தமிழ் சினிமாவைப் பிடித்தாட்டும் பார்ட் 2 மோகம்
சென்னை: பேய்களிடம் இருந்து தப்பித்து பார்ட் 2 மோகத்தில் தற்போது மாட்டிக் கொண்டுள்ளது தமிழ் சினிமா. ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் அடுத்த பாகங்களை எடுக்கும் பழக்கம் ஹாலிவுட்காரர்களிடம் அதிகம் உண்டு.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இந்தியில் இது போன்ற முயற்சிகள் சற்று அதிகம் உண்டு, ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்களை எடுக்கும் வேகத்தைப் பார்த்தால் தமிழில் வெற்றி பெற்ற அனைத்து படங்களின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து விட்டுத் தான் ஓய்வார்கள் போல.
அத்தி பூத்தார் போன்று அவ்வப்போது ஒன்றிரண்டு படங்கள் இரண்டாம் பாகமாக எடுத்து வந்த நிலையில், ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தின் கவனமுமே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தற்போது குதித்து இருக்கிறது.

இதுவரை வெளிவந்த இரண்டாம் பாகங்கள்
நான் அவன் இல்லை, சிங்கம், பில்லா, அமைதிப்படை, காஞ்சனா போன்ற படங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகங்களாக எடுக்கப் பட்டு உள்ளன.

வரவிருக்கும் படங்கள்
விஸ்வரூபம், வேலை இல்லாப் பட்டதாரி, சண்டக் கோழி, கோ, என் ராசாவின் மனசிலே, ஜித்தன், மணல் கயிறு, அமரன், எந்திரன், மங்காத்தா, பருத்திவீரன், இந்தியன் போன்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன கோடம்பாக்கத்தில்.

இரண்டாம் பாகத்திலும் பேய்களின் ஆதிக்கம்
பேய்களின் பிடியில் இருந்து இப்பொழுது தான் தமிழ் சினிமா மீண்டிருக்கிறது என்று நினைப்பவர்கள் அந்த நினைப்பை அழித்து விடுங்கள் ஏனெனில், இரண்டாம் பாகத்திலும் பேய்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. யாமிருக்க பயமே, அரண்மனை மற்றும் டார்லிங் போன்ற படங்களின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்க வருகின்றன பேய்கள்.

புதிய படங்களுக்கு போட்டியாக பழைய படங்கள்
புதிய படங்களுக்குப் போட்டியாக சிறு வயதில் நாம் தூர்தர்சனில் பார்த்து ரசித்த அமரன் , என் ராசாவின் மனசிலே மற்றும் மணல் கயிறு போன்ற படங்களும் இரண்டாம் பாகமாக எடுக்கப் படவிருக்கின்றன.

லிங்குசாமியின் பார்ட் 2 மோகம்
தமிழ் சினிமாவில் குறிப்பிடத் தகுந்த இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமியையும் இந்த மோகம் விட்டு வைக்கவில்லை போல சண்டக்கோழி, பையா போன்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க விருக்கிறார்.

அதுக்கும் மேல
ஐ படத்தில் விக்ரம் சொல்வாரே அதுக்கும் மேல என்று அதே போல தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களைத் தொடர்ந்து படங்களின் மூன்றாம் பாகங்களையும் எடுத்து வருகிறார்கள். காஞ்சனா 3 படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் நடிப்பில் சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications











