எஸ்.எஸ்.ஆரின் முதல் தமிழ்ப்படம்... பராசக்தி இல்லை !
சென்னை: லட்சிய நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். அறிமுகமான படம் பராசக்தி தான் எனப் பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை, பராசக்திக்கு முன்பே பைத்தியக்காரன் என்ற படத்தின் மூலம் தான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கியவர் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப் படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் பழம் பெரும் நடிகராக மட்டுமின்றி, நீண்ட அரசியல் வரலாறு கொண்ட அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர்.
சமீபகாலமாக உடல்நலக் கோளாறால் அவதிப் பட்டு வந்த எஸ்.எஸ்.ஆர். இன்று காலமானார். அவருக்கு வயது 86.
இந்நிலையில், எஸ்.எஸ்.ஆரின் திரையுலகப் பிரவேசம் குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாத தகவல் ஒன்று இருக்கிறது.

கலைஞரின் பராசக்தி...
திமுக தலைவர் கருணாநிதியின் கதைம் வசனம் எழுதிய பராசக்தி படத்தின் மூலமாக கடந்த 1952ம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிவாஜியுடன் சேர்ந்து அறிமுகமானவர் எஸ்.எஸ்.ஆர். எனக் கூறப்படுவதுண்டு.

சிவாஜின் அண்ணனாக...
அப்படத்தில் சிவாஜியின் அண்ணனாக, ஏழை மக்களின் வாழ்க்கைக்கு குரல் கொடுக்கும் தலைவனாக நடித்திருந்தார் எஸ்.எஸ்.ஆர்.

பைத்தியக்காரன் படம்...
ஆனால், பராசக்தி படம் வெளியாவதற்கு முன்னரே கடந்த 1947ம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். அப்படத்தின் பெயர் பைத்தியக்காரன்.

எம்.ஜி.ஆர். நடித்த படம்...
எம்.ஜி.ஆர். ஒரு சில காட்சிகளில் தோன்றி நடித்த அத்திரைப்படத்தில் எஸ்.எஸ்.ஆரும் ஒரு சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

5 வருட இடைவெளி...
இப்படத்திற்குப் பிறகு நடிக்க பட வாய்ப்புகள் கிடைக்காததால்,கிட்டத்தட்ட 5 வருட இடைவெளிக்குப் பின்னர் தான் மீண்டும் பராசக்தி படம் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகராக அறிமுகமாகியுள்ளார் எஸ்.எஸ்.ஆர்.


Click it and Unblock the Notifications











