Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எஸ்.எஸ்.ஆர்.. ‘சிவகங்கை சீமை’, 'பூம்புகாரை' மறக்க முடியுமா?
இன்றைக்கு ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பட்டம் கொடுக்கப்படுகிறது. அன்றைய கால கட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வரிசையில் லட்சிய நடிகர் என்று பட்டம் சூட்டப் பெற்றவர் எஸ்.எஸ். ராஜேந்திரன். அந்த பட்டத்திற்கு ஏற்ப தனது கொள்கைகளிலும், லட்சியத்திலும் மாறாமல் திகழ்ந்தவர் எஸ்.எஸ்.ஆர்.
சேடபட்டி சூரியநாராயண (தேவர்) ராஜேந்திரன் என்பதன் சுருக்கம்தான் எஸ்.எஸ்.ஆர். 1928ல் பிறந்தவர். 6ம் வகுப்பு படிக்கும்போதே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
நாடகக் காவலர்களான டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் கம்பெனியில் நல்லநல்ல வேடங்களில் எஸ்.எஸ்.ஆர் நடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு திராவிடர் இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. திராவிட இயக்கத்துக்கு ஓர் இலட்சிய நடிகர் கிடைத்தார்.
அண்ணா, கலைஞர், கவிஞர் கண்ணதாசன் போன்ற ஜாம்பவான்களின் வசனங்களை மிகத் தெளிவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் உச்சரிக்கக்கூடியவர் எஸ்.எஸ்.ஆர். இனிமையும் அழகும் கலந்த கம்பீரமான உச்சரிப்பு அவரிடமிருந்து வெளிப்படும்.
பின்னணி பாடகர்
எஸ்.எஸ்.ஆர். திரைப்பட முயற்சிகளைத் தொடர்ந்தார். அபிமன்யு படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு நழுவிப்போக, ஆண்டாள் என்ற படத்தில் ஜி.ராமநாதன் இசையில், ‘இன்ப உலகிலே மன்மதன் பூங்கணை' என்ற பாடலைப் பின்னணிப் பாடகராகப் பாடினார் எஸ்.எஸ்.ஆர்.
பராசக்தி, மனோகரா
1952ல் பராசக்தியில் சிவாஜியின் மூத்த சகோதரர்களில் ஒருவரான ஞானசேகரன் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கருணாநிதியில் வசனத்தில் உருவான மனோகரா படத்திலும் எஸ்.எஸ்.ஆர் நடித்தார்.
திருவாரூர் தங்கராசுவின் கதை வசனத்தில் எம்.ஆர்.ராதா நடித்த‘ரத்தக் கண்ணீர்' படத்தில் எஸ்.எஸ்.ஆருக்கு முக்கிய பாத்திரம் கிடைத்தது.
அண்ணாவின் வசனத்தில்
அறிஞர் அண்ணாவின் ‘சொர்க்கவாசல்' படத்திலும் நடித்தார். அண்ணா கதை, கலைஞரின் வசனம், சிவாஜி கதாநாயகன் என்ற பலமான கூட்டணியுடன் வெளிவந்த ‘ரங்கோன் ராதா' படத்திலும் எஸ்.எஸ்.ஆர் நடித்தார்.
கருணாநிதியின் வசனத்தில்
‘பா' வரிசைப் படங்களைத் தந்த பீம்சிங்கின் முதல் படமான ‘அம்மையப்பன்' படத்தில் கருணாநிதியின் வசனத்தில் எஸ்.எஸ்.ஆர் நடித்தார். அடுத்து வந்த ‘ராஜா ராணி' படத்திலும் கருணாநிதியின் வசனத்தில் சிவாஜியுடன் நடித்தார்.
சிவாஜி, எம்.ஜி.ஆருடன்
ஆலயமணி, தெய்வப்பிறவி, பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம், பழனி, சாந்தி எனப் பல படங்களில் சிவாஜியுடன் சேர்ந்த நடித்த எஸ்.எஸ்.ஆர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் காஞ்சித்தலைவன், ராஜா தேசிங்கு போன்ற படங்களில் நடித்தார்.
