சென்னை: சினிமா துறையிலிருந்து நான்காவது ஆளாக தமிழ்நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கிறார் விஜய். அவரது செயல்பாடுகள் விமர்சனத்தையும் பாராட்டையும் ஒருசேர சந்தித்துவருகிறது. இதற்கிடையே அவருக்கு திரைத்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் எனவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பேரரசு செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கிறார்.

Advertisement

தமிழ்நாட்டின் முதலமைச்சராக சில மாதங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார் விஜய். ஜெயலலிதா மரணம், அதற்கு பிறகு நடந்த கூவத்தூர் கூத்து ஆகிய விஷயங்களில் தமிழ்நாடு அரசியல் களமும், ஊடகங்களும் எப்படி பரபரப்பாக இருந்தனவோ அதேமாதிரிதான்; பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் பட்ட பாட்டின்போதும் இருந்தது. ஒருவழியாக தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்து முதலமைச்சராக பதவியேற்றார்.

Advertisement

Photo Credit:

ஐந்து வருடங்கள் செல்லும்: விஜய்யின் ஆட்சி அமைந்ததிலிருந்தே எதிர்க்கட்சியினர்; இந்த ஆட்சி இன்னும் ஆறு மாதங்களில் முடிந்துவிடும்; இரண்டு வருடங்களில் முடிந்துவிடும் என பேசிவருகிறார்கள். ஆனால் விஜய்யின் செயல்பாடுகளுக்கு மக்களிடம் இருக்கும் எண்ணத்தை பார்க்கும்போதும்; கூட்டணி கட்சியினர் அவருடன் இணக்கமாக செல்வதை பார்க்கும்போதும் கண்டிப்பாக ஐந்து வருடங்கள் இந்த தவெக கூட்டணி ஆட்சி நிறைவு செய்யும் என கருத்து எழுந்திருக்கிறது.

விமர்சனமும், பாராட்டும்: அவரது ஆட்சி சமீப நாட்களாக கடும் விமர்சனத்தை சந்தித்துவருகிறது. சில நாட்களுக்கு முன்பு கரூரில் பேசியபோது, 'லஞ்சம் கொடுக்கமாட்டேன் என சொல்லுங்கள். உங்கள் பின் நான் இருக்கிறேன்' என விஜய் சூளுரைத்திருந்தார். ஆனால் சில நாட்களிலேயே தவெக நிர்வாகி ஒருவர் லஞ்சம் கேட்ட ஆதாரங்கள் வெளியாகின. அதேபோல், கடந்த திமுக ஆட்சியில் நிகழ்ந்த லாக் அப் மரணங்களை கடுமையாக சாடியிருந்தார் விஜய்.

Advertisement

ஆனால் இவரது ஆட்சியிலேயே விசாரணை கைதியாக அழைத்து செல்லப்பட்ட மாற்று திறனாளி சபரி வர்மன் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். அது பெரிய விமர்சனத்தை கிளப்பியிருக்கிறது. மேலும், ஏகப்பட்ட கொலைகள், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிவருகின்றன. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சட்ட ஒழுங்கு இப்படி சந்தி சிரிக்கிறதே என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் போகப்போக சரியாகிவிடும் என்பது விஜய் ஆதரவாளர்களின் கருத்து.

திரைத்துறையினரின் ஏற்பாடு: இதற்கிடையே சினிமாவிலிருந்து ஒருவர் முதலமைச்சராகியிருப்பதால்; திரைத்துறையை சேர்ந்தவர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அடிக்கடி சந்திப்பும் நிகழ்கிறது. அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்துவதற்கும் முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் அதுகுறித்து இயக்குநர் பேரரசு செய்தியாளர்களிடம் ஓபனாக கூறியிருக்கிறார்.

Advertisement

பேரரசு சொன்னது: அவர் பேசுகையில், "விஜய்க்கான பாராட்டு விழாவில் இயக்குநருக்குத்தானே முதல் பங்கு இருக்கும். முதலில் நாங்கள்தான் அந்த கோரிக்கையை வைத்தோம். அதற்கு பிறகு தயாரிப்பாளர்கள். ஏனெனில் இயக்குநர் இல்லாமல் ஒரு ஹீரோ பெரிய ஆளாக வளர்ந்துவிட முடியாது. இயக்குநரின் கற்பனைதான் எம்ஜிஆர், ரஜினி, விஜய் உருவானார்கள். அவர்கள்தான் வெற்றிக்கு காரணம். நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். விஜய் தரப்பு ஆர்வமாக இருப்பதாக தெரியவில்லை. தயக்கமாக இருக்கிறது. நாங்கள் வற்புறுத்த வேண்டியதாக இருக்கிறது" என்றார்.