சென்னை: தென்னிந்திய சினிமாவில் நடிகர்களின் அரசியல் வருகை என்பது புதிய விஷயம் அல்ல. திரைத்துறையில் உச்சத்தை தொட்ட பலர் அரசியலிலும் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். சிலர் ஆட்சியையே பிடித்துள்ளனர். சிலருக்கு ரசிகர்களின் பேராதரவு இருந்தும் அரசியல் கைகொடுக்கவில்லை. இப்படியான சூழலில், முன்னணி வாரிசு நடிகர் ஒருவரின் சமீபத்திய பேச்சு, அவர் அரசியல் பயணத்துக்குத் தயாராகி வருகிறாரா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
அண்மையில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் கலந்து கொண்டு பேசிய அவர், வழக்கமான நன்றி உரையைத் தாண்டி ரசிகர்களுக்கே நேரடியாக சில அறிவுரைகளை வழங்கியிருந்தார். குறிப்பாக, "உங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு உதவுங்கள்... உங்கள் தெருவில், உங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்..." என்ற அவரது வார்த்தைகள், ரசிகர்களை சமூகப் பணிகளுக்கு தயார்படுத்தும் வகையில் இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா நிகழ்ச்சியில் பேசப்பட்ட அந்த சில நிமிட உரை, சமூக வலைதளங்களில் வேறு கோணத்தில் விவாதிக்கப்படுகிறது. ரசிகர் மன்றத்தை மக்கள் சேவைக்கான அமைப்பாக மாற்றும் முயற்சியின் தொடக்கம்தான் இதுவா? அல்லது அடுத்த சில ஆண்டுகளை மனதில் வைத்து போடப்படும் அரசியல் அடித்தளமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
அந்த நடிகர் ரூட்டா?: கடந்த சில ஆண்டுகளில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த ஒரு முன்னணி நடிகர் மிகக் குறுகிய காலத்திலேயே பெரிய அரசியல் வெற்றியைப் பெற்ற சம்பவம், மற்ற நடிகர்களுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ரசிகர் பலத்தை அரசியல் பலமாக மாற்ற முடியும் என்ற எண்ணம் தற்போது பலரிடமும் உருவாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்களே கூறுகின்றன. அதிலும் குறிப்பாக, இந்த வாரிசு நடிகருக்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ரசிகர் வட்டம் மிகவும் வலுவானது. ரசிகர் மன்ற அமைப்பும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், அதை சமூக சேவை தளமாக மாற்றும் முயற்சிகள் எதிர்காலத்தில் அரசியல் நகர்வுக்கான முன்னோட்டமாக அமையலாம் என்ற பேச்சுகளும் கிளம்பியுள்ளன. நேரடி அறிவிப்பு?: இதுவரை அவர் அரசியல் குறித்து நேரடியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், சமீபத்திய பேச்சுகள், ரசிகர்களை ஒருங்கிணைக்கும் விதம், சமூக சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறை ஆகியவற்றைப் பார்த்தால், அடுத்த கட்ட நகர்வை மிக அமைதியாக திட்டமிட்டு வருகிறாரோ என்ற யூகங்கள் திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவி வருகின்றன. 2031 இலக்கா?: இதெல்லாம் உண்மையிலேயே அரசியலுக்கான ஆரம்ப சிக்னலா? அல்லது ரசிகர்களை நல்ல செயல்களில் ஈடுபடுத்தும் ஒரு சாதாரண அறிவுரையா? என்பது வரும் காலங்களில் தான் தெரியவரும். ஆனால், 2031-ஐ நோக்கி இன்னொரு நடிகரின் அரசியல் பயணம் தொடங்கப்போகிறதா என்ற கேள்வி மட்டும் இப்போதே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.More Articles