சென்னை: நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பூ - இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகாவின் திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, பாலிவுட் என திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது அந்த கொண்டாட்டத்தின் பின்னணியில் நடந்த கலகலப்பான தருணங்களை தொகுத்து ஒரு வீடியோவாக திருமண நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Advertisement

அந்த வீடியோவில் திருமணத்திற்கு வந்த ஒவ்வொரு பிரபலத்தையும் குஷ்பூ மற்றும் சுந்தர்.சி இருவரும் கட்டிப்பிடித்து அன்புடன் வரவேற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டிஜே இசையுடன் நடைபெற்ற கொண்டாட்டத்தில் மணமக்கள் மட்டுமல்லாமல், குடும்பத்தினரும், திரையுலக நண்பர்களும் இணைந்து உற்சாகமாக நடனமாடும் தருணங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

Advertisement

தமிழ் சினிமாவில் இருந்து த்ரிஷா, ஆர்த்தி ரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். தெலுங்கு திரையுலகில் இருந்து நாகார்ஜுனா, ராணா டகுபதி ஆகியோரும் திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினர். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால், திருமண விழாவே நட்சத்திர பட்டாளமாக மாறியிருந்தது.

கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி: இந்த வீடியோவில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பது மறைந்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ். மிகவும் சந்தோஷமாக அனைவருடனும் பேசி, சிரித்தபடி நிகழ்ச்சியை ரசிக்கும் அவரது காட்சிகள் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளன. ஏனெனில், அவர் பொதுவெளியில் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அதிர்ச்சி மரணம்: திருமண விழாவில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய பாக்யராஜுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மறைவுக்குப் பிறகும் ஒளி கொடுத்த மனிதர்: வாழ்நாளிலேயே கண்தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்த பாக்யராஜின் கண்கள், அவரது மறைவுக்குப் பிறகு தானமாக வழங்கப்பட்டன. அந்த மனிதநேய செயலை நினைவுகூரும் வகையில் சமீபத்தில் "கே. பாக்யராஜ் வழியில் கண்தானம்" என்ற பெயரில் கண்தான உறுதிமொழி முகாமும் நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கண்தானம் செய்ய முன்வந்து பதிவு செய்தனர். அந்த நிகழ்வின் வீடியோவையும் பாக்யராஜின் குடும்பத்தினர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Advertisement

நினைவேந்தல்: இதற்கிடையில், மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் அவரது சிஷ்யரான கே. பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் தமிழ்த் திரையுலகம் சார்பில் வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிரம்மாண்டமான நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்து கொண்டு இரு இயக்குநர்களுக்கும் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த திருமண கொண்டாட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள், "எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்காரு... இது தான் பாக்யராஜ் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி என்று நினைக்கும்போது மனசு கனக்குது" என உருக்கமாக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.