சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கும் கூட்டணிகளில் முக்கியமானது வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ச்சியாக தரமான படங்களை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணையப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், அந்த கூட்டணி இணையக் காரணம் என்ன என்பது குறித்து தற்போது புதிய தகவலை சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

அவரது பேச்சின்படி, வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து உருவாக்க திட்டமிட்டிருக்கும் 'தமிழ் முருகன்' திரைப்படம் சாதாரண படமாக இருக்காது என்றும், முருகன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தாங்கி வரும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் - த்ரிவிக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதைவிட பெரிய அளவில் பேசப்படும் படமாக இதை உருவாக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில்தான் இருவரும் இருப்பதாக கூறியுள்ளார்.

Advertisement

பட்ஜெட்: அதற்காக எந்தவித சமரசமும் இல்லாமல், மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தை உருவாக்க வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படம் உருவாக வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 300 முதல் 400 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், அந்த அளவுக்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெற்றி மாறன்: ஆனால் உடனடியாக இந்த படத்தை தொடங்க முடியாத சூழல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காரணம், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவரின் கால்ஷீட்டும் அடுத்த சில ஆண்டுகளுக்கு முழுவதுமாக பிஸியாக இருப்பதுதான். வெற்றிமாறன் தற்போது 'அரசன்', 'ராஜன் வகையறா' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்பிறகு நீண்ட நாளாக காத்திருக்கும் சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தையும் இயக்க வேண்டியிருக்கிறது. இதனால் அவரது அடுத்தடுத்த திட்டங்கள் ஏற்கனவே வரிசையாக உள்ளன.

Advertisement

தனுஷ் லைன் -அப்ஸ்: அதேபோல் தனுஷும் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் D55 படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தமிழரசன் பச்சைமுத்துவுடன் ஒரு படம், மேலும் 'வடசென்னை 2' உள்ளிட்ட பல படங்கள் அவரது லைன் அப்பில் இருக்கிறது. இதனால், 'தமிழ் முருகன்' படம் உடனடியாக தொடங்க வாய்ப்பில்லை என்றாலும், படம் கண்டிப்பாக உருவாகும் என்றும் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

இருவரின் பிளான்: மேலும், இந்த படம் வெறும் கதைக்காக மட்டும் உருவாகும் திட்டம் அல்ல என்றும், வெற்றிமாறனும் தனுஷும் தங்களது மார்க்கெட்டை இன்னும் பெரிய அளவுக்கு உயர்த்தி, 400 முதல் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய தயாராக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது கவனமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

தயாரிப்பு நிறுவனம் தனுஷின் வொண்டர்பார் நிறுவனமாக இருந்தாலும், இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க வெளிப்புற முதலீட்டாளர்களின் ஆதரவும் தேவைப்படும். அதற்கான வணிக மதிப்பை உருவாக்கிய பிறகுதான் 'தமிழ் முருகன்' படத்தை தொடங்க வேண்டும் என்பதில் வெற்றிமாறனும் தனுஷும் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.