சென்னை: சினிமாவில் பல தசாப்தங்களாக தனது அசாத்திய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக முத்திரை பதித்தவர் நடிகை ஊர்வசி. கோபிநாத் உடனான பிரத்யேக நேர்காணல் ஒன்றில், தற்போதைய சினிமா போக்கு மற்றும் கவர்ச்சி கலாச்சாரம் குறித்து மிகவும் தைரியமாக பேசி உள்ளார்.

Advertisement

திரையில் கதாநாயகி அரைகுறையான ஆடை அணிந்து, சுற்றிலும் பல நடனக் கலைஞர்களுடன் நடனமாட, கதாநாயகனும் அவருடன் சேர்ந்து ஆடுகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் கணவருக்கு எப்படிப்பட்ட உணர்வு தோன்றும்? தன்னுடைய மனைவி இப்படி அரைகுறையாக ஆடுகிறாளே என்ற எண்ணம் ஏற்படுமா, ஏற்படாதா? சாதாரண வாழ்க்கையில் ஒரு கணவன் தன் மனைவியுடன் வெளியில் செல்லும்போது ஆடை கொஞ்சம் விலகிவிட்டாலே அந்தப் புருஷன் எவ்வளவு கோவப்படுவார். ஆனால், சினிமாவில் அந்த எண்ணம் வரவே வராது.

Advertisement

நடிகை ஊர்வசி பேட்டி: சினிமா என்பது இப்போது வியாபாரத்தை மட்டுமே பார்ப்பதால், கவர்ச்சி என்பது தற்போதைய சூழலில் பெரிய விஷயமாக மாறிவிட்டது. அதிலும் அதிக பட்ஜெட் திரைப்படங்களில், தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலுமே கமர்சியல் படங்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதேநேரம் மலையாளம், பெங்காலி மொழித் திரைப்படங்களில் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, படைப்பாளர்களை முதன்மைப்படுத்தும் படைப்புகளை வழங்குவார்கள். அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், ஹரிஹரன் போன்ற ஒரு இயக்குநரின் பெயரைச் சொல்லித் தான் அங்கு படங்கள் ஓடுகின்றன.

Advertisement

கமல்ஹாசன் கொடுத்த தைரியம்: ஆனால், தென்னிந்திய மொழிகளில் இயக்குநர்களின் பெயரை சொல்லி எந்த படங்கள் ஓடுகின்றன. ஆனால்,இங்கேயும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, கதைகளுக்கு முதன்மை தந்த காலக்கட்டம் இருந்தது. மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஒரே ஒரு வில்லனை வைத்து, மூன்று பெண்களை மட்டுமே நம்பி ஒரு தயாரிப்பாளர் படம் எடுத்தார். அந்த தயாரிப்பாளர் கமல்ஹாசன். உடலைக் காட்டாத அந்த மூன்று நடிகைகளை வைத்து படம் தயாரித்தது கமல்ஹாசனின் தைரியம்என நடிகை ஊர்வசி, கோபிநாத் உடனான நேர்காணலில் பேசியுள்ளார்.

பரிமளா அண்ட் கோ: சீனியர் நடிகையான ஊர்வசி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரைப் பெற்றவர். சில ஆண்டுகள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அவர், தற்போது மீண்டும் மறுபிரவேசம் செய்து அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜெயராமுடன் அவர் இணைந்து நடித்த 'பரிமளா அண்ட் கோ' திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படத்தில் ஊர்வசியின் கதாபாத்திரமும், அவரது உடல்மொழியும் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் இருந்தது. அதுவே படத்தின் வெற்றிக்கு காரணமா என சொல்லலாம்.