னு சொன்னார். அதோடு பொய்யாக 20 நிமிடம் கட் செய்து விட்டோம் என சொல்லிதான் படத்தை ரிலீஸ் செய்தார். அது சரியான விதத்தில் மக்களை சென்றடைந்தது. ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பது ஒரு இயக்குனருக்கு எவ்வளவு பெரிய வலியாக இருக்கும் என்பது இயக்குனர்களுக்கு மட்டுமே தெரியும்," என உணர்வுப் பூர்வமாக பேசி விட்டு போனார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.
ஸ்ரியா ரெட்டி
"9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம், இயக்குநர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. திமிரு அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு திமிரு பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார். நீங்க ஒண்ணும் தயாராக வேண்டாம், நேரா ஷூட்டிங்க்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார வழக்கை சொல்லி கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளிய வந்திருக்காது," என்றார் நாயகி ஸ்ரியா ரெட்டி.
இயக்குநர் ராம்
"எந்த ஒரு முன்னணி நடிகரின் கால்ஷீட்டை வைத்து படம் எடுக்காமல், கோடிகள் கொட்டி கொடுத்து படம் எடுக்காமல் 10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது பெரிய சாதனை. அந்த வகையில் ஜேஎஸ்கே மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். ஒரு படத்தை எடுத்து விட்டு ரிலீஸுக்கு காத்திருக்கும் இயக்குனர்களுக்கு அதன் தயாரிப்பாளரோடு முரண் நிச்சயம் இருக்கும். ஆனாலும் ஜேஎஸ்கே சதீஷ்குமாருடன் அந்த முரண் நிச்சயம் எங்களில் யாருக்குமே இருக்காது. என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக சொல்லி நம்மை சமாதானப்படுத்தி விடுவார். தரமணி படத்துக்கு 14 கட் கொடுத்து யு/ஏ சான்றிதழ் கொடுக்க முன் வந்தனர் தணிக்கை குழுவினர். ஆனால் கட் வாங்காமல் ஏ சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்தார் சதீஷ். அவரை போல ஒரு தயாரிப்பாளரை பார்க்க முடியாது. அண்டாவுக்கு பல உள் அர்த்தங்கள் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்," என்றார் இயக்குனர் ராம்.
ஜேஎஸ்கே
"இயக்குநர் வேல்மதி ஒரு கிராமத்தில் இருக்கும் 300 பேரை நடிக்க வைத்து எடுக்கப் போகிறேன் என சொன்னார். அந்த கிராமத்தில் இருந்த அத்தனை பேருக்கும் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார் இயக்குனர். இந்த மாதிரி ஒரு கதை என்று சொன்னவுடன் முதலில் நாங்கள் நடிக்க கேட்டுப் போனது ஸ்ரியா ரெட்டியை தான். என் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு நிச்சயம் தேசிய விருது பட்டியலில் இந்த அண்டாவ காணோம் இடம் பிடிக்கும். இயக்குனர் ராமின் தரமணி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும். தலயோட நாங்களும் கெத்தா வரோம்," எனப் பேசினார் தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார்.
இயக்குநர்கள் கூட்டம்
இயக்குநர்கள் செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கார்த்திக் ரிஷி, ரஞ்சித் ஜெயக்கொடி, நடிகர் வெங்கட் சுபா, ஜாஸ் சினிமாஸ் கண்ணன், தயாரிப்பாளர் லியோ விஷன் ராஜ்குமார், ஆல்பர்ட், நடிகர் இளையராஜா, வினோத், நடிகை நவீனா, இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, பாடலசிரியர் மதுரகவி, இயக்குநர் வேல்மதி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார்.