சென்னை: ஜமா படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன் கலையாக மட்டுமின்றி என்னால் கமர்ஷியலாகவும் ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என பண்ணியிருக்கும் படம் தான் இந்த 'அன்பே டயானா'. இந்த வாரம் ஜூலை 17ம் தேதி திரையரங்குகளில் பாரி இளவழகன் எழுதி, இயக்கி நடித்திருக்கும் அன்பே டயானா படம் வெளியாகிறது.
அவருக்கு ஜோடியாக மேஜிக் டயானா எனும் கதாபாத்திரத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் பக்காவான ஆங்கிலோ இந்தியன் பொண்ணாகவே நடித்துள்ளார். பரிதாபங்கள் கோபி பெங்களூரிவில் பிறந்து பெரம்பூரில் செட்டிலான நபராக நடித்துள்ளார். கன்னடர்கள் தமிழ் பேசுவதை போல அவர் பேசும் தமிழை விட கிளைமேக்ஸில் அவர் பார்க்கும் வேலை படத்திற்கு பக்காவாக கைகொடுக்கிறது.
மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பில் தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் ஃபீல் குட் படங்களாக வெளியாகி வரும் நிலையில், அந்த வரிசையில் 'அன்பே டயானா' இடம் பிடித்ததா? இல்லையா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். அன்பே டயானா கதை: முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியை சுற்றித்தான் படம் நகர்கிறது. ஆரம்பத்திலேயே இந்த படத்திலும் விஜய்க்கு தேங்க்ஸ் கார்டு போட்டு விட்டனர். சென்னையில் வாழும் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த தெலுங்கு குடும்பத்து பையனாக சிருமாமில்ல சீதா கிருஷ்ணா (CSK) கதாபாத்திரத்தில் ஹீரோ பாரி இளவழகன் நடித்துள்ளார். கல்லூரி காலத்தில் இருந்தே ஆங்கிலோ இந்தியன் பெண்ணான மேஜிக் டயானா கோன்சால்வ்ஸிடம் காதலை சொல்லி காதலித்து வருகிறார். ஆனால், மேஜிக் பல வருடங்களாக நட்பாக மட்டுமே பழகி வருகிறார். காதலை சொல்ல வில்லை. ஹீரோவின் அப்பாவாக சேத்தன் காதுல மெஷினை மாட்டிக் கொண்டு முதல் சீனில் சட்டை இல்லாமல் வருவதில் தொடங்கி, கிளைமேக்ஸில் மண்டபத்தில் குறட்டை விடும் சீன் வரை மனுஷன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்துவிட்டார். ஜமா படத்திலும் சேத்தனின் நடிப்பை சரியாக பாரி பயன்படுத்தியிருப்பார். அம்மாவாக நடித்துள்ள ரோஜா சாதி பார்க்கும் நபராகவும் சொந்தக்காரங்களே வேறு சாதியில் திருமணம் செய்யக் கூடாது என சண்டை போடும் நபராக வருகிறார். டெரர் அம்மா பேச்சுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் தவிக்கும் சிஎஸ்கேவுக்கு ஒன் சைட் லவ் ஓகே ஆனதா? அதை எப்படி குடும்பத்தில் சொல்லி சம்மதிக்க வைத்தாரா? இல்லையா? சகோதரர் மகளை கட்டி வைக்க அம்மா ரோஜா போட்ட பிளான் என்ன ஆனது என்பதை 2.30 மணி நேரம் காமெடியாகவும் சில முக்கிய மெசேஜை வைத்தும் சொல்லியிருக்கும் படம் தான் இந்த அன்பே டயானா. படம் எப்படி இருக்கு?: புரட்டாசி விரதம் வீட்டிலும் நான்வெஜ் கிடையாது, வெளியிலும் சாப்பிடக் கூடாது என அம்மா ரோஜா ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட காதலியின் வீட்டில் மாட்டுக்கறியும், பன்றிக்கறியும் சமைத்து வைக்க ஹீரோ செய்யும் வேலை என பல இடங்களில் பாரி இளவழகன் ஏகப்பட்ட குட் பாய்களை பிரதிபலிக்கிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இந்த படமும் பிடிக்கும். பாரி கிட்டத்தட்ட சுமார் மூஞ்சு குமாரை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். மேஜிக் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக ரம்யா ரங்கநாதன் ஸ்க்ரீனில் செம மேஜிக் செய்கிறார். ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவரது காஸ்ட்யூம் முதல் அந்த ஓட்டக் கண்ணாடி வரை எல்லாத்தையும் இயக்குநர் பாரி ரசித்து ரசித்து படமாக்கியுள்ளார். கண்டிப்பாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷ் இவரை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் என்றே தோன்ற வைக்கிறது. வொண்டர்லேண்ட் எனும் இடத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்க இருவரது லவ் ஸ்பாட்டாக உள்ள இடம் தொடங்கி பெரம்பூர் பாலம், ஷாலிமார், அத்தோ கடை என ஏகப்பட்ட விஷயங்களையும் எக்ஸ்ப்ளோர் செய்துள்ளனர். நண்பனாக நடித்துள்ள பரிதாபங்கள் கோபியின் பேச்சு ஆரம்பத்தில் கொஞ்சம் இரிடேட் செய்தாலும், போக போக அது செட்டாகிறது. முதல் பாதியை விட 2வது பாதியில் அவர் செய்யும் சில சம்பவங்கள் படத்தை ஃபன் ரைடாக மாற்றி விடுகிறது. அம்மாக்கள் ஏன் டெரராக இருக்கின்றனர். குடும்பத்தில் ஏன் சாதி பார்த்து திருமணம் செய்கின்றனர். வேறு சாதியில் காதலித்தால் அதை பசங்க பெத்தவங்களிடம் ஏன் தைரியமாக சொல்வதில்லை. பெற்றோர்களை வில்லன்களை போல பார்க்காமல், ஒரு சில வீக்னெஸ் பாயின்ட்டுகளை பிடித்து சரியான நேரத்தில் சரியான விதத்தில் அவர்களிடம் சொன்னால் அவங்க ஃபிளாட் ஆகிவிடுவார்கள் போன்ற பல விஷயங்களை ரொம்பவே இயல்பாக அணுகியுள்ள விதத்திற்கு பாராட்டுக்கள். ரோஜாவுக்கு சேத்தன் காபி போட்டுக் கொடுக்கும் அந்த சீன் பாரி - ரம்யாவின் காதல் காட்சிகளை விட 100 மடங்கு சூப்பர். பிளஸ்: ஹீரோவாகவும் இயக்குநராகவும் தியேட்டரிக்கல் வெற்றியை பெற்றாக வேண்டும் என்கிற முனைப்புடனும் பாரி போட்டுள்ள உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெளிவாக தெரிகிறது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ஜாலி வெர்ஷனை பார்த்தது போன்ற உணர்வை கொடுத்த விதம் படத்திற்கு பலம். பரத் சங்கரின் இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு தேவையான அளவு இருந்தது. ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் குறைந்த பட்ஜெட்டில் பெரம்பூரை ஃபாரீன் ரேஞ்சுக்கு எப்படியெல்லாம் காட்ட முடியும் என்றும் கொஞ்சம் மிஸ் ஆனாலும் சீரியல் போன்ற உணர்வை தந்து விடும் இடங்களிலும் அவரது லென்ஸ் படத்தை காப்பாற்றியுள்ளது பெரிய பிளஸ். பாரிக்கு நிகராக ரம்யா ரங்கநாதன் வரும் அனைத்து காட்சிகளிலும் தனது நடிப்பால் அசத்துகிறார். சேத்தன், ரோஜா, செல் முருகன், பரிதாபங்கள் கோபி, மைண்ட் ஆட்டிசம் பெண்ணாக நடித்துள்ள அந்த சின்ன பாப்பா என அனைவரது நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மைனஸ்: பைக்கில் போகும் போதெல்லாம் ஷேக் ஆகும் கேமரா, ரோஜாவின் கதாபாத்திரத்தை ஆரம்பத்தில் அந்தளவுக்கு டெரராக காட்டிவிட்டு 2வது பாதியில் அப்படியே மாறுவது, அப்பாவுக்கு ஃபிளாஷ்பேக் போர்ஷன் என வைத்து ஹீரோ மாமனாரை போட்டு அடிக்கும் காட்சிகள், காதலியை கழட்டிவிட முயல்வதும், கடைசியில் மாமா மகளை திருமணம் செய்துக் கொள்ள நண்பனிடம் ஷூ வாங்க சொல்வதும், எந்தவொரு முயற்சியும் போடாமல் காதல் கிடைக்க வேண்டும் என நினைக்கும் இடங்கள் எல்லாம் குறைகளாகவே தெரிகின்றன. பார்க்கலாமா? வேண்டாமா?: ஆனால், சொந்த சாதியிலேயே திருமணம் செய்தாலும், கலப்புத் திருமணம் செய்தாலும், காதல் திருமணம் செய்தாலும், பெத்தவங்க பார்த்து வைத்து கட்டாயத் திருமணம் செய்தாலும், கணவன் - மனைவி சந்தொஷமாக கடைசி வரை சேர்ந்து வாழ வேண்டும் என்கிற மெசேஜை சொல்லியிருப்பதால் தாராளமாக தியேட்டருக்குச் சென்று இந்த ஜாலியான 'அன்பே டயானா' படத்தை பார்க்கலாம்.More Articles