டூரிங் டாக்கீஸ்... முதல் முறையாக ஒரு பெரும் சமூகக் கொடுமையை அம்பலமாக்கும் படம்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பாலியல் வன் கொடுமைக்கு ஆளான பெண்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகிறது. இவர்களில் சரி பாதி, சிறுமிகள், குழந்தைகள் என்பதுதான் மிகப் பெரிய அதிர்ச்சிக்குரிய விஷயம்.
கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத இந்தக் கொடூரத்தை முதல் முறையாக திரைப்படமாக எடுத்திருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். அதுதான் நேற்று வெளியான டூரிங் டாக்கீஸ்.

தன் கடைசி படம் என்று அறிவித்துவிட்டு, அதை இன்றைய சமூகத்துக்கு தேவையான அழுத்தமான செய்தியோடு தந்திருப்பதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
டூரிங் டாக்கீஸ் படத்தில் இரு கதைகள். இரண்டும் வெவ்வேறு கதைகள். முதல் கதையை காதல் 75 என்ற தலைப்பில் படமாக்கியுள்ளார். இது 75 வயதான ஒரு முதியவரின் காதல். சுவாரஸ்யமாகவே அதை முடித்திருக்கிறார் இயக்குநர் சந்திரசேகரன்.
இரண்டாவது கதைக்குப் பெயர் செல்வி 5-ம் வகுப்பு.
இந்தக் கதைதான் சமூகத்தில் நிலவும் அந்த மாபாதகச் செயலை படம் பிடித்துக் காட்டுகிறது.
தமிழகத்தின் ஒரு பகுதியில் இன்றும் நிலவும் கொடூரமான சாதிக் கொடுமையை, சாதீய திமிரால், அப்பாவி மக்கள் சிதைக்கப்படுவதை மிகையின்றிச் சித்தரித்திருக்கிறார் இந்தப் படத்தில். அதற்கு பெரிதும் துணை நின்றிருக்கிறது இளையராஜாவின் இசை.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை படமாக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள் திரையுலகினர்.
"எனக்கு இந்த விஷயத்தைச் சொல்ல எந்தத் தயக்கமும் பயமும் இருக்கவில்லை. இப்படி ஒரு கொடுமை நடக்கிறதே என்று கண்ணை மூடிக் கொண்டு செல்ல முடியாது. என் கடைசி படம், சமூகத்தின் கண்ணைத் திறக்க உதவ வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் படம் தந்தேன். இன்று அதற்கான பலன் கிடைத்திருக்கிறது," என்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன்.


Click it and Unblock the Notifications











