சென்னை: சமூக வலைத்தளங்களில் தங்களது சுயலாபத்திற்காகவும், வியூஸ்களுக்காகவும் பிரபலங்களின் குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகளைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடிகை குஷ்பு சுந்தர் தற்போது மிகக் கடுமையான கண்டனப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில், தனது குடும்பப் புகைப்படத்தைப் பகிர்ந்து இருக்கும் குஷ்பு, இது என் குடும்பம். அன்பு, நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையில் உருவானது. இன்று நாங்கள் இருக்கும் நிலையை அடைய, நாங்கள் பல போராட்டங்களைச் சந்தித்தோம்; உடல் வருந்தக் கடினமாக உழைத்தோம்; ரத்தமும் வியர்வையும் சிந்தினோம். சில சமயங்களில் நாங்கள் தடுமாறியிருக்கலாம், தோல்வியடைந்திருக்கலாம் அல்லது கீழே விழுந்திருக்கலாம்; ஆனால், மீண்டும் முழு வீச்சோடு போராடி வெற்றி பெறுவதை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை.

Advertisement

Photo Credit:

குஷ்பு பதிவு: எங்கள் குழந்தைகளை மிகுந்த அக்கறையுடன் வளர்த்தோம்; அவர்கள் வெற்றியால் திசைதிருப்பப்படுவதையோ அல்லது பிரபலங்களின் குழந்தைகள் என்ற அந்தஸ்தை அனுகூலமாகப் பயன்படுத்திக்கொள்வதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவர்கள் யார் என்பதை வைத்து அவர்கள் ஒருபோதும் எந்தச் சலுகையையும் பெற முயன்றதில்லை. எங்கள் குழந்தைகளை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.

தாயை சீண்டாதீங்க: ஒரு தாயாக, யாரோ ஒரு அற்ப மனிதர் என் குழந்தைகளை அவமதிக்கவோ, மரியாதையின்றி நடத்தவோ அல்லது வெறும் இரண்டு நிமிட மலிவான விளம்பரத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளவோ நான் அனுமதிக்க மாட்டேன்; அனுமதிக்கவும் மாட்டேன். இத்தகையவர்களின் மனநிலை மிகவும் மோசமானது, தரம் தாழ்ந்தது மற்றும் நாகரிகமற்றது. அவர்கள் பேசும் அதே மொழியிலும் அதே பாணியிலும் பதிலடி கொடுக்க எனக்குத் தெரியும், ஆனால், நான் அதைச் செய்ய மாட்டேன். என் தாயையும் அவர் எனக்கு அளித்த வளர்ப்பையும் அவமதிக்க நான் விரும்பவில்லை. ஆனால், நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக, உங்கள் அருவருப்பான, கேவலமான மனநிலையை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு தாயை ஒருபோதும் சீண்டாதீர்கள். நினைவில் கொள்ளுங்கள், ஒரு தாய் காயமடைந்த புலி போன்றவள்; தன் குட்டிகளைக் காக்க அவள் பாய்ந்து தாக்கி அழித்துவிடுவாள் என எச்சரித்துள்ளார்.

Advertisement

இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது: இந்தச் செய்தி, என் குழந்தைகளையும் குடும்பத்தையும் பயன்படுத்திச் சில ஃபாலோயர்களையும் கேலிச் சிரிப்புகளையும் பெற நினைக்கும் அந்தத் தரம் தாழ்ந்த நபருக்கானது மட்டுமல்ல; தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றப் பணம் சம்பாதிப்பதற்காக எங்களைப் பற்றி அமர்ந்து பேசும் அந்த 'யூடியூபர்கள்' அனைவருக்கும் இது ஒரு தெளிவான செய்தி. இனிப் பொறுத்துக்கொள்ள முடியாது. இன்று நமக்காக நாமே குரல் கொடுக்காவிட்டால், இந்த மட்டமான மனிதர்கள் நம்மை மிதித்துச் செல்வார்கள் என்று கொந்தளித்துள்ளார்.