சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நான் நடித்ததில் இருந்து சீமானுக்கு ஒரே பொறாமை என நெல்லையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை மேடையிலேயே கலாய்த்து நடிகர் சரத்குமார் பேசிய இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அகில இந்திய சரத்குமார் ரசிகர் மன்றம் மற்றும் நாட்டாமை குடும்பத்தினர் சார்பில், முன்னாள் எம்.பி.யும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நைனா நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சீமான் பேச்சு: இதில் பேசிய சீமான், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் என்னுடைய பாட்டன் பழுவேட்டரையருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயைப் போட்டுவிட்டார் நம்ம மணிரத்னம். நான் சரத்குமார் அண்ணனிடம் ஜாலியாகவே கேட்டேன்... இந்த வயதில் உங்களுக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியா? என்று கேலியாகக் கேட்டேன். அதற்கு அவர் உனக்கு பொறாமை என்றார். அவர் என்னிடம் எப்போதும் சொல்வது ஒன்றே ஒன்றுதான்... உடலை நன்றாகப் பராமரித்துப் பேணிப் பாதுகாத்து வந்தால், எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
சீமானுக்கு பொறாமை: சரத்குமார் அதிரடி பதிலடி: சீமானின் பேச்சுக்கு மேடையில் சிரித்தபடியே பதிலளித்த சரத்குமார், சீமான் மேடையில் பேசத் தொடங்கும்போது, பல ரகசியங்களை எடுத்துப் போட்டு உடைத்து விடுவாரோ என்று எனக்கு உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது. ஏனென்றால் நானும் சீமானும் மிகவும் நெருங்கி பழகக்கூடியவர்கள். அவர் ஐஸ்வர்யா ராயைப் பற்றி மட்டும் பேசவில்லை... எல்லாரைப் பற்றியும் பேசுவார். பொன்னியின் செல்வன் படத்தில் நான் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி போட்டு நடித்ததிலிருந்து அவருக்குப் பொறாமை. என்னடா இந்த வயதில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்துவிட்டாரே என்பதை சீமானால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சுப்ரீம் ஸ்டாருனு சொல்லல: அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் என்னை பெரிய பழுவேட்டரையர் என்று சொல்கிறார். என்னை சுப்ரீம் ஸ்டார் என்று சொல்லாமல், வயதான பெரிய கிழவன் பழுவேட்டரையருக்கு ஜோடியா என்று கேலி செய்திருக்கிறார். ஆனால், இயல்பாகவே எல்லாரிடமும் கலகலப்பாகப் பேசக்கூடியவர்தான் சீமான் என்றார். தொடர்ந்து பேசிய சரத்குமார், நான் சினிமாவிலிருந்து திடீரென அரசியலுக்கு வந்தவன் அல்ல. என் குடும்பமே அரசியல் பின்னணி கொண்ட குடும்பம்தான். உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்களை யாராலும் எப்போதும் தோற்கடிக்க முடியாது. உடல் வலிமையும் கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே இளைஞர்கள் வாழ்க்கையில் சாதனையாளர்களாக மாற முடியும். எதையும் சாதிப்பதற்கு உடல் வலிமையும் மனவலிமையும் மிக அவசியம்! என்னால் 150 ஆண்டுகள் வரையிலும் கூட வாழ முடியும். சீனர்கள் 150 ஆண்டுகளைத் தாண்டியும் வாழ்கிறார்கள், அதற்கு நாம் நமது உடலைச் சரியாகப் பராமரிக்க வேண்டும்" என அதிரடியாகப் பேசி மேடையையே அதிர வைத்தார்.More Articles