சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி ஆந்திரப் பிரதேச சட்டசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் அதிரடியாகப் பணியாற்றினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் ரோஜா, 'ஜமா' படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன் இயக்கியுள்ள 'அன்பே டயானா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோஜா, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பேசி உள்ளார்.

Advertisement

நடிகை ரோஜா: அதில், ஒரு நடிகராக வரும் போது நடிப்பு, டான்ஸ் எதுவுமே தெரியாது, இரண்டு,மூன்று படம் நடித்த பிறகு எல்லாம் தெரிந்து கொள்வார்கள். அதுப்போலத்தான் விஜய் இப்பொது அரசியலுக்கு வந்து இருக்கிறார். அவருக்கு ஒரு ஆறு மாதம் டைம் கொடுக்க வேண்டும். அது கொடுக்காமல், வந்ததுமே அவர் அது செய்யவில்லை, இது செய்யவில்லை என குறை சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி, ஆனால், மக்கள் அனைவரும் அரசியலில் என்ன நடக்கிறது என்தை கவனித்துக்கொண்டு தான் இருப்பார்கள் என்றார்.

Advertisement

பிச்சி உதறுறார்: தொடர்ந்து பேசிய ரோஜா, விஜய் முதலமைச்சரானது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. நான் அவருடன் ஒரே ஒரு பாடலுக்கு தங்க நிறத்துக்குத்தான் பாடலில் மட்டும் அவருடண் இணைந்து நடனமாடி இருக்கிறேன். அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது நான் அவரை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் யாரிடமும் அதிகமாகப் பேசவே மாட்டார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் கூட, ஒரு மூலையில் மிகவும் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பார். ஆனால், இப்போது விஜய் பயங்கரமாகப் பேசுகிறார். பொதுவாக அமைதியாகவே இருப்பவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள். அதேபோலத்தான் விஜய் அரசியலுக்கு வருவார் என்று யாருக்குமே தெரியாது.

Advertisement

நம்ப வீட்டு பையன்: ஆனால், அவர் திடீரெனத் தனியாகக் கட்சியை ஆரம்பித்து இருப்பதாக அறிவித்த உடனே நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ஏனென்றால், அவர் மிகவும் அமைதியானவர், அதிகமாகப் பேசமாட்டார், எப்போதும் அமைதியாகவே இருப்பார். அரசியலுக்கு வந்து விட்டால் மக்கள் மத்தியில் அதிகம் பேச வேண்டும், விஜய் எப்படிப் பேசப் போகிறார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், இப்போது ஒவ்வொரு மீட்டிங் வகையிலும் அவர் பிச்சி உதறுகிறார். அண்மையில் பெரம்பூர் தொகுதியில் கூட அவர் நன்றாக பேசியிருந்தார், ஒரு கட்சியின் தலைவராக அவர் பேசும் விதம் நன்றாக இருந்தது, எனக்கு பிடித்து இருக்கிறது. ஆந்திராவில் ஜெகன் சார் அப்படித்தான் பேசுவார். அவர் பேசுவதை கேட்கும் போது மக்கள் மனதில் நன்றாக பதிவும், நம்ம வீட்டு பையன் என்ற எண்ணம் வரும், இதனால், மக்களும் அவருக்கும் ஒரு பிணைப்பு ஏற்படும் அதுப்போலத்தான் விஜயின் பேச்சு இருக்கிறது என்று ரோஜா விஜய்யின் அரசியல் பேச்சாற்றலைப் பாராட்டி உள்ளார். அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நடிகை ரோஜா நடித்து இருக்கும் அன்பே டயனா படத்தில் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.