சென்னை: 72வது தேசிய விருதுகள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அவற்றில் ராயன், மெய்யழகன்,கேப்டன் மில்லர், அமரன் உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் கிடைத்தன. ஆனால் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நந்தன், லப்பர் பந்து உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் நந்தன் இயக்குநர் இரா.சரவணன் காட்டமான பதிவை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தன் முகநூலில், "ஒளிப்பதிவாளர் செழியனின் மறைவு என்னை நிலைகுலைய வைத்தது. அவரைச் சடலமாகப் பார்க்கிற தைரியம் இல்லை. அவருக்கும் எனக்குமான வாட்ஸாப் பகிர்வுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். "நந்தன் படத்தை அவசியம் தேசிய விருதுக்கு அனுப்பி வை. நிச்சயமா அவார்ட் அடிக்கும். தரமா வந்திருக்கு..." என அண்ணன் அனுப்பி இருந்த குறுந்தகவலைத் தடவிப் பார்த்து தழுதழுத்தேன்.
செழியன் அண்ணன் மட்டுமல்ல, திரைத்துறையின் இன்னும் சில ஆளுமைகளும் 'நந்தன்' படத்தை தேசிய விருதுக்கு அனுப்பச் சொல்லி இருந்தார்கள். சமீபத்திய விருது அறிவிப்பு வெறுமையை உருவாக்கி இருந்தாலும், நிச்சயமாக அது 'நந்தன்' குறித்த கவலைக்காக அல்ல. விருதுப் பட்டியலில் நான் நம்பிக்கையோடு எதிர்பார்த்த தரமான படங்கள் நிறைய... தேசிய விருதுகள்... கலையைக் கொண்டாடுகின்றனவா? அதிகாரத்தின் ரசனையைக் கொண்டாடுகின்றனவா? ஒரு நாட்டின் தேசிய திரைப்பட விருது என்பது அந்த ஆண்டின் பெரிய ஹிட் படங்களை மீண்டும் பாராட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல.
கலையை அடையாளம் காண: அதற்கான வேலையை மக்கள் ஏற்கனவே செய்துவிட்டார்கள். டிக்கெட் வாங்கி பார்த்துவிட்டார்கள். கோடான கோடி வசூல் கொடுத்துவிட்டார்கள். OTT-யில் ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள். சோஷியல் மீடியாவில் கொண்டாடிவிட்டார்கள். அதற்கு மேல் ஒரு தேசிய விருது எதற்காக? சந்தை கவனிக்கத் தவறிய கலையை அடையாளம் காணத்தானே விருதுக்கண்கள் வேண்டும்?
அப்படித்தானே பார்த்தோம்: ஒரு சிறிய கிராமத்தில், மிகக் குறைந்த பட்ஜெட்டில், எந்த நட்சத்திரமும் இல்லாமல், சமூகத்தின் ஒரு வலியைப் பதிவு செய்த ஒரு திரைப்படம்... பத்து திரையரங்குகள்கூட கிடைக்காமல் மறைந்து போகலாம். அப்படிப்பட்ட படைப்பாளியிடம் ஒரு நாடு சொல்ல வேண்டியது ஒரே வார்த்தைதான்: "நாங்கள் உங்களைப் பார்த்தோம்." அதுதான் தேசிய விருதின் உண்மையான அர்த்தம். ஆனால், இன்று அந்த அர்த்தம் மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது. 'அந்திமந்தாரை'யையும், 'காஞ்சிவரத்தை'யும் நாம் தேடித் தேடிப்போய் பார்த்தது தேசிய விருதுக்குப் பிறகுதானே...
அக்கிரம அறிவிப்புகள்: "நீங்கள் கவனிக்கத் தவறிய படத்தை நாங்கள் தங்கத் தாம்பலத்தில் வைத்து நீட்டுகிறோம்..." என்றல்லவா அப்போதெல்லாம் தேசிய அங்கீகாரங்கள் அறிவிக்கப்படும். இன்று அதே அங்கீகாரங்கள் கலாநிதி மாறனின் சன் நிறுவனத்தையும், பக்கா கமர்ஷியல் படத்தையும் கொண்டாடி அல்லவா கொடுக்கப்படுகின்றன... "இப்படித்தான் கொடுப்போம்... உங்களால் என்ன செய்ய முடியும்?" என ஒவ்வொருவரின் சட்டையைப் பிடிக்கிற அக்கிரம அறிவிப்புகள் அல்லவா இவை...
அதிலிருந்து விலகுகிறது: இது கமர்ஷியல் சினிமாவுக்கு எதிரான விமர்சனம் அல்ல. நல்ல கமர்ஷியல் படம் நிச்சயமாக தேசிய விருது பெறலாம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமாவின் மிகவும் துணிச்சலான, மிகவும் புதிய, மிகவும் அவசியமான படைப்புகளைவிட, ஏற்கனவே சந்தையில் வெற்றி பெற்ற படங்களே தேசிய அங்கீகாரத்தின் மையமாக மாறினால், அந்த விருது தனது அடிப்படை நோக்கத்திலிருந்து விலகுகிறது.
