சென்னை: கண்ணப்பா படத்தை போல அதிக பட்ஜெட்டில் எடுத்து பெரிதாக வசூல் செய்ய முடியாமல் ஃப்ளாப் ஆன நாகபந்தம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் தற்போது ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. படத்தின் டிரைலர் எல்லாம் படு மிரட்டலாக இருந்தாலும் அப்போதே தியேட்டருக்குப் போக வேண்டாம் என பட்ஷி சொல்ல தியேட்டருக்குச் சென்று பார்க்கவில்லை.

Advertisement

அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கே ஒரு முறை பார்த்து விடலாம் என நினைத்து படத்தை போட்டால் படமும் விஷுவல் எஃபெக்ட்ஸ் புரொடக்‌ஷன் வேல்யூ என ஆரம்பம் முதலே அசத்தலாகவே இருந்தது.

Advertisement

இந்த படம் ஏன் பாஸ் ஓடாமல் ஃப்ளாப் ஆச்சு என இடைவேளை வரை ஏகப்பட்ட கேள்விகள் டி. ராஜேந்தர் ஃபேஸ் ரியாக்‌ஷன் மீம் போல வந்தாலும் அதற்கான விடை 2வது பாதி ஆரம்பித்த உடனே தெரிந்து விடுகிறது. கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டு வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே உலகளவில் வசூல் ஈட்டிய நாகபந்தம் படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

நாகபந்தம் கதை: அபிஷேக் நமா இயக்கத்தில் விராத் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், மகேஷ் மஞ்ச்ரேக்கர், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக நாகபந்தம் வெளியானது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. ஸ்ரீரங்கம் பெருமாள் வயிற்றில் உள்ள பிரம்ம கமலம் ஒரு சாவி என்றும் அதனை வைத்து நாகபந்தம் மூலம் கட்டப்பட்டுள்ள வைகுண்டம் போன்ற கோயிலின் வாசலை திறந்து விட்டால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஆளலாம் என பைராகி எனும் மந்திரவாதி நினைத்து அப்தாலி எனும் அரபு மன்னன் துணையுடன் ஸ்ரீரங்கபுரம் கோயிலை தாக்குகிறான். அந்த காலத்தில் இருந்த நாக சாது அவர்களை அடித்து துவம்சம் செய்து பிரம்ம கமலத்தையும் நாகபந்தத்தையும் காப்பாற்ற நிகழ்காலத்தில் வில்லன் அப்தாலி மரங்களில் கட்டப்பட்டிருக்கும் பைராகியை எழுப்பி பிரம்ம கமலத்தை திருடி வர ஹீரோயின் நபா நடேஷை அனுப்புகிறான்.

Advertisement

அந்த ஊரில் சாதாரண குடியில் பிறந்து வளரும் ஹீரோ தனது தங்கையின் திருமணத்தை நடத்த காசு வேண்டும் என்பதற்காக பிரம்ம கமலத்தை உயிரை பணயம் வைத்து எடுத்து வருகிறான். ஆனால், அவனுக்கும் அதற்கும் இருக்கும் பந்தம் மீண்டும் நினைவுக்கு வர கிளைமேக்ஸில் அந்த நாகபந்தம் முறிந்து சொர்க்க வாசல் திறந்ததா? அல்லது நாயகன் அதை தடுத்தாரா என்பது தான் படத்தின் கதை.

பார்க்கலாமா? வேண்டாமா?: படத்தின் பிரம்மாண்ட காட்சிகள், விஷுவல் எஃபெக்ட்ஸ், புதையல் வேட்டை போன்ற கதைக்களம், ஆக்‌ஷன் காட்சிகள் போன்றவை முதல் பாதியில் படத்தை நன்றாகவே நகர்த்துகிறது. ஆனால், 2வது பாதியில் ஹீரோவின் தங்கை திருமணத்தின் போது ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்து விடும் காட்சியில் தொடங்கி கிளைமேக்ஸ் வரை இயக்குநர் ஸ்க்ரீன்பிளேவில் சொதப்பி எடுத்து விட்டார். 3 மணி நேரம் 5 நிமிடம் படம் என்பதால் எப்போடா படத்தை முடிப்பீங்க என ஃபைட் சீனை எல்லாம் ஓட்டி ஓட்டி பார்க்கும் நிலைமைக்கே போய்விட்டது.

Advertisement

திரைக்கதையை இன்னமும் தெளிவாக எடுத்திருந்தால் ராஜமெளலி படம் போல சூப்பராக வந்திருக்க வேண்டிய படம் தான் இந்த நாகபந்தம். ஆனால், இந்து ஹீரோ இஸ்லாமிய வில்லன், இந்துக் கடவுள்களை அழிக்கப் பார்க்கிறான் என அதே அகண்டா 2 படத்தில் சீனாவை வில்லனாக்கியது போல அஜெண்டாவை கொண்டு வந்த இடத்தில் தான் படம் அடிவாங்கி விட்டது. புராண கதைகளை பார்க்கும் விரும்பும் ரசிகர்கள் ஒருமுறை முயற்சி செய்யலாம். ஜகபதி பாபு சாபம் இந்த படத்தையும் சும்மா விடலையே பாஸ்!