விபத்தில் இறந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்
சென்னை: தனது படத்தின் போஸ்டரை ஒட்ட வெளியே சென்றபோது, விபத்தில் பலியான ரசிகர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் இன்று காலை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் புலி. இப்படம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி வெளியானது.

புலி வெளியான அன்று விஜய்யின் ரசிகர்களான சவுந்திர ராஜன் மற்றும் உதயகுமார் இருவரும் ‘புலி' படத்தின் வாழ்த்து போஸ்டர் ஒட்ட சென்ற போது விபத்தில் சிக்கி பலியாகினர்.

இச்சம்பத்தை அறிந்த விஜய் இன்று காலை ஆறுமணியளவில் சவுந்தர்ராஜன் மற்றும் உதயகுமார் இருவரின் வீடுகளுக்கும் நேரில் சென்று பெற்றோரிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.
உயிரிழந்த ரசிகனின் அம்மாவை கட்டியணைத்து அழுத விஜய் நடந்த சம்பவத்தை நினைத்து வருந்த வேண்டாம் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

மேலும், அவர்களது குடும்பத்தினரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கும்படியும், நான் உங்களுக்கு உதவ கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த செயல், அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் வந்த தகவலை அறிந்ததும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு பெருந்திரளாக கூடி விட்டனர். இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
கத்தி பட வெளியீட்டின் போதும் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











