நெஞ்சம் மறப்பதில்லை -4: அண்ணன் - தங்கை 'காதலித்த' கதை!

By Peru Thulasi Palanivel

-பெரு துளசிபழனிவேல்

டைரக்டர் ஏ.பீம்சிங் ‘பா' வரிசைப் படங்களை எடுத்துக் கொண்டிருந்த பிசியான காலகட்டமது.

அந்த நேரத்தில் டைரக்டரை நேரில் பார்த்து, தான் ரெடி பண்ணி வைத்திருக்கும் கதையை அவரிடம் சொல்லி ‘ஒகே' வாங்க வேண்டும் என்று கே.வி.கொட்டாரக்கரா என்ற கதையாசிரியர் அலைந்துக் கொண்டிருந்தார். டைரக்டர் பிசியாக இருந்ததால் அவரை நிமிர்ந்து பார்த்து என்ன? என்று கேட்கக்கூட நேரமில்லை. ஆனாலும் கொட்டாரக்கரா கஜினி முகமது மாதிரி தொடர்ந்து படையெடுத்து போராடி அவரை கதை கேட்க வைத்தார்.

டைரக்டர் கதை கேட்க சம்மதித்தற்கு காரணம் அவர் தொடர்ந்து வந்து வாய்ப்புக் கேட்கிறார் என்பதற்காக அல்ல. அவர் தனது கதையைப் பற்றி சொன்ன கருத்துதான் அதிர்ந்து போய் கதையை கேட்க வைத்தது.

அப்படி என்ன தான் கொட்டாரக்கரா சென்னார்?

தான் ரெடி பண்ணி வைத்திருக்கும் கதை ஒரு அண்ணனும், தங்கையும் உயிருக்ககுயிராக காதலிக்கிற கதை ‘அந்தக் காதல் அவர்கள் இறக்கின்ற வரையில் தொடர்கிறது' என்றார்.

Nenjam Marappathillai -4

அதைக் கேட்டதும் டைரக்டர் ஏ.பீம்சிங் அதிர்ச்சியடைந்தார். இவர் என்ன சொல்கிறார்? அண்ணணும், தங்கையும் காதலிக்கிறார்களா? சேச்சே... என்ன இவர் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று தனது குழுவினரிடம் கோபமாகக் கூறினார் டைரக்டர் பீம்சிங்.

அவரது குழுவினரும் அப்படி என்னதான் அண்ணன் - தங்கச்சி கதை சொல்கிறார் என்று கேட்டுத்தான் பார்ப்போமே என்று டைரக்டரையும் உட்கார வைத்து கதையைக் கேட்டார்கள்.

கோபத்துடன் கதையைக் கேட்ட அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. டைரக்டர் பீம்சிங்தான் அதிகமாக துக்கம் தொண்டையை அடைக்க விம்மி விம்மி அழுதார்.

என்னய்யா அண்ணனும், தங்கையும் ஒருத்தர் மீது ஒருத்தர் அன்பாகவும், பாசமாகவும் இருப்பதை காதல் என்று கொச்சைப்படுத்தியா கதை சொல்லுவது என்று கொட்டாரக்கரா மீது கோபப்பட்டார் டைரக்டர்.

Nenjam Marappathillai -4

காதல்னு சொன்னாலே அன்பும், பாசமும் கலந்தது தானே... அதனால்தான் அப்படிச் சொன்னேன். மேலும் அப்படி நான் சொன்னதால்தானே நீங்கள் கதையை கேட்க சம்மதித்தீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கொட்டாரகரா.

அந்தக் கதையைத்தான் ஆருர்தாஸ் வசனத்தில் ‘பாசமலர்' என்ற பெயரில் படமாக்கினார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்ரியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தப் படம். அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக வெளிப்படுத்தியப் படம்.

இந்தப் ‘பாசமலர்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் டைரக்டர் பீம்சிங் நடிகர் திலகத்திடம் தான் நாளைக்கு எடுக்கப் போகும் கிளைமாக்ஸ் காட்சி பற்றி எடுத்து கூறிக்கொண்டிருந்தார். "நாளைக்கு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப் போகிறோம். அண்ணன் - தங்கை இறுதியாக சந்தித்து இறந்து போகும் காட்சி. ‘சைவீசம்மா.. கைவீசு... என்று நீங்கள் உணர்ச்சிகரமாக பேசி நடிக்க வேண்டிய காட்சி. இந்தக் காட்சியில் நீங்கள் தாடிவளர்த்து, தளர்ந்துபோய், கண்களிளெல்லாம் கருவளையம் படர்ந்து வயதான தோற்றத்தில் களைப்புடன் உங்கள் முகம் இருக்க வேண்டும். அதற்காக மேக்கப் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்," என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் பீம்சிங்.

நடிகர் திலகம் சிவாஜி இந்தக் காட்சியில் நடிப்பதற்காக இரவெல்லாம் தூங்காமல் தனது வீட்டை விடிய விடிய சுற்றி வந்திருக்கிறார். சரியாக முழுமையாக சாப்பாடும் எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். தூங்காமல் இருப்பதற்காக டீ மட்டும் குடித்திருக்கிறார். இதனால் காலையில் பார்க்கும் போது அவரது முகம். களையிழந்து, கண்களெல்லாம் லேசாகக் கருவளையம் படிந்து உடல் நிலையும் தளர்ந்து போய் இருந்தது. இந்தத்தோற்றம் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து உடனே படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து அதற்கான மேக்கப்பும் போட்டுக் கொண்டார். படப்பிடிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டிருந்தன.

Nenjam Marappathillai -4

நடிகர் திலகம் சிவாஜியும் - நடிகையர் திலகம் சாவித்ரியும் இணைந்து நடித்த ‘பாசமலர்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கினார்கள்.
சிவாஜி தனது தங்கை சாவித்ரியிடம் 'கைவீசம்மா..கைவீசு...' என்று குழந்தை பருவத்தில் நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வந்த பேசும் உணர்ச்சிகரமான காட்சியைப் படமாக்கினார்கள். இரண்டு நடிப்பு திலகங்களின் நடிப்பில் படப்பிடிப்பு குழுவினரே அசந்துபோய் ரசிகர்களாக படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காட்சி முடிந்து ‘கட்' சொல்ல வேண்டிய டைரக்டர் ஏ.பீம்சிங் ‘கட்' சொல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டினார். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களும் கைதட்டி இரண்டு உன்னத கலைஞர்களின் நடிப்பாற்றலை அங்கீகரித்தார்கள்.

இந்தப் படம் தியேட்டருக்கு வந்தபோது அன்றைய ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியை எப்படி எல்லாம் ரசித்து கைதட்டினார்கள். கண்ணீர் விட்டார்கள் என்பது அன்று படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.

அன்றைய கலைஞர்கள் தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக எப்படியெல்லாம் தங்களை வருத்திக் கொண்டு நடித்தார்கள். ஆனால் இன்றைய கலைஞர்களில் (ஒரு சிலரை தவிர) இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா? அப்படி இருந்தாலும் தன்னை வருத்திக் கொண்டு நடிப்பார்களா?

-தொடரும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X