Don't Miss!
- News மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏ... கருத்தம்மா நீ ஏன் இன்னும் எருமையை குளிப்பாட்டலை?... கலந்து கட்டும் டப்பிங் சீரியல்கள்...
டிவி சீரியல்களே உலகம் என்றாகிப்போன இல்லத்தரசிகளின் நெஞ்சங்களில் இன்றைக்கு பெரிதும் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது இந்தி டப்பிங் சீரியல்கள்.
எண்பதுகளில் இந்தி சீரியல்கள் தூர்தசனில் ஒளிபரப்பாயின. பின்னர் மண்டல ஒளிபரப்பு வந்த பின்னர் தமிழில் வாரம் தோறும் அல்லது வாரம் இருமுறை என்ற அமைப்பிலும் 13 வாரத்தொடர் என்ற அமைப்பிலும் வெளிவந்தன. பெரும்பான்மையாக அவை ஸ்டூடியோவுக்குள் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை. ஒருவிதத்தில் அவை "வீட்டுக்கு வந்த மேடைநாடகங்கள்" என்ற அளவில் இருந்தன. அவற்றால் மக்கள் தங்களின் மனத்தைத் திரைப்படத்திலிருந்து சற்று விலக்கிக் கொண்டனர்.
2000த்தில் நாடகங்கள் திரைப்படத் தரத்தில் பெருந்தொடராக (மெகா சீரியல்) நாள்தோறும் வெளிவரத்தொடங்கின. அப்போதும் பிறமொழி நாடகங்கள் தரமற்ற மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. ஆதலால், அவற்றை மக்கள் வரவேற்கவில்லை. அதேவேளையில் தமிழ் மெகா சீரியர்கள் தரமுடன் தயாரிக்கப்பட்டன. வெளிப்புறப் படப்பிடிப்பு, தெளிவான ஒளி-ஒலி, பெண்களின் குடும்பப் போராட்டங்களை மையப்படுத்திய கதையமைப்பு, பாடல்கள், சண்டைக் காட்சிகள் என அவை தம்மைத் திரைப்படங்கள் போலவே பாவித்துக்கொண்டன. அதில் மனத்தைப் பறிகொடுத்தத் தமிழ்ப் பெண்கள் அவற்றைத் "தொடர்த் திரைப்படங்கள்" என்று கருதுகின்றனர்.
டப்பிங் சீரியல்கள் ஆதிக்கம்
2010களில் பிறமொழி மெகா சீரியல்கள் தமிழில் தரமாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவரத்தொடங்கின. குறிப்பாக ஹிந்திமொழி மெகா சீரியல்கள் பல 2013இன் தொடக்கத்தில் தமிழ் மொழியாக்கத்தில் வெளிவரத் தொடங்கின. அவற்றின் தரம் தமிழ்ப் பெண்களைத் தமிழ் மெகா சீரியல்களுக்கு இணையாக ரசிக்கும் அளவுக்குச் செய்துள்ளன.
உள்ளம் கொள்ளை போகுதே
‘உள்ளம் கொள்ளை போகுதே...' என்று இன்றைக்கு முணுமுணுக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு இல்லத்தரசிகளின் உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டிருக்கிறது அந்த சீரியல். இது பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகிறது.
விஜய், ராஜ் டிவி
அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘என் கணவர் என் தோழன்' ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி, கருத்தம்மா போன்ற சீரியல்களும் இன்றைக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி டி.ஆர்.பியில் இடம்பிடித்துள்ளது.
தமிழ் சின்னத்திரை கலைஞர்கள்
டப்பிங் சீரியல்களின் வரவினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது தமிழ் சின்னத்திரை தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தொழில் நுட்பக்கலைஞர்களின் புலம்பல். இதில் சிலரது காட்டில் மழை அவர்கள்தான் டப்பிங் கலைஞர்கள்... வரிசையாக வெளியாகும் டப்பிங் சீரியல்களில் பேசி பேசியே காசு பார்க்கின்றனர்.
போர்க்கொடி தூக்கிய கலைஞர்கள்
டிவி சேனல்களில் பிற மொழி தொடர்களை தமிழில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு வற்புறுத்தியது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.வி. நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. டி.வி. தொடர் இயக்குனர்கள், பெப்சி தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது டப்பிங் சீரியல் காலம்
செல்லமே, நாதஸ்வரம், தென்றல், சரவணன் மீனாட்சி, என்று மயங்கிக் கிடந்த தமிழ்ப் பெண்களின் மனத்தை, ‘அவள் ஒரு தொடர்கதை', ‘உள்ளம் கொள்ளை போகுதே', ‘என் கணவன் என் தோழன்', ‘தெய்வம் தந்த வீடு', ‘சிந்து-பைரவி', ‘இது காதலா', ‘மதுபாலா' போன்ற டப்பிங் மெகா சீரியல்கள் ஆக்கிரமித்துக்கொண்டன.
என்னா அழகுப்பா
தமிழ் மெகா சீரியல்களை மாய்ந்து மாய்ந்துப் பார்த்த, அழுதும் புலம்பியும் பார்த்த பெண்கள் இப்போது டப்பிங் மெகா சீரியல்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கியதன் காரணங்கள் பல உள்ளன. வடக்கத்திய நடிகைகளின் உடையலங்காரம், சிகையலங்காரம், பின்னணிக் காட்சி அமைப்பின் பிரம்மாண்டம், போன்றவை பெரிய பட்ஜெட் திரைப்படத்துக்கு இணையானவை. திருப்பு முனைகளும் சுவாரஸ்யங்களும் டப்பிங் சீரியல் பக்கம் திருப்பியுள்ளது.
