twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடும்பத்தை கெடு... அடுத்தவள் கணவனை அபகரி... 2015லும் மாறாத டிவி சீரியல்கள்

    By Mayura Akilan
    |

    சென்னை: தமிழ் டிவி சீரியலோ... இந்தி டப்பிங் சீரியலோ எது என்றாலும் எவன் குடியை எப்படி கெடுக்கலாம், யார் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம், எப்படி திருடுவது, எப்படி பணம் பறிப்பது என்பதாகத்தான் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும். பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், மனைவிக்கு துரோகமிழைக்கும் கணவன்மார்கள், பெற்றோர்களை ஏமாற்றும் பிள்ளைகள் கூட இருந்தே குழி பறிக்கும் அண்ணிகள் என 2015ம் ஆண்டிலும் பெரும்பாலான சின்னத்திரை சீரியல்கள் எதிர்மறையான விசயங்களையே காட்டிக் கொண்டிருக்கின்றன.

    இப்போதெல்லாம் காலை 9 மணி தொடங்கி இரவு 11.00 மணி சின்னத்திரை தொடர்கள் நம் வீடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. உறவினர்கள் யாராவது வந்தால் கூட விரோதிகளைப் போல பார்க்கும் மனோபாவம்தான் அதிகரித்து வருகிறது.

    டிவி சீரியல்களில் இன்றைக்கு வாழ்க்கைக்கு சற்றும் தொடர்பு இல்லாத வாழ்விற்குத் தேவையற்ற விசயங்களைப் சின்னத்திரைகள் பரப்பிக் கொண்டிருக்கின்றன. நாமும் பொழுது போகவில்லை என்பதற்காக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே சீரியல்களை தொடர்ந்து பார்த்து பழகியதோடு நமது எண்ணத்தில் நாமே நஞ்சை ஏற்றிக் கொண்டிருக்கின்றோம். 2015ம் ஆண்டிலும் புதிதாக தொடங்கப்பட்ட பல சீரியல்களிலும், ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலும் இப்படிப்பட்ட கதைகளே ஒளிபரப்பாகி வருகின்றன என்பது நேயர்களின் புகராக இருக்கிறது.

    லட்சுமி வந்தாச்சு

    லட்சுமி வந்தாச்சு

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் காதலித்து கைவிட்ட பெண் அண்ணன் மனைவியாக நடிக்க வந்திருக்கிறாள் என்பதை அறிந்து அவளை மீண்டும் அண்ணனிடம் இருந்து அபகரிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறான். இளைய மருமகளின் பெயரை எப்படி கெடுப்பது என்று திட்டமிடுகிறாள் மூத்த மருமகள். பொறாமை, வஞ்சகம், ஓரகத்தியின் பெயரை கெடுத்து ஓரம் கட்டுவது எப்படி என்றும் கற்றுக்கொடுக்கிறது இந்த சீரியல்.

    அடுத்தவள் கணவனை அபகரிப்பது

    அடுத்தவள் கணவனை அபகரிப்பது

    இன்றைய சீரியல்களில் அதிகம் இடம் பெரும் கதை அடுத்தவள் கணவனை அபகரிப்பது எப்படி என்பதுதான். இது எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் சில எபிசோடுகளாவது இடம் பெறுகின்றன. சன் டிவியில் காலையில் அபூர்வ ராகங்கள் தொடங்கி, பொம்மலாட்டம், மரகதவீணை, பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, கேளடி கண்மணி, என இரவு உறங்கப்போகும் வரை ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் இதே கதைதான்.

    குடும்பத்தை கெடுக்கும் கதைகள்

    குடும்பத்தை கெடுக்கும் கதைகள்

    குல தெய்வம் என்று பெயரை வைத்து விட்டு குடும்பத்தை கெடுக்கும் கதைகள்தான் ஒளிபரப்பாகின்றன. அதேபோல பிரியமானவள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள சீரியலில் பிரியமே இல்லாத தோழிதான் கூட இருந்தே குடும்பத்தை கெடுக்க திட்டமிடுகிறாள். அதேபோல சொத்துக்களை அபகரிக்க மகனுக்கு பல ஐடியாக்களையும் சொல்லிக்கொடுக்கிறாள்.

    பலதார மணங்கள்

    பலதார மணங்கள்

    இருதார மணம் என்பது இன்றைய சீரியலில் சகஜமாகிவிட்டது. ஆனால் வம்சம் தொடரில் டாக்டருக்கு படித்த மகனுக்கு மருமகள் இருக்கும் போதே பல பெண்களை திருமணம் செய்ய திட்டமிருகிறாள் ஒரு பேய். மருமகளை எப்படி வீட்டை விட்டு விரட்டலாம் என்பதை இதுபோன்ற சீரியலைப் பார்த்து பலரும் கற்றுக்கொள்ளலாம். படு கேவலமான கதையின் கிரியேட்டிவ் ஹெட் ரம்யா கிருஷ்ணன் என்பது கூடுதல் தகவல்.

