சென்னை: சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளம் பெண்களையும், சின்னத்திரை நடிகைகளையும் குறிவைத்து ஏமாற்றும் 'டுபாகூர்' கும்பல்கள் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பக்தி படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, சின்னத்திரை நடிகை ஒருவரை ஹோட்டலுக்கு அழைத்து ஆடையின்றி போட்டோ எடுக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த நந்திராமநாதன் என்பவர் தன்னை ஒரு சினிமா தயாரிப்பாளர் என்று பலரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். தான் புதிதாகத் தயாரிக்கவிருக்கும் பக்தி படத்தில், அம்மன் வேடத்தில் நடிப்பதற்குப் புதுமுக ஆள் தேவைப்படுவதாக விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை நம்பி பக்தி படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஒரு சின்னத்திரை நடிகையை, ஆடிஷன் மற்றும் ஃபோட்டோஷூட் எடுக்க வேண்டும் என்று கூறி விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு நந்திராமநாதன் வரவழைத்துள்ளார்.

Advertisement

ஹோட்டலில் நடந்த: தயாரிப்பாளரின் பேச்சை நம்பிய சின்னத்திரை நடிகை விருகம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் அறைக்குச் சென்றுள்ளார். அங்கு நந்திராமநாதனுடன் சேர்ந்து இந்திராணி மற்றும் பார்திகா என்ற இரண்டு பெண்களும் இருந்துள்ளனர். அவர்கள் தங்களது செல்போன் கேமரா மூலம் அந்த நடிகையை பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதன் பின்னர், அந்த இரண்டு பெண்களும் நடிகையிடம், படத்தில் நீங்க அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும். அதனால் உங்கள் உடலில் எந்தவொரு தழும்பும் இருக்கக் கூடாது. நீங்கள் அணிந்திருக்கும் ஆடையைச் சற்று விலக்கினால் தான் உடலில் தழும்புகள் ஏதும் இருக்கா என்பதை எங்களால் பார்க்க முடியும் என்று கூறியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் சினிமா வாய்ப்பு வேண்டும் என்றால் இப்படி ஆடை இன்றி எடுக்கப்படும் புகைப்படங்கள் தான் உதவும் என்று கூறி அந்த நடிகையை வற்புறுத்தி உள்ளனர்.

Advertisement

பிடிபட்ட கும்பல்: இரண்டு பெண்களின் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நடிகை, எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று மறுத்துள்ளார். ஆனால், அறைக்கு வந்த தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் மற்றும் அவருடன் இருந்த இந்திராணி, பார்திகா ஆகிய மூவரும் சேர்ந்து நடிகை, சினிமா வாய்ப்பு என்ன சும்மா வருமா... இப்படி எல்லாம் போட்டோ எடுத்தா தான் வரும் என்று சொல்லி ஆடையின்றி புகைப்படம் எடுக்கக் கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனால் பயந்துபோன நடிகை, கூச்சலிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடிவந்துள்ளார். பின்னர், தனக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் குறித்துச் சென்னை காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Advertisement

தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பெண் சிறப்புப் படை போலீசார், விடுதி அறையில் பதுங்கியிருந்த போலி தயாரிப்பாளர் நந்தி ராமநாதன், தரமணி பகுதியைச் சேர்ந்த இந்திராணி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த கேமரா பெண் பார்திகா ஆகிய மூவரையும் பிடித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.