சென்னை: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதற்குப் பிறகே இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், போராட்ட சூழலை மேலும் அரசியல் ரீதியாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பா ரஞ்சித் ட்வீட்: இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "ஒவ்வொரு முறையும் ஜனநாயகம் ஒரு சவாலை வென்று நிற்கும் போது, அது டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மேதைத்தனத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. அதிகாரம் எப்போதும் மக்களிடம் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதை அம்பேத்கர் தொடர்ந்து கூறிக்கொண்டு இருந்தார். அதற்காகவே தலைமுறைகள் கடந்தும் அந்தக் கொள்கையை பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியாவுக்கு வழங்கினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலத்திற்கு: அதோடு, "இன்றைய வெற்றி என்பது அரசியல் அதிகாரத்தை விட அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகளே நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதற்கான நினைவூட்டல்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹேஷ்டேக்குகள்: இறுதியாக, "#CockroachesWon", "Jai Bhim", "#BanNEET" என்ற ஹேஷ்டேக்குகளையும் இணைத்து தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்திற்கு தொடக்கம் முதலே ஆதரவு தெரிவித்து வந்த பா. ரஞ்சித், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்குப் பிறகு வெளியிட்ட இந்த பதிவு தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.More Articles