“மாப்பிள்ளை”... மீண்டும் விஜய் டிவியில் உங்கள் அபிமான "செந்தில்- ஸ்ரீஜா"!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான ஜோடி செந்தில் - ஸ்ரீஜா. சீரியலுக்காக இவர்களது நிச்சயதார்த்தம் கூட படு விமர்சையாக நடத்தப்பட்டது.
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தபோது காதலில் விழுந்த இந்த ஜோடி பின்னர் திருமணமும் செய்து கொண்டது. அதனைத் தொடர்ந்து ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறியது. பின்னர் செந்தில் சினிமாவில் நடிக்கத் தொடங்க, ஸ்ரீஜா நடிப்பிற்கு சிறிது ஓய்வு கொடுத்தார்.
ஆனபோதும், விளம்பரம் ஒன்றில் மீண்டும் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

மீண்டும் சீரியல்...
இந்நிலையில் மீண்டும் இந்த நட்சத்திர ஜோடி சீரியல் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர். இதுவும் விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாக இருக்கிறது.

மாப்பிள்ளை...
இந்தப் புதிய சீரியலுக்கு மாப்பிள்ளை எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு மருமகனின் கதையாம். வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி முதல் இரவு 7 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

கணவன், மனைவியாக...
இதிலும் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் கணவன் மனைவியாகத் தான் நடிக்கிறார்கள் என்பது அதன் புரோமோவைப் பார்க்கும்போதே தெரிகிறது. அதிலும் குறிப்பாக மனைவியின் வளர்ச்சிக்கு உதவும் கணவர் கதாபாத்திரத்தில் செந்தில் நடிக்கிறார்.

எதிர்பார்ப்பு...
இந்தப் புதிய சீரியல் ஒளிபரப்பிற்கு இன்னும் மூன்று வாரங்களுக்கும் அதிகமான நாட்கள் உள்ள நிலையில், தற்போதே இதன் விளம்பரம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. மீண்டும் தங்களது அபிமான ஜோடியை திரையில் பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications