சென்னை: 'துள்ளுவதோ இளமை' படம் மூலம் அறிமுகமாகி, இன்று ஹாலிவுட், பாலிவுட் என உலகளவில் கொடிகட்டிப் பறப்பவர் நடிகர் தனுஷ். சிறந்த நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் எனப் பன்முக அவதாரங்களை எடுத்து அசத்தி வரும் தனுஷின் பெயர், தற்போது சினிமா பக்கங்களைத் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement

இதற்கு காரணம், சமீபத்தில் தனுஷின் அகில இந்திய தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தினர்தங்களது அதிகாரப்பூர்வ புதிய கொடி ஒன்றினை அறிமுகப்படுத்தியதுதான். சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் தனுஷ் இரு கைகளைக் கூப்பி வணக்கம் செலுத்துவது போன்ற மாஸான லுக் அதில் இடம்பெற்றுள்ளது. பரபரப்பு பின்னணி: இந்தக் கொடியின் வடிவமைப்பு ஒரு அரசியல் கட்சிக்குரிய பாணியில் கம்பீரமாக இருப்பதால், தனுஷ் அடுத்து அரசியலுக்கு வரத் தயாராகிவிட்டாரா? என்ற கேள்விகளையும், யூகங்களையும் ரசிகர்களிடமும் நெட்டிசன்களிடமும் பலமாக எழுப்பியுள்ளது.

Advertisement

நடிகர் தனுஷ்: இந்நிலையில், சமீபத்தில் சென்னை விமான நிலையம் வந்த நடிகர் தனுஷை செய்தியாளர் ஒருவர், சார், புதிய கொடியை அறிமுகம் செஞ்சிருக்கீங்க.. இது பிற்காலத்துல அரசியல் கட்சியா மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கா?" என அதிரடியாகக் கேள்வி எழுப்பினர்.ஆனால், இந்தக் கேள்விக்கு எவ்வித பதிலும் அளிக்காத தனுஷ், மிகவும் அமைதியாக, மவுனம் காத்தபடி வேகமாகத் தனது காரை நோக்கிச் சென்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தனுஷின் இந்த மவுனம், ரசிகர்களிடையே இன்னும் கூடுதலான சஸ்பென்ஸை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தந்த இன்ஸ்பிரேஷனா?: தமிழ்நாட்டில் சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், தனுஷின் இந்த நடவடிக்கை தற்போதைய சூழலில் பேசுபொருளாக மாற ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. நடிகர் விஜய் முதலில் தனது 'விஜய் மக்கள் இயக்கம்' மூலம் சமூகப் பணிகளைச் செய்து, பின் 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே தமிழக சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இன்று தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்து இருக்கிறார். விஜய்யின் இந்த அதிரடி அரசியல் வெற்றி, தற்போதைய முன்னணி நடிகர்கள் பலருக்கும் அரசியல் ஆசையையும், உத்வேகத்தையும் தூண்டியுள்ளது என்றே கூறலாம். அந்த வரிசையில், தனுஷ் ரசிகர்களின் இந்தத் திடீர் கொடி அறிமுகம், தமிழக அரசியலின் அடுத்த நகர்வா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.