சென்னை: நடிகை தமன்னாவை ரசிகர்கள் பல ஆண்டுகளாகவே "மில்கி பியூட்டி" என்று அழைத்து வருகிறார்கள். ஆனால், அதே வார்த்தையை மூத்த பாலிவுட் நடிகர் அன்னு கபூர் பயன்படுத்திய விதம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது அதுகுறித்து அன்னு கபூர் விளக்கம் அளித்திருப்பதுடன், தனது பேச்சால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
தமன்னா சமீபத்தில் நடித்த 'ஆஜ் கி ராத்' பாடல் நாடு முழுவதும் மிகப்பெரிய ஹிட்டானது. அந்த பாடலில் அவரது நடனமும், கவர்ச்சியான தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பலரும் சமூக வலைதளங்களில் அந்த பாடலை கொண்டாடிய நிலையில், நடிகர் அன்னு கபூரும் அந்த பாடல் குறித்து பேசியிருந்தார்.
அண்மையில் அளித்த பேட்டியில், "அந்த பாடலை பார்த்த பிறகு தமன்னாவின் ரசிகனாகவே மாறிவிட்டேன். அவரது அழகையும் உடலமைப்பையும் பார்த்து வியந்துபோனேன்" என்று கூறியிருந்தார். அதோடு, தமன்னாவை "பால் போன்ற மேனி கொண்டவர்" என்று இந்தியில் குறிப்பிட்டதும் சர்ச்சைக்கு காரணமாகியது.
அந்த நேர்காணலில், "இந்த பாடலை பார்த்த இளைஞர்களுக்குத் தூக்கம் வரவில்லை" என்று தமன்னா முன்பு கூறியிருந்த கருத்து பற்றி கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த அன்னு கபூர், "அவரது பால் போன்ற மேனியும் முகமும் இளைஞர்களுக்கு நிம்மதியாக தூங்க உதவுகிறது. அது ஒரு நல்ல விஷயம். அவருடைய அனைத்து ஆசைகளையும் கடவுள் நிறைவேற்றட்டும். எனது ஆசிகள் எப்போதும் அவருக்கு உண்டு" என்று கூறியிருந்தார். ஆனால் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பலருக்கும் பிடிக்கவில்லை. "உங்களுக்கு மகள்களும், பேத்திகளும் இருக்கிறார்கள். ஒரு நடிகையைப் பற்றி இப்படியா பேசுவீர்கள்?", "இது பாராட்டு இல்லை, எல்லை மீறிய மோசமான கருத்து" என்று பலரும் அன்னு கபூரை விமர்சித்தனர். சிலர் அவரது பேச்சை அநாகரிகமானது என்றும் கடுமையாக சாடினர். ஆங்கிலேயர்கள்: இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் இந்த சர்ச்சைக்கு அன்னு கபூர் விளக்கம் அளித்துள்ளார். "300 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வாழ்ந்ததன் தாக்கம் இன்னும் நம்மிடம் இருக்கிறது. ஆங்கிலத்தில் ஒருவரை பாராட்டினால் அது நாகரிகமாக தெரிகிறது. அதே கருத்தை இந்தியில் சொன்னால் மட்டும் அதை தவறாக பார்க்கிறார்கள். அரசியல் ரீதியாக நமக்கு 1947-ல் சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் மனரீதியாக இன்னும் ஆங்கிலேயர்களின் தாக்கத்தில் இருந்து முழுமையாக வெளிவரவில்லை" என்று அவர் கூறினார். விளக்கமும் மன்னிப்பும்: மேலும் தனது கருத்தை விளக்கிய அன்னு கபூர், "தமன்னாவை ஆங்கிலத்தில் 'மில்கி பியூட்டி' அல்லது 'மில்கி பாடி' என்று சொன்னால் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் அதையே இந்தியில் 'தூதியா பதன்' என்று சொன்னால் அது தவறாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நான் பேசிய வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தமன்னா எப்போதும் மகிழ்ச்சியாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பெரிய பஞ்சாயத்தை நல்லவேளையாக தடுத்துவிட்டது என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.More Articles