மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் தனது நீண்ட நாள் காதலியான கௌரி ஸ்ப்ராட்டை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. திருமணத்தைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வரும் நிலையில், 'லவ் ஜிகாத்' குற்றச்சாட்டுகளுக்கும், மத ரீதியான விமர்சனங்களுக்கும் தற்போது அமீர் கான் நேரடியாக பதிலளித்துள்ளார்.

Advertisement

அமீர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அதன் பிறகு தனது நீண்ட நாள் தோழியான கௌரி ஸ்ப்ராட்டை கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அதற்கு அடுத்தே சர்ச்சைகளும் தலைதூக்க ஆரம்பித்தன.

Advertisement

குறிப்பாக, ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்து மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். சில அமைப்புகள் இதை 'லவ் ஜிகாத்' விவகாரமாக சித்தரித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தன. இதனால் இந்த திருமணம் அரசியல் மற்றும் மத ரீதியிலும் விவாதப் பொருளாக மாறியது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு அமீர் கான் விளக்கம் அளித்துள்ளார். "ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகிய இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து கொடுத்த பிறகுதான் கௌரியை திருமணம் செய்தேன். ஆனால் பலர் நினைப்பது போல அவர் இந்து இல்லை. அவர் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அதே நேரத்தில் எந்த மத சடங்குகளையும் அவர் பின்பற்றுவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

லவ் ஜிகாத்தா?: அதுமட்டுமல்லாமல், "என் மீது கூறப்படும் லவ் ஜிகாத் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. எனது இரண்டு சகோதரிகளும் இந்துக்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். எனது மகளும் ஒரு இந்துவைத்தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். எனது மருமகன் ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்துள்ளார். நான் திருமணம் செய்த மூன்று பெண்களையும் ஒருபோதும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. எங்களது குடும்பம் மதச்சார்பற்ற சிந்தனையுடன் வாழ்ந்து வருகிறது. எங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றும் அமீர் கான் கூறியுள்ளார்.

Advertisement

ஃபத்வா பிறப்பிப்பு: இதற்கிடையில், இந்த திருமணத்திற்கு எதிராக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தருல் இஃப்தாவைச் சேர்ந்த ஷாஹி தலைமை முஃப்தி மௌலானா இப்ராகிம் ஹுசைன் ஃபத்வா பிறப்பித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி முஸ்லிம் அல்லாத பெண்ணை திருமணம் செய்வது அனுமதிக்கப்படாது என்றும், அமீர் கானின் திருமணம் அந்த விதிகளுக்கு முரணானது என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றச்சாட்டு: மறுபுறம், இந்து மதத் தலைவர் சுவாமி பரமஹம்சா வெளியிட்ட கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமீர் கான் இந்துப் பெண்களை திருமணம் செய்து லவ் ஜிகாத் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், நடிகருக்கு எதிராக கடுமையான கருத்துக்களையும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.