கை கொடுத்த முதலாளி
எனினும், 1958ல் வெளியான ‘முதலாளி' படத்தின் வெற்றிதான் எஸ்.எஸ்.ஆரை தமிழ்த்திரையுலகின் கதாநாயகர்கள் வரிசையில் நிலைநிறுத்தியது. இது முக்தா சீனிவாசன் இயக்கிய முதல் படம். இதில்தான் நடிகை தேவிகா அறிமுகமானார்.
எஸ்.எஸ்.ஆருக்கு குமுதம், தைபிறந்தால் வழிபிறக்கும், சாரதா உள்ளிட்ட வெற்றிப்படங்கள் தொடர்ந்தன.
பூம்புகாரில் கோவலன்
எஸ்.எஸ்.ஆரின் திரைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படங்களில் முக்கியமானது, ‘பூம்புகார்'. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான- இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை திரைவடிவமாக்கியிருந்தார் மு.கருணாநிதி.
நிஜவாழ்வில் இணைந்த ஜோடி
அதில் கோவலனாக எஸ்.எஸ்.ஆரும், கண்ணகியாக விஜயகுமாரியும் நடித்தனர். நிஜவாழ்விலும் இவர்கள் இணையாயினர்
மருது சகோதரர்கள்
வெள்ளையரை எதிர்த்து போர் செய்து வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் வாழ்க்கையை ‘சிவகங்கை சீமை' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார் கவிஞர் கண்ணதாசன். அந்தப் படத்தில் எஸ்.எஸ்.ஆர்தான் நாயகன்.
சினிமாவில் அரசியல்
எஸ்.எஸ்.ராஜேந்திரன் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது சொந்தமாக திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்தார். அதற்காக "எஸ்.எஸ்.ஆர். பிக்சர்ஸ்'' என்ற படக்கம்பெனியை தொடங்கினார். அந்த படக்கம்பெனி மூலம் "தங்கரத்தினம்'' என்ற படத்தை எஸ்.எஸ்.ஆர். எடுத்தார். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் அவரே டைரக்ட் செய்தார். இந்தப் படத்தில்தான், முதன் முதலில் தி.மு.க கொடி காண்பிக்கப்பட்டது.
லட்சிய நடிகர்
பெரியாரின் சீடராக திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, தி.மு.க உறுப்பினராக செயல்பட்ட எஸ்.எஸ்.ஆர் தனது நடிப்பிலும் அதனை பிரதிபலித்தார். புராண படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். திரையில் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பேசினார். அதற்கேற்ப காட்சிகளை அமைத்தார். கட்சி நிதிக்காக நாடகங்களை நடத்தினார். திரைப்படங்கள் மூலமும் நிதியுதவி அளித்தார். அதனால்தான் அவரை இலட்சிய நடிகர் என்று அழைக்கின்றனர்.
கோவிலுக்கு செல்லாத எஸ்.எஸ்.ஆர்
எஸ்.எஸ்.ஆர் 8 வயதில் இருந்தே கோவிலுக்கு செல்வது இல்லையாம். பெரியாரின் கொள்கையில் ஈடுபாடு இருந்ததால், புராணப்படங்களில் நடிக்கவில்லை. புராண நாடகத்தில் மட்டும் நடித்து இருக்கிறார்.
பரதனாக நடிக்க
சம்பூர்ண ராமாயணம் படத்தில், பரதனாக நடிக்க முதலில் எஸ்.எஸ்.ஆரைத்தான் அழைத்தார்கள். பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட காரணங்களினால், புராணப் படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அதேபோல அவருடைய கொள்கைக்கு முரணான எந்தப் படத்திலும் அவர் நடித்தது இல்லையாம். இதனால்தான் 'லட்சிய நடிகர்' என்று அவருக்குப் பெயர் வந்தது. பெரியாரும், அண்ணாவும் மேடைகளில் பேசும்போது 'லட்சிய நடிகர்' என்றுதான் எஸ்.எஸ்.ஆரை குறிப்பிடுவார்கள்.