    கள்ளக்காதல் தப்பில்லை

    கள்ளக்காதல் தப்பில்லை

    அதேபோல திருமணம் செய்து கொண்ட ஆணை திட்டமிட்டு வலையில் வீழ்த்துவது தப்பில்லை என்கிற ரீதியிலேயே இன்றைய சீரியல்கள் எடுக்கப்படுகின்றன. வாணி ராணி தொடரில் பல எபிசோடுகள் இப்படிப்பட்ட வசனங்களுடன் ஒளிபரப்பாகின்றன. சரவணன் மீனாட்சி , கல்யாணம் முதல் காதல் வரை, தெய்வம் தந்த வீடு, என விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

    தாலி சென்டிமெண்ட்

    தாலி சென்டிமெண்ட்

    தாலியை அறுத்து கொடுப்பது என்பது டிவி சீரியல்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது. வள்ளி, கேளடி கண்மணி என சன்டிவி சீரியல்கள் மட்டுமல்லாது ஜீ டிவியில் அண்ணக்கொடியும் ஐந்து பெண்களும் தொடர்கள் வரை தாலியை தங்கள் இஷ்டத்திற்கு கட்டுவதும், கழற்றி வீசுவதும் அதிகரித்து வருகிறது.

    குழி பறிக்கும் அண்ணிகள்

    குழி பறிக்கும் அண்ணிகள்

    சொத்துக்களை அபகரிக்க குடும்பத்திற்குள் இருந்து கொண்டே எப்படி குழி பறிப்பது என்பது கற்றுக்கொடுக்கிறது தெய்வமகள் தொடர். அதேபோல பாச மலர் தொடரிலும் அண்ணன் தங்கை பாசத்தை கெடுக்கவும், சொத்துக்களை அபகரிக்கவும் திட்டமிடுகிறாள் அண்ணி. கள்ள உறவும், இருதார மணமும் தவறில்லை என்கிற ரீதியிலேயே கதைகள் எழுதப்படுகின்றன.

    மூடநம்பிக்கை தொடர்கள்

    மூடநம்பிக்கை தொடர்கள்

    நள்ளிரவில்தான் பேய் தொடர்களை ஒளிபரப்ப வேண்டும் என்று ஒளிபரப்பு புகார்களுக்கான ஆணையம் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியும் அதை யாரும் கேட்பதாக இல்லை. சன்டிவி, வேந்தர் டிவிகளில் பேய் தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

    கரு கலைப்பு கதைகள்

    கரு கலைப்பு கதைகள்

    சன் டிவி தொடங்கி, விஜய், ஜீ, ராஜ், என பல சேனல்களிலும் கருகலைப்பு கதைகள் தவறாமல் இடம்பெற்றுள்ளன. சரவணன் மீனாட்சி தொடரில் மருமகளின் கருவை கலைக்க மாமனார் திட்டமிடுகிறார். கணவனின் மீதான கோபத்தில் கருவை கலைக்க மனைவியே முடிவெடுக்கிறாள். அழகு போய்விடுமே என்று கருவை கலைத்துவிட்டு கர்ப்பம் என்று நாடகமாடுகிறாள் கதாநாயகி.
    கர்ண கொடூர கதைகளை பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது.

    டிவி சீரியல் அடிமைகள்

    டிவி சீரியல் அடிமைகள்

    காலை 9 மணிக்கு தொடங்குகிற சின்னத்திரை தொடர்கள் இரவு 11 மணி வரை நீள்கிற அவலம் பல குடும்பங்களில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. இல்லத்தரசிகள் மட்டுமல்ல வேலை முடிந்து கணவன்மார்களும் பிள்ளைகளும் கூட இரவு வரை சின்னத்திரை தொடர்களில் மூழ்கி விடுகின்றனர். தொடர்கள் முடிந்த பிறகுதான் சாப்பாடு, தூக்கம், வீட்டுப்பாடம் என்பதுதான் உச்சக்கட்ட கொடுமை.

    தடை செய்வார்களா?

    தடை செய்வார்களா?

    பல குடும்பங்களில் உறவுகளுக்கிடையில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் இந்த சின்னத்திரைகள் காரணமாகின்றன.
    சின்னத்திரைகள் மக்களின் சிந்தனையை நாசப்படுத்தும் வேலையையே செய்கின்றன.நம் எண்ணம், பேச்சு. செயல், பழக்கம், ஒழுக்கம், வாழ்க்கை இப்படி எல்லாவற்றையும் சிதைக்கும் பணியைச் சின்னத்திரைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். சீரியல்களை புறக்கணித்துவிட்டு ஆக்கபூர்வமான வழியில் நமது நேரத்தைச் செலவிட தொடங்கினால் காலவோட்டத்தில் சின்னத்திரை தொடர்கள் ஒளிபரப்புவது நிறுத்தப்படும் என்பதே நிதர்சனமான உண்மை.

    English summary
    In 2015 Prime time on TV and serial mania grips TamilNadu. if common man sees this serial "like: Marrying more that once/ twice, selling the culprit by exchanging plot related documents Even they will try to act like that. Already Day by day killing are going around & above all these type of serial will spoil many more.Hence block this serial at the earliest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X