சென்னை: வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதி நடிப்பில், கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படம் ஜூலை 17-ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அருள்நிதி, ஆரவ், ரம்யாபாண்டியன், காளிவெங்கட், ஜான் விஜய், பேபி கிருத்திகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து செய்யாறு பாலுவின் விமர்சனத்தை பார்க்கலாம்.
தேனி மாவட்டத்தின் பக்கத்தில் இருக்கும், மிகவும் பின்தங்கிய ஒரு மலைக் கிராமத்தில் ஆரவ், ரம்யா பாண்டியன் மற்றும் அவர்களின் மகள் என மூவர் வாழ்ந்து வருகிறது. இவர்கள் 'காடர்' என்ற பழங்குடியின மொழியைப் பேசுபவர்களாக இருக்கிறார்கள். அங்கு பணியாற்றும் வன அதிகாரி ஜான் விஜய், அந்த மலைவாழ் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டு, அச்சுறுத்தி வருகிறார். காட்டை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவர், அந்தப் பகுதி மக்கள் காலங்காலமாகப் பின்பற்றி வரும் வழிபாடுகள், சம்பிரதாயங்கள், சடங்குகள் என எல்லாவற்றையும் தடுத்து நிறுத்துகிறார்.
அருள்வான் பட கதை: இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மலைக் கிராமத்தின் பெரியவர் ஒருவர், தனது இறப்புக்கு முன் ரம்யா பாண்டியனின் மகளிடம், நம்ம இனத்துல பெண்களுக்குப் படிப்புங்கிறது எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. ஆனால், பெண் குழந்தைகள் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும். நான் இந்த மலைப் பகுதிக்குத் தலைவராக இருந்தாலும், அந்த ஃபாரஸ்ட் ஆபீஸர் படித்தவராக இருப்பதால் அவரிடம் நான் அடிபணிந்து போக வேண்டி இருக்கிறது, அப்படியென்றால் படிப்பு எவ்வளவு பெரிய ஆளுமையாக இருக்கிறது என்று புரிந்துகொள் என்று அந்தப் பிஞ்சு மனதில் படிப்பின் அவசியத்தை விதைக்கிறார். அதன் பிறகு, அந்தச் சிறுமி படிப்பையே தனது உலகமாகக் கருதி, மலையை விட்டுத் தமிழே தெரியாத நிலையில் நகரத்தை நோக்கி வருகிறாள். தேனி நகரத்திற்கு வரும் அவளுக்கு நினைத்தபடி படிப்பு கிடைத்ததா? அந்த மலைக் கிராமத்திற்குப் பள்ளிக்கூடம் வந்ததா? என்பதே 'அருள்வான்' படத்தின் கதை.
கத்தி மேல் நடக்கும் கதை: இதேபோன்று கல்வியின் முக்கியத்துவத்தைப் பேசும் பல படங்கள் ஏற்கனவே வந்து இருந்தாலும், இந்த 'அருள்வான்' ஒரு முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த படத்தில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இயக்குநர் கணேஷ் விநாயகன் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இந்தத் படத்தின் கதைக்களம் ஒரு கத்தி மேல் நடப்பது போன்றது. ஏனென்றால், திரைக்கதையில் கொஞ்சம் தடம் மாறினாலும் இது ஒரு ஆவணப்படம் போல மாறிவிடும் ஆபத்து இருந்தது. ஆனால், அப்படி ஆகவிடாமல் மிக அழகான, எதார்த்தமான ஒரு திரைப்படமாக இயக்குநர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
மிரட்டலான வசனம்: மொழி தெரியாத நகரத்தில் சிக்கிக்கொள்ளும், அந்தச் சிறுமி ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அப்போது அவள் பேசும் மொழி யாருக்கும் புரியாமல் குழம்புகின்றனர். அந்த நேரத்தில் காளி வெங்கட் தான், அந்தப் பெண் என்ன பேசுகிறாள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வார். அப்போது அவள், காட்டில் கொடிய மிருகங்களைப் பார்த்துக்கூட எனக்குப் பயம் ஏற்பட்டதில்லை. ஆனால், இங்கு இருக்கும் மனிதர்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என்று சொல்வாள். அந்த வசனம் வரும்போது தியேட்டரில் கைதட்டல் அள்ளுகிறது. இப்படிப்பட்ட அழுத்தமான வசனங்களை எழுதிய பாடலாசிரியர் யுவபாரதிக்கு என் பாராட்டுகள். அவர் தான் இந்த படத்திற்கு வசனகர்த்தாவாகப் பணியாற்றி உள்ளார். அதேபோல, ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்தில் வேற லெவலில் அடித்து நொறுக்கியிருக்கிறது. படம் மிக அருமையாக வந்திருக்கிறது, இதுபோன்ற நல்ல படைப்புகளுக்குத் மக்கள் தங்களது பேராதரவைக் கொடுக்க வேண்டும் என்று செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் பேசி உள்ளார்.
More Articles
- ஜெனரேட்டர் ஆஃப்.. விஜே சித்துக்கு நடந்த அவமானம்.. டயங்கரம் ஸ்பாட்டில் நடந்த கொடுமை.. பிரபலம் பேட்டி
- கல்யாண வீட்டின் கலகலப்பு.. ஜியோ ஹாட்ஸ்டாரில் இன்று வெளியான 'Cousins & Kalyanams' குடும்பத்துடன் பார்க்கலாமா?
- ஐயப்பன் மகிமையும் சொல்லும் இரண்டு படங்கள்.. டைட்டிலை வெளியிட்ட வெங்கட் பிரபு!
- அடல்ட் சமாசாரங்களுடன் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி‘.. படுக்கையறை காட்சியில் தாராளம் காட்டிய நடிகை இனியா!
- பணத்திற்கு விலை போகும் தாய்.. 40 சிறுமிகளை கொடூரமாக கொலை செய்யும் மகள்கள்.. திகிலூட்டும் படம்!
- மேகத்தை காகிதமாக்கி காதல் கடிதம் தீட்ட ரெடியா குணால் ஃபேன்ஸ்.. ரீ ரிலீஸுக்கு ரெடியான ‘காதலர் தினம்’!