தமிழ் சினிமாவின் 'கதை மன்னன்' பி கலைமணி மரணம்!

கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகங்கள் கொண்டவர் கலைமணி.
பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்துக்கு இவர்தான் வசனகர்த்தா. மண்வாசனையும் இவருடைய வசனத்தில் உருவானதுதான்.
கோபுரங்கள் சாய்வதில்லை, முதல்வசந்தம், பிள்ளை நிலா, சிறைப் பறவை, எம்புருசந்தான் எனக்கு மட்டும்தான், மனைவி சொல்லே மந்திரம், இங்கேயும் ஒரு கங்கை, மல்லுவேட்டி மைனர் என இவர் கதை, வசனம், தயாரிப்பில் வந்த சூப்பர் ஹிட் படங்கள் எக்கச்சக்கம்.
விஜயகாந்துக்கு ஒரு பேமிலி இமேஜை உருவாக்கித் தந்த பெருமை கலைமணியைச் சேரும். அதேபோல மனோபாலாவுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளைத் தந்தவர் கலைமணி.
எண்பதுகளில் கலைமணி, மணிவண்ணன், இளையராஜா, மனோபாலா கூட்டணி தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்தது தமிழ் சினிமாவில். இவரது வசனங்களில் பல இயக்குநர்கள், கதாநாயகர்களுக்கு ஒரு மயக்கமே உண்டு. அத்தனை அழகான வசனங்களை எழுதியவர்.
எவரெஸ்ட் பிலிம்ஸ் பேனரில் ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார் கலைமணி.
தெற்கத்திக் கள்ளன், பொறுத்தது போதும் மற்றும் மனிதஜாதி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருதையும், சிறந்த கதை வசனகர்த்தாவுக்கான மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார் கலைமணி.
குடல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கலைமணி, சவுத் போக் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். வாரிசு இல்லை.
அவரது உடல் இன்று மாலை கண்ணம்மா பேட்டையில் தகனம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications