உலகெங்கும் 521 திரையரங்குகளில் லிங்கா ஓடுகிறது! - இது இன்றைய விளம்பரம்!!
சென்னை: ரஜினியின் லிங்கா திரைப்படம் உலகெங்கும் இன்னும் 521 அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக இன்று விளம்பரம் வெளியாகியுள்ளது.
லிங்கா படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் 3000-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது.
தமிழகத்தில் மட்டும் 650 அரங்குகளுக்கும் மேல் வெளியானது. முதல் மூன்று நாட்களில் ரூ 104.6 கோடியைக் குவித்து சாதனையைப் படைத்த லிங்கா, இதுவரை ரூ 180 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ 73 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படி ஒருபக்கம் தகவல்கள் வந்தாலும், படம் வெளியான நான்காவது நாளே லிங்காவால் நஷ்டம் என்று ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது. குறிப்பாக திருச்சி - தஞ்சை மாவட்ட விநியோகஸ்தர் என்று கூறிக் கொண்ட சிங்கார வேலன் என்பவர் இதனை ஒரு பிரச்சாரமாகவே முன்னெடுத்தார்.
'லிங்கா நஷ்டம். படம் சரியில்லை. கர்நாடகத் தயாரிப்பாளருக்கு ஏன் படம் செய்தார் ரஜினி? ரஜினிக்கு வயதாகிவிட்டது. ரஜினி ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை...' இந்த ரீதியில் அமைந்தது அவரது பிரச்சாரம். இது படத்துக்கு நஷ்ட ஈடு கேட்பது போல இல்லையே என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. நேற்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் இந்தக் கேள்வியே பிரதானமாகக் கேட்கப்பட்டது.
லிங்கா படத்தின் நஷ்ட ஈட்டைக் கேட்பதாகக் கூறும் நீங்கள், தமிழ்நாடு - கர்நாடகா என இன ரீதியாகப் பிரச்சினை கிளப்புவது ஏன் என்ற கேள்விக்கு அவரிடம் சரியான பதில் இல்லை. மேலும் தங்களின் உண்ணாவிரதத்துக்கு தமிழ் அமைப்புகள் சிலவற்றின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமா வியாபாரத்தின் லாப நஷ்டத்தில் தமிழ் அமைப்புகளுக்கு என்ன வேலை? படத்தை வாங்கியபோது தெரியாதா, தயாரிப்பாளர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பது? முதல் மூன்று நாட்களில் ரூ 1000, 500 என டிக்கெட் போட்டு சிறப்புக் காட்சிகளில் வசூலித்த தொகையெல்லாம் எங்கே?
-இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த உண்ணாவிரத குழு நேற்று எந்த தெளிவான பதிலையும் சொல்லவில்லை. மழுப்பலாக சொல்லி வைத்தார்கள்.
இந்த நிலையில்தான், இன்று படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். லிங்கா வெளியாகி 30 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் 521 அரங்குகளில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
படம் நஷ்டம் என்று கூறப்படும் திருச்சி - தஞ்சையில் இன்றும் 12 அரங்குகளில் லிங்கா ஓடுகிறது. இந்தப் பகுதியில் ஒரு புதிய படம் வெளியானால் கூட இத்தனை அரங்குகளில் ஓட்ட முடியாது.
கோவை - ஈரோடு - திருப்பூர் பகுதிகளில் இன்றும் 35 அரங்குகளில் லிங்கா ஓடிக் கொண்டுள்ளது. மக்களே வராத ஒரு படத்தை இத்தனை அரங்குகளில் ஓட்ட முடியுமா... சிங்கார வேலன்களுக்கே வெளிச்சம்!


Click it and Unblock the Notifications