பணம் கொட்டும் மெகா சீரியல்கள்
தமிழில் திரைப்படம் தயாரித்த நிறுவனமெல்லாம் சீரியல் தயாரிக்க வந்து பெரும் லாபம் சம்பாதித்து வருகின்றன. ஏ.வி.எம், விகடன், போன்றவை உதாரணங்க. இன்றைக்கும் சன்டிவியில் விகடன், ராடன், திருமுருகன் போன்றவர்கள் தொடர்ந்து சீரியல் எடுத்து ஆயிரக்கணக்கான எபிசோடுகள் வரை அழவைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். எல்லா டிவிக்களிலும் மாலையிலிருந்து இரவு வரை ஏதேனும் ஒரு சீரியல் போய்க் கொண்டுதான் இருக்கிறது.
சீரியல் மழை
சன் டிவியில் காலை 10 மணியில் இருந்து இரவு 11 மணிவரை ஒரே சீரியல் தான் ( 7 மணிக்கு போனால் போகிறது என்று செய்தி போடுகிறார்கள். ஆனால் விஜய் டிவியில் சில தொடர்கள் தவிர ( அதுகூட இந்தி டப்பிங் போலவே காஸ்ட்யூம் போடுகிறார்கள்) நிறைய டப்பிங் சீரியல்கள்தான். இதில் ராஜ் டிவி பாலிமர் டிவி, சேனல்களில் 90 சதவிகிதம் டப்பிங் சீரியல்கள்தான்.
புரட்சிக்கதைகள்
தமிழ் சீரியல்களைப் போல அழுது வடியாமல், இந்தியப் பண்பாடு சார்ந்த வழக்கங்களைத் தற்காலத்துக்கு ஏற்ப முற்போக்காக மாற்றிப் பல காட்சிகளை இடம்பெறச் செய்கின்றனர். இரண்டு குழந்தைகளைப் பெற்ற ஒரு விதவைக்கு மறுமணம் செய்துவைத்தல் போன்றவை இடம் பெறுவதால் மக்கள் அவற்றை ரசிப்பதாக கூறப்படுகிறது.
குடும்ப சண்டைகள்
மாமியார் - மருமகள் சண்டைக்காட்சிகள்கூட இயல்பாக, அதிகக் காழ்ப்புணர்ச்சி இன்றிக் காட்டப்படுகின்றன. மாமியார்களை எதிரியாச் சித்தரிக்கும் போக்கு இருப்பதில்லை. திருமணம் சார்ந்த விழாக்கள் அனைத்தும் சங்கடங்களின்றி மிகுந்த உற்சாகத்துடன் காட்டப்படுகின்றன.
கல்யாணத்தை கெடு
அதேசமயம் தமிழ் மெகா சீரியல்களோ திருமணக்கட்சிகள் என்றாலே ஏகப்பட்ட சண்டைகளும் மனக் கசப்புகளுமாகக் காட்டி அவைதான் நம் வழக்கம் என்பதுபோலப் பாவனைசெய்கிறார்கள். கூட இருந்தே குழி பறிக்கும் பல சம்பவங்கள் ஒளிபரப்பாகின்றன தமிழ் சீரியல்களில் என்கின்றனர் இந்தி சீரியலை ரசிப்பவர்கள்.
இந்த வசனத்தைக் கேளேன்
ஆனால் இந்தி டப்பிங் சீரியல்களில் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று ஒட்டாத வசனங்கள்தான் இருக்கின்றன. ‘உஸ் கே பாஸ் போலோ' என்று ஒரு பெண் வாய் அசைக்கும்போது "அது கிட்ட நீயே சொல்லு" என்று டப்பிங் வருகிறது. கரீனா போல அழகான ஒரு செவத்த பெண்ணைப் பார்த்து, "ஏய் கருத்தம்மா.. ஏன் நீ இன்னும் எருமையை குளிப்பாட்டலை?" என்று மாமியார் கேட்பதுதான் படு காமெடி.
நகைகள்… அதீத மேக் அப்… ஆடைகள்
வடக்கத்திய தொடர்களில் கலர்ஃபுல் ஆடைகள்... அதீத மேக் அப் என அலங்கார பதுமைகளாய் பெண்கள் வலம் வருகிறார்கள்... நம் ஊருக்கு இது செட் ஆகாது என்றாலும் இல்லத்தரசிகள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். கூடவே அழகான ஹீரோக்கள் நடிப்பதால் இளம் யுவதிகளும் டப்பிங் சீரியலுக்கு அடிமைகள் ஆகிவிட்டனராம்.
காசு கம்மி… வருமானம் நிறைய
நேரடியாக தமிழ் டிவி சீரியல்களை லட்சக்கணக்கில் செலவு செய்து தயாரிப்பதை விட பிரபல இந்தி சீரியல்களை டப்பிங் செய்ய சில ஆயிரங்கள் மட்டுமே செலவாகிறது என்பதால் பல டிவி சேனல்கள் டப்பிங் சீரியர்கள் பக்கம் சாய்ந்து விட்டனர் என்கின்றனர்.
அவன நிப்பாட்டச் சொல்லு…
இந்த சூழ்நிலையில்தான் டப்பிங் சீரியல்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர் தமிழக சின்னத்திரை தயாரிப்பாளர்களும் நட்சத்திரங்களும். வேலை வாய்ப்பு இல்லாமல் போனதால் சமீபத்தில் டிவி தொடர் இயக்குநர் பாலாஜி யாதவ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதேபோல பல காரணங்களை கூறுகின்றனர். ஆனால் தமிழில் இருந்து இதே ராதிகாவும், இன்னும் சில தயாரிப்பாளர்களும் தெலுங்கு டிவி சேனல்களில் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புகின்றனரே அதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்? என்று தெலுங்கு டிவி தொடர் தயாரிப்பாளர்கள் கேட்பது யார் காதிலாவது விழுகிறதா?