சன் டிவியில் நாதஸ்வரம் முடிந்தது… குலதெய்வம் ஆரம்பம்
சென்னை: 5 ஆண்டுகளாக சன்டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரை முடித்துவிட்டார் இயக்குநர் திருமுருகன். அதே நேரத்தில் குலதெய்வம் என்ற புதிய தொடரை தொடங்கிவிட்டார். இந்த தொடர் நகரத்து வாழ்க்கையும் கிராமத்து வாழ்க்கையும் கலந்த கதையாக உள்ளது.
இரவு ஏழுமணியாகிவிட்டாலே இல்லத்தரசிகளுக்கு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அவசரம் அவசரமாக சமையலை முடித்துவிட்டு 7.30 மணிக்கு டிவி முன் அமர்ந்து விடுவார்கள். காரணம் நாதஸ்வரம் தொடரை பார்க்கவேண்டும் என்ற ஆவல்தான். மலர், கோபி என்றால் ஒரு தனி பிரியம்தான் எல்லோருக்கும். குடும்பத் தொடர் என்பதால் சந்தோசமாக பார்த்து ரசித்த இந்த தொடர் 1356 எபிசோடுகள் வரை ஒளிபரப்பானது. இந்தத் தொடருக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.

கின்னஸ் சாதனை
நாதஸ்வரம் தொடரின் ஆயிரமாவது எபிசோட் காரைக்குடியில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்டு கின்னஸ் சாதனைப் பெற்றது. முழுக்க முழுக்க காரைக்குடி, சுற்றுவட்டாரப்பகுதிகளிலும், குற்றாலம் பகுதிகளிலும் எடுத்த தொடர் இது என்ற பெருமைக்குரியது. இந்தத் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

குலதெய்வம்
மெட்டி ஒலி இயக்கிய திருமுருகன் அடுத்த தொடருக்கு நாதஸ்வரம் என்று பெயரிட்டார். இதை அடுத்து புதிய தொடருக்கு குலதெய்வம் என்று பெயரிட்டுள்ளார். கதை எழுதி தனது திரு பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி நடிக்கிறார் திருமுருகன்.

மௌலி - வடிவுக்கரசி
புதிய தொடரில், மௌலி, வடிவுக்கரசி, சதீஷ், ராணி, ‘மெட்டி ஒலி' சாந்தி, ராகவன் உட்பட பலர் நடிக்கின்றனர். சரத் சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதை பாஸ்கர் சக்தி. வசனம், ஆறுமுகத்தமிழன். இசை, சஞ்சீவ் ரத்தன்.

குல தெய்வம்
இத்தொடர் மூன்று தலைமுறைகளின் கதை என்கிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான திருமுருகன். தாத்தா, பாட்டி, மிடில் கிளாஸ், இளம் பருவத்தினர் என மூன்று தலைமுறையினர் கதை, இதில் இடம்பெறுகிறது. நகரத்து வாழ்க்கையும் கிராமத்து வாழ்வும் இத்தொடரில் கலந்து வரும்.

தலைமுறைகளுக்கு பாடம்
நமது சந்ததியினருக்கு நல்லது செய்வதால்தான், குலதெய்வத்தை எல்லோரும் கும்பிடுகிறோம். அதே போல, நமது அடுத்த சந்ததியினருக்கும் நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.

குல தெய்வத்தை கும்பிடுங்க
அதாவது ஒரு தோரணம் இருக்கிறது என்றால் அதன் ஆயுள் ஒரு நாள்தான். ஆனால், அது எல்லா நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகிறது. இந்தக் கருத்தை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாகிறது என்கிறார் திருமுருகன்.

பிரிந்த தம்பதிகள்
தொடரின் ஆரம்பமே குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி எப்படி என்று ஒரு விழாவில் அறிமுகப்படுத்துகிறார் தாத்தா மவுலி. தன் குலதெய்வமான முனீஸ்வரரை தேடி கிராமத்திற்கு வரும் அவர் தொலைந்த தன்னுடைய மனைவியை மீட்டு தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டு செல்கிறார்.

வடிவுக்கரசி
அதே கோவிலுக்கு வரும் வடிவுக்கரசியும் தனது கணவரை கண்டு பிடித்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து செல்கிறார். இருவரும் எப்போது இணைவார்கள் என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம். அது சரி இதுநாள் வரை நாதஸ்வரத்தை கேட்ட இல்லத்தரசிகள் இனி இல்லத்தரசிகள் எல்லோரும் இரவு 7.30 மணிக்கு குல தெய்வத்தை கும்பிட ஆரம்பிச்சுருவாங்களே என்பது பாதிக்கப்பட்ட கணவர்களின் குமுறலாகும்.


Click it and Unblock the Notifications











