ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்திரா விருது-வழங்கினார் மன்மோகன் சிங்!

தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாடுபட்டதற்காக இந்த விருதினை அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் வழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்.
தேசிய ஒருமைப்பாட்டுக்காக சிறந்த சேவை செய்கிறவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, நாராயணபுரத்தில் செயல்படும் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமும், ஆஸ்கார் விருது நாயகனான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு விருது வழங்கும் விழா, இந்திரா காந்தியின் 25-வது நினைவு நாளான நேற்று, டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் நடந்தது.
ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துக்கு, தேசிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி விருது வழங்கினார். ஆசிரம தலைவர் சுவாமி வியாப்தானந்தா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருது வழங்கினார்.
ரஹ்மானுக்கு புகழாரம்!
விருது வழங்குவதற்கு முன்னதாக சோனியாகாந்தி பேசுகையில், "தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கவும், ஒற்றுமையை பேணிக் காக்கவும் பல வழிகள் உள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையாலும், ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் பின் தங்கிய மற்றும் ஏழைகளுக்கு கல்வி அளிப்பதன் மூலமும் இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். அவர்களது பணி பாராட்டுக்குரியது..." என்றார்.
இசையால் தேசத்தின் ஒற்றுமை வளர்ப்பவர் ஏஆர் ரஹ்மான், என்று புகழாரம் சூட்டினார் மன்மோகன் சிங்.


Click it and Unblock the Notifications











