சென்னை: 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி நேற்று உயிரிழந்தார். ஜானகி அம்மாவின் ஒரே மகனான முரளி கிருஷ்ணாவை கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் பறிகொடுத்தார். மகனை பறிகொடுத்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த பாடகி எஸ். ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு 7.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
திரண்ட திரையுலகம்: ஜானகி அம்மாவின் மறைவுச் செய்தி கேட்ட ஒட்டுமொத்தத் திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்தது. தமிழக முதலமைச்சர் விஜய், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா எனப் பலரும் தங்களது எக்ஸ் தளத்தில் கண்ணீர் அஞ்சலியைப் பதிவு செய்தனர். பொதுமக்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்துவதற்காக ஜானகி அம்மாவின் உடல் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மலர்வளையம் வைத்து அழுது அஞ்சலி செலுத்தினர்.
நல்லடக்கம்: இன்று பிற்பகல் 3 மணி அளவில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் ஜானகி அம்மாவின் உடல் ஊர்வலமாக அவரது பண்ணை இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழி நெடுகிளும் திரண்டு இருந்த பொதுமக்கள் மலர்களை தூவி அவருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலியை செலுத்தினர். கர்நாடக மாநில அரசின் சார்பில் அமைச்சர்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, 30 குண்டுகள் முழங்க கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. "நான் போன பின்னே நீ வாழ வேண்டும்" என்று தன் வசீகரமான குரலால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் உருக வைத்த எஸ். ஜானகி அவர்களின் உடல் இன்று மண்ணோடு மறைந்தாலும், அவர் காற்றில் விட்டுச் சென்ற பாடல்கள் மூலம் நம் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.More Articles