முத்து படத்திலிருந்தே நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன்! - மலாக்கா கவர்னர்
மலாக்கா: முத்து படம் பார்த்ததிலிருந்தே நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்று மலாக்கா கவர்னர் முகமது கலீல் யாகூப் தெரிவித்தார்.
கபாலி' படத்தின் படப்பிடிப்புக்காக நேற்று அதிகாலை மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்றடைந்தார் ரஜினி.

ரஜினியின் வருகையையொட்டி கோலாம்பூர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, விலையுயர்ந்த சொகுசு காரில் பயணம் செய்த ரஜினி, அங்கிருந்து நேராக மலாக்கா சென்றடைந்தார். மலாக்காவிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மலாக்கா கவர்னர் முகமது கலீலைச் சந்தித்த ரஜினி, அவருடன் சிறப்பு விருந்திலும் கலந்துகொண்டார். இந்த விருந்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் கலந்துக்கொண்டார்.
விருந்துக்குப் பிறகு மலாக்கா கவர்னர் கூறுகையில், "ரஜினியை நான் முதன் முதலில் விமானத்தில் சந்தித்தேன். அதன் பிறகு இப்போதுதான் நெருக்கமாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
முத்து படம் பார்த்ததிலிருந்தே நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரை இன்று சந்தித்ததும் விருந்தளித்ததும் எனக்கு மகிழ்ச்சியான தருணம்," என்றார்.
இதையடுத்து, மலேசியா பிரதமரை ரஜினி சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாரம் அச் சந்திப்பு நடக்கும் எனத் தெரிகிறது.

இன்று முதல் மலாக்காவில் ‘கபாலி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. தொடர்ந்து நவம்பர் 2-ந் தேதி வரை மலாக்காவிலேயே படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். அதைத்தொடர்ந்து, மலேசியாவின் இரட்டை கோபுரம் உள்ளிட்ட முக்கியமான இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.
கபாலி படத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