சினிமாவை மதிப்பிடுகிறதா?: தேசிய விருதின் வேலை, சந்தையின் தீர்ப்பை மீண்டும் அறிவிப்பது அல்ல.சந்தை தவறவிட்ட கலைஞர்களைக் கண்டுபிடிப்பது. ஓர் அரசு வழங்கும் விருதாக இருப்பதால், அதன் தேர்வுகள் அரசியல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை ஆகிவிட முடியாது. ஒவ்வொரு முறையும் அதிகாரத்திற்கு நெருக்கமான தேசிய உணர்வுகளைப் பேசும் திரைப்படங்கள் அதிக அங்கீகாரம் பெறும்போது, இயல்பாகவே மக்கள் கேள்வி கேட்பார்கள். இந்த விருது சினிமாவை மதிப்பிடுகிறதா?
எந்த அடிப்படையில்?: ஒரு குறிப்பிட்ட அரசியல் பார்வைக்கு ஏற்ற சினிமாவை மதிப்பிடுகிறதா? அந்த சந்தேகத்தை உருவாக்குவது மக்கள் அல்ல. அந்த சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது விருது வழங்கும் அமைப்பின் பொறுப்பு. வெளிப்படைத்தன்மை இல்லாத இடத்தில் நம்பிக்கை ஒருபோதும் உருவாகாது. ஒரு திரைப்படம் ஏன் தேர்வு செய்யப்பட்டது? மற்ற திரைப்படங்களைவிட எந்த அடிப்படையில் அது முன்னிலை பெற்றது?
இது ஒரு வாய்ப்பு: இந்தக் கேள்விகளுக்கான தெளிவான விளக்கங்கள் இல்லாதபோது, எந்த முடிவும் விவாதத்திற்கு உள்ளாகும். தேசிய விருது என்பது வெறும் கோப்பை அல்ல. அது ஒரு நியாயமான கலைஞனின் பயணத்தைத் தொடரச் செய்யும் நம்பிக்கை. ஒரு சிறிய இயக்குநருக்கு தயாரிப்பாளரைத் தேடித்தரும் அங்கீகாரம். ஒரு பிரச்னைக்குக் கிடைக்கிற பரந்துபட்ட பார்வை. ஒரு நெடுந்துயருக்கான தீர்வு. ஒரு மறைக்கப்பட்ட மொழியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு.
அப்படித்தான் இருக்க வேண்டும்: அதை நாம் வெறும் இன்னொரு 'அவார்டு ஷோ'வாக மாற்றிவிட்டால், இழப்பது ஒரு விருதின் மதிப்பு மட்டும் அல்ல. இந்திய சினிமாவின் கலைப் பன்மை. நான் இதைச் சொல்வது, என் படங்களுக்கு விருது வேண்டும் என்பதற்காக அல்ல. நல்ல படங்களுக்கு, புறந்தள்ளப்பட்ட தரமான படைப்புகளுக்குக் கவனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக... வணிக சினிமாவுக்குச் சந்தை இருக்கிறது.சிறிய கலைப் படங்களுக்கு பெரும்பாலும் சந்தை இருப்பதில்லை. அவர்களுக்காகத்தான் தேசிய விருதுகள் இருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் தேசிய விருதின் தரத்தை, எந்தப் பெரிய ஹீரோவுக்கு அந்த விருது கொடுக்கப்பட்டது என்பதைக்கொண்டு அளவிடக் கூடாது. இந்த நாடு யாரை கவனிக்காமல் விட்டுவிடவில்லை என்பதைக் கொண்டு அளவிட வேண்டும். ஏனென்றால்... ஒரு தேசிய விருது என்பது வெற்றியாளர்களை உருவாக்குவதற்காக இல்லை.ஏற்கனவே வெற்றி பெற முடியாமல் போன உண்மையான கலைஞர்களை வரலாறு மறந்துவிடாமல் பாதுகாப்பதற்காக" என குறிப்பிட்டிருக்கிறார்.
More Articles
- மிஸ்ஸான தேசிய விருது.. உச்சகட்ட அப்செட்டில் தமாஸ் நடிகர்.. போட்டி நடிகர் முகத்துக்கு நேரா சம்பவம் மிஸ்ஸிங்
- ராதாரவி பொருளை எடுத்து அவரையே போட்டுட்டாரே விஷால்.. எவ்வளவு நேக்கா சொல்றாருனு பாருங்க!
- Vishal: விருதுகளும் எருமை சாணியும் ஒன்னு.. எனக்கு கொடுத்தால் குப்பை தொட்டியில் போடுவேன்.. விஷால் விளாசல்!
- பல ஆண்டு காத்திருப்பு.. தேசிய விருதை பெற்ற ஷாருக்கான்.. 12th ஃபெயில் நடிகருக்கு தேசிய விருது!
- 71st National Film Awards: ஜி.வி பிரகாஷ், எம்.எஸ் பாஸ்கர், ஊர்வசி தேசிய விருதை பெற்றனர்!
- National Awards - 2வது முறை தேசிய விருது.. நன்றி சொன்ன ஜிவி பிரகாஷ்.. யாருக்கு தெரியுமா?