நடிப்பு என் ரத்தத்தோடு கலந்துவிட்டது: “தென்றல்’ தீபா

என் தாய்மாமன்கள் உதய்குமார்- சுரேஷ் இருவரும் சினிமாத்துறையில்தான் இருக்கிறார்கள். ஒரு மாமா, மணிரத்னம் சார் இயக்கிய "நாயகன்' படத்தில் நடித்திருக்கிறார். அவர் ஷூட்டிங் போகும் போது என் பாட்டி எங்களை எல்லாம் அங்கு அழைத்துப் போவார்கள். இப்படி போன போது எனக்கு ரஜினி சாரோட "பாட்ஷா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் ரகுவரன் சாரோட பெண்ணாக வரும் சின்னகுழந்தை நான்தான். இப்படித்தான் சினிமாத் துறைக்குள் வந்தேன்.
"சூர்ய வம்சம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளேன். நடிப்பு என் ரத்தத்தோடு கலந்துவிட்டது.
எங்கள் குடும்பம் பெரியது. எனக்கு இரண்டு அண்ணன், இரண்டு அக்கா இருக்கிறார்கள். நான்தான் வீட்டில் கடைசி பெண். அண்ணன்கள், அக்காவுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. எல்லாருமே எனக்கு ரொம்ப துணையாக இருப்பாங்க. நான் நடிப்பது எல்லாருக்குமே ரொம்பப் பிடிக்கும். அக்கா, மாமா, சித்தப்பா, சித்தி என்று எல்லாருமே என் நடிப்பை விரும்பிப் பார்ப்பார்கள்
ராடன் நிறுவனத்தின் "சித்தி' தொடர்தான் எனக்கு முதல் தொடர். அந்த முதல் தொடரிலேயே எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அடுத்து "மனைவி' என்ற தொடரில் நடித்தேன். அதன்பிறகு ஒரு சிறிய இடைவெளி.
"விஜய்' டிவியில் "கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தேன். எனக்கு அதில் நன்றாக நடிக்கக் கூடிய வேடம் கிடைத்தது. அந்தத் தொடர் என் வயதுக்குரிய தொடராக அமைந்தது. பள்ளியில் படிக்கும் பெண்ணாக நடித்திருந்தேன். அதற்குப் பின் இப்போது "தென்றல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
"கனா காணும் காலங்கள்' தொடரில் எனக்கு அமைதியான கேரக்டர். அதற்கு நேர் எதிரான கேரக்டர் "தென்றலி'ல் வரும் தீபா கேரக்டர். வெளியே எங்காவது போகும் போது "தீபா வராங்கன்னு' சொல்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
பெரிய திரையில் இருந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு பொருத்தமான நல்ல ரோலில்தான் நடிக்கவேண்டும் என்று ரொம்ப உறுதியாக இருக்கிறேன். சும்மா வந்து நின்றுவிட்டுப் போக எனக்கு ஆசையில்லை. ஒரே படம் நடித்தாலும் எல்லாருடைய மனதிலும் நிற்கும்படி நடிக்கவேண்டும்.
சின்ன வயதிலிருந்தே நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். ஒரு நல்ல நடிகையாகத்தான் வரவேண்டும் என்று எப்போதுமே நினைத்துக் கொண்டிருப்பேன். அந்த ஆசை இன்று ஓரளவு நிறைவேறியிருக்கிறது.இந்த மாதிரியான கேரக்டரில்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்காமல் எல்லாவிதமான கேரக்டர்களும் நடிக்கணும் என்பது என்னுடைய ஆசை என்று கூறிவிட்டு மலர்ச்சியாய் சிரித்தால் ஹேமா. வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.


Click it and Unblock the Notifications