பாலகுமாரனின் தலையணைப் பூக்கள் கதை... ஜீ தமிழில் சீரியலாகிறது
சென்னை: பிரபல எழுத்தாளர் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற நாவலான தலையணைப்பூக்கள் நாவல் இப்போது சீரியலாக ஒளிபரப்பாக உள்ளது. ஜீ தமிழ் சேனலில் விரைவில் தலையணைப் பூக்கள் ஒளிபரப்பாகும் என்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது ரசிகர்கள் அவரை எழுத்துச் சித்தர் என்றுதான் அழைக்கின்றனர். 150 நாவல்கள், 100 சிறுகதைகள் எழுதியுள்ள பாலகுமாரன், 14 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
பிரமண சமுதாய கதாபாத்திரங்களைப் பற்றிய கதைகளும், சரித்திர நாவல்களும் அதிகம் எழுதியுள்ளார் பாலகுமாரன். தலையணைப் பூக்கள் பாலகுமாரன் அவர்கள் எழுதிய குடும்ப நாவல்.
கிராமத்தில் இருந்து விவசாய நிலங்களை விற்றுவிட்டு நகரத்துக்கு வரும் தந்தை தனது மகன்கள் உதவியுடன் மங்கலம் அண்ட் கோ எனப்படும் ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார். அவரும் அவரது மகன்களும் சந்திக்கும் வெற்றி தோல்விகள் மற்றும் அவர்களது சொந்த வாழ்வில் நிகழும் சம்பவங்கள் தான் கதை. இன்றைய சீரியலுக்கு சரியான கதை என்பதால் இதை தேர்வு செய்திருக்கிறார்கள்.
பெண் வாசனையே இல்லாத வீடு அது அந்த வீட்டிற்கு மருமகளாக வரும் நிஷாவினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதுதான் சீரியலின் முக்கிய அம்சம்.
இந்த சீரியலில் அப்பாவாக டெல்லி குமார், மகன்களாக ஸ்ரீ, ஸ்ரீகர் ஆகியோர் நடிக்கின்றனர். மருமகளாக நடிக்கிறார் நிஷா. சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தெய்வமகள் தொடரில் தங்கையாக நடித்த நிஷா, தற்போது மகாபாரதம் தொடரில் பாஞ்சாலியாக நடிக்கிறார்.
முதன்முறையாக தமிழ் சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் நிஷா. பாலகுமாரன் கதை என்பதால் தலையணைப்பூக்கள் சீரியல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications