சென்னை: பாடகி ஜானகி அம்மாள் மறைவு மொத்த இந்திய திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடலுக்கு கர்நாடக அரசு, அரசு மரியாதை வழங்கி கௌரவித்து இறுதி ஊர்வலத்தை நடத்தியது. ஜானகி அம்மாவின் மறைவு ரசிகர்கள் தொடங்கி திரை ஜாம்பவான்கள் வரை அனைவரும் தங்களது வாழ்க்கையில் ஜானகி அம்மாவுக்கு எப்படியான இடம் உள்ளது என்பது குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

அந்த வகையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜானகி அம்மா குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், " பல கோடி ரசிகர்களைப் போல ஜானகி அம்மாவின் மறைவால் அதிர்ச்சியும் துயரமும் என்னை ஆட்கொண்டுவிட்டது. அவரின் இசை ஆளுமை என்பது ஐந்து தசாப்தங்களுக்கு மேல் உள்ளது. பலபேரைப் போல நானும் அவர்களின் பாடல்கள் கேட்டுத்தான் வளர்ந்துள்ளேன்.

Advertisement

ஒரு பாடகராக அவர் குறித்து எனக்குத் தெரியும், என்னவென்றால் மென்மையான பாடல்களைப் பாடும் போது பாடகர்களிடம் இனிமையாக பாடச் சொல்வோம். ஆனால் சத்தமாக பாடும் போதும் கூட, அதாவது உச்சக் குரலில் பாடும் போதும் கூட மிகவும் இனிமையாக இருக்கக் கூடிய ஒரே குரல் அவருடையது. வெகு சில பாடகர்களுக்கு மட்டும் தான் அப்படியான திறமையும் ஆசீர்வாதமும் உள்ளது.

அவரது குரலும் வார்த்தைகளை உச்சரிக்கும் விதமும் காதைக் கடந்து இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அவர்களின் இந்த திறமை பல இசையமைப்பாளர்களை மேலும் சிறப்பான இசையை உருவாக்க உந்தியது. இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவரது குரல்களில் உருவான பாடல்கள் காதுகளைக் கடந்து இதயத்திலிருந்தும் நம்மை கேட்க வைக்கும். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பேசி உள்ளார்.

Advertisement

அதேபோல் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " தன்னுடைய காந்தர்வ குரலால் தமிழ் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் கட்டிப் போட்ட ஜானகி அம்மாவின் மறைவு ஒட்டுமொத்த இசை உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பு! ஜானகி அம்மாவின் குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் !

என் பள்ளி பருவத்தில் முதல்வனே பாடலில் இவர் குரலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பேன். ARR பாடலில் இவர் குரல் வந்தாலே டிராக்லிஸ்ட்ல் பெயரை பார்த்தவுடன் உற்சாகம் தொற்றிக் கொள்ளும் ! இனிய இசை நினைவுகளை தந்த ஜானகி அம்மா இன்னும் நம்முடன் இசையாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்" என்று பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.