உள்ளம் உள்ளவரை... கோடம்பாக்கத்தில் தொடரும் பேயாட்சி!
கோடம்பாக்கத்தில் தொடர்ந்து பேய்ப் படங்கள் தயாரிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர் தயாரிப்பாளர்கள். காஞ்சனா 2-ன் வெற்றி அவர்களுக்கு பேய் மீது தனி காதலையே உண்டாக்கிவிட்டிருக்கிறது.
அந்த பேய்ப்பட வரிசையில் விரைவில் வரவிருக்கும் படம் உள்ளம் உள்ளவரை.

இந்தப் படத்தை இந்துஜா பிலிம்ஸ் சார்பில் நாமக்கல் கே.சண்முகம் தயாரிக்கிறார்.
இப்படத்தை விஷ்ணு ஹாசன் இயக்குகிறார். இவர், ஜெயராம் நடித்த ‘புது நிலவு' படத்தை இயக்கியவர். ஹீரோவாக தெலுங்குப் பட நாயகன் சங்கர் நடிக்கிறார். மீனு கார்த்திகா, ப்ரீத்தி, அங்கனா ராய் மற்றும் காம்னா சிங் என நான்கு பேர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் கஞ்சா கருப்பு, மதன் பாப், மீரா கிருஷ்ணன், சித்ரா லெட்சுமணன், பரவை முனியம்மா, நந்தகுமார் ஆகியோர் நடிக்க, கராத்தே சிவவாஞ்சி, நியாமத்கான் மற்றும் தயாரிப்பாளர் நாமக்கல் கே.சண்முகம், அஸ்வின்குமார் ஆகிய நான்கு பேரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

பி.கே.எச்.தாஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, சதிஷ் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். அநியாயமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி, இன்னொரு பெண்ணின் உடம்புக்குள் புகுந்து கொண்டு தன்னை கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 3 பேர்களை பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படம், 'உள்ளம் உள்ளவரை'.
சென்னை, பொள்ளாச்சி, ராசிபுரம், பெங்களூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications











