சென்னை: நீட் எதிர்ப்பு போராட்ட மேடையில் பேசிய பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி, போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நான் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிவிட்டு துரத்துகிறார்கள். இதுதான் ஜனநாயகமா? இது ஒரு போலி போராட்டம்" எனக் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். மேடையில் சனம் ஷெட்டி பேசிய காட்சிகளை ஷேர் செய்து விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டுள்ள கருத்து தீயாக பரவி வருகிறது.

Advertisement

நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் எதிரொலியாக, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, முதலமைச்சர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான 'ஜனநாயகன்' திரைப்படத்தை, தவெக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில், அது ஒருபுறம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

நீட் போராட்டத்தில் சனம் ஷெட்டி: மற்றொருபுறம், மாணவர்களின் இந்த நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிக் பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி நேற்று இரவு இப்போராட்டத்தில் பங்கேற்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

Advertisement

ஜன நாயகன் பார்த்தேன்: போராட்ட மேடையில் ஏறிப் பேசிய நடிகை சனம் ஷெட்டி, "இது மாணவர்களின் போராட்டம். இங்கு பேசிய சிலரின் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மேடையை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துபவர்கள் தான் ஜோக்கர்கள், நாங்கள் கிடையாது. நான் விஜய்யின் தீவிர ரசிகை. நேற்றுதான் நான் 'ஜனநாயகன்' படம் பார்த்துவிட்டு வந்தேன்" என்று கூறினார்.

மைக்கை பிடுங்கி: சனம் ஷெட்டியின் இந்தப் பேச்சுக்கு, அங்கிருந்த போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர். அவரது உரையை உடனடியாக நிறுத்துமாறு கோஷமிட்டனர். சனம் ஷெட்டி அதிருப்தியுடன், "நான் பேசவா, இல்லை போகவா?" எனக் கேட்க, அதற்கு போராட்டக்காரர்கள் "உடனே போயிடுங்க" என முழக்கமிட்டனர்.

Advertisement

இதனால் கோபமடைந்த சனம் ஷெட்டி, "இது பேச்சுரிமையைப் பறிக்கும் செயல். யாரும் சொல்லி நான் இங்கு வரவில்லை, என் சொந்த விருப்பத்திலேயே வந்திருக்கிறேன். தொடர்ந்து மாணவர்களுக்காகப் பேசுவேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

பக்கா மாஸ்: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சனம் ஷெட்டி, "நான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கைப் பிடுங்கிக் கொண்டு துரத்துகிறார்கள். இதுதான் நீங்க பேசும் ஜனநாயகமா? இது ஒரு முற்றிலும் போலியான போராட்டம்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சனம் ஷெட்டி மேடையேறி போராட்டக்காரர்களை எக்ஸ்போஸ் செய்துளார் என்றும் "கொக்கா மக்கா மரண மாஸ்" என சனம் ஷெட்டி பேசிய வீடியோவை ஷேர் செய்து பிரசாந்த் ரங்கசாமி ட்வீட் போட்டுள்ளார். மாணவர்களின் போராட்டத்தை திமுக தங்களுக்கு சாதகமாக திசை திருப்பப் பார்ப்பதாக கடும் குற்றச்சாட்டுக்களை தவெக தரப்பு எழுப்பி வருகிறது. எந்தவொரு சினிமா பிரபலங்களையும் மாணவர்களின் போராட்டங்களில் உள்ளே நுழைய விடுவது அந்த பிரச்னையை நீர்த்துப்போக செய்துவிடும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.