twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆயிரம் படங்கள் கண்ட இளையராஜாவின் பிறந்த நாள் இன்று!

    By Shankar
    |

    சென்னை: ஜூன் மாதம் பிறந்தாலே இசை ரசிகர்கள் பரவசமாகிவிடுவார்கள். குறிப்பாக இசைஞானி இளையராஜா ரசிகர்கள். காரணம் ஜூன் 2-ம் தேதிதான் அவரது பிறந்த நாள்.

    இந்த ஆண்டு அவருக்கு 73வது பிறந்த நாள்!

    பல முறை சொன்னதுதான். உண்மையில் அவரது பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி. ஆனால் திமுக தலைவர் கருணாநிதிக்கும் அதே தேதியில் பிறந்த நாள். அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, ஒரு நாள் முன்பாகவே தன் பிறந்த நாளைக் கொண்டாடி, கருணாநிதியின் பிறந்த நாள் முக்கியத்துவத்தை காப்பாற்றி வருகிறார் ராஜா.

    Ilaiyaraaja celebrates 73rd birthday today

    1976-ல் தன் இசைப் பயணத்தை அன்னக்கிளியில் தொடங்கினார் ராஜா. சரியாக 40 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறார் இந்த ஆண்டோடு. திரையிசைத் துறையில் ஒரு இசையமைப்பாளர் 40 ஆண்டுகளைக் கடப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். கேவி மகாதேவன், எம்எஸ்வி என நிறையப் பேர் நான்கைந்து தலைமுறைகளைக் கடந்தும் இருந்திருக்கிறார்கள்.

    ஆனால் இளையராஜாவின் சிறப்பு, இந்த நாற்பது ஆண்டுகளும் திரைத் துறையில் பிஸியாகவே இருப்பதுதான். இன்றும் அவர் கைவசம் 30 படங்கள்... ஆம் 30 படங்கள் உள்ளன. கமல் ஹாஸன் உள்ளிட்ட டாப் நட்சத்திரங்களின் படங்களும் இவற்றில் அடங்கும்.

    ஒரு படத்தின் இசை இளையராஜா என்று விளம்பரம் வந்தாலே இன்றும் அந்தப் படத்தின் மீதான மதிப்பு பல மடங்கு அதிகரிப்பதை திரையுலகினர் உணர்ந்திருக்கிறார்கள். அதுதான் ராஜாவின் ஸ்பெஷல்.

    இளையராஜாவின் இசை எல்லைகள் அற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மொழிகளைத் தாண்டியது. மேற்கத்திய இசை விற்பன்னர்கள் பலரையும் வியக்க வைத்துக் கொண்டிருப்பது. ஆனால் தன் இசையை சர்வதேச அளவில் 'பிரான்டிங்' செய்யவோ, முகவர்கள் வைத்து விருதுகளுக்குக் கொண்டு செல்லவோ இளையராஜா முயற்சிக்கவே இல்லை. ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் பல மேடைகளில், பேட்டிகளில் சொன்ன உண்மை இது.

    ஆயிரம் படங்களைத் தாண்டியும் இன்னும் அதே உற்சாகம், ஆற்றலுடன் தனது வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இளையராஜா, 5 முறை தேசிய விருதை வென்றிருக்கிறார். இந்திய சினிமாவின் பெருமைக்குரிய அனைத்து விருதுகளையுமே அவர் பெற்றிருக்கிறார்.

    திரை இசையை ஒரு தொழிலாக மட்டும் இளையராஜா செய்யவில்லை. அந்த திரையிசையை பெருமைக்குரிய இசையாக மாற்றியவரே அவர்தான். சினிமா பாடல் கேட்பதை, சினிமா பாடல் ஒலிப்பதை இரண்டாம் தரமாகக் கருதிய ஒரு சமூகத்துக்குள், அதை பெருமைக்குரிய இசையாக மாற்றியவர் ராஜா என்றால் மிகையல்ல.

    அந்த ராஜாவுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத் ரத்னா விருது வழங்குவது மட்டுமே உண்மையான கவுரவம் என்பது ரசிகர்கள், இசை விமர்சகர்கள், திரையுலகினர் என பலரது கருத்தும் எதிர்ப்பார்ப்பும்.

    English summary
    Maestro Ilaiyaraaja, the proud of Indian film music is celebrating his birthday today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X