ரஜினிக்குப் பிறகு நூற்றாண்டு சிறப்பு விருது பெற்ற இளையராஜா!
கோவா: இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசின் சிறப்பு விருது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி கவுரவித்தார் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி.

கோவாவில் நேற்று சர்வதேச திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் இந்திய திரை இசையுலகில் பெரும் சாதனைப் படைத்துள்ள இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அருண் ஜேட்லி மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினார்கள். இந்த விழாவில் பேசிய இளையராஜா, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சிறந்த இசைக்காக நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ள இளையராஜாவுக்கு, மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியுள்ளது. அவருக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும் என ரசிகர்களும் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











