சென்னை: டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் நேரில் முறையிட முயன்றார் பாடகர் தெருக்குரல் அறிவு. ஆனால் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி சில மணி நேரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் அவரை வைத்திருந்தனர்.

Advertisement

அதன் பின்னர், அவரது கோரிக்கையை அரசு தரப்பில் பரிசீலிக்க ஒப்புக்கொண்ட நிலையில், அவரை தலைமைச் செயலகத்திற்கு உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவே நேரடியாக வந்து பாடகர் தெருக்குரல் அறிவை காரில் ஏற்றி வைத்து வழி அனுப்பினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் பலரும் தெருக்குரல் அறிவை முதலமைச்சர் விஜய்யே நேரடியாக அழைத்து பேசி இருப்பார் என்று தவெகவினர் பலரும் பதிவிட்டு வந்தனர்.

Advertisement

இப்படி இருக்கையில், நேற்று நடைபெற்ற மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக தெருக்குரல் அறிவு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, அதாவது " நீட் தேர்வு தொடர்பான கோரிக்கைகள் குறித்து நடைபெறும் இந்தச் சந்திப்பின் முடிவுகள் மற்றும் நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக தில்லியில் பெருந்திரளாக போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தலைமைச் செயலகம் முன்பு நான் குரலெழுப்பினேன்.

Advertisement

நீட் தேர்வு மாணவச் சமூகத்திடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக பல மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம்; மேலும் இழக்கும் அபாயமும் தொடர்கிறது. இந்த நிலை மாணவர்களின் உளவியலையும் நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கக் கூடியது. எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களில் ஒருவனாக எனது கோரிக்கை.

இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை மட்டுமே சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பில், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்தேன். நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் ஜனநாயக வழியில் போராடி வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த எக்ஸ் தள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள்.