சரோஜாதேவி-ப்ரியாமணிக்கு தேசிய விருது

54வது தேசிய சினிமா விருது வழங்கும் விழா, நேற்று டெல்லியில் நடந்தது.
இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பிரபல திரைப்பட இயக்குனர் தபன்சின்காவுக்கு வழங்கப்பட்டது.
அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் தங்கத் தாமரையும் வழங்கப்பட்டது. கடந்த 1956-ம் ஆண்டில் வெளியான காபூலிவாலா திரைப்படத்தின் மூலம் தபன்சின்கா சர்வதேச புகழ் பெற்றார்.
திரைத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருது பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, இந்தி நடிகர் திலீப்குமார், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கமும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.
சிறந்த திரைப்படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட புலிஜென்மம் (மலையாளம்) படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ. 2.5 லட்சமும் தங்கத் தாமரையும் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த பொழுது போக்கு திரைப்படத்துக்கான விருது லகே ரகோ முன்னாபாய்க்கு வழங்கப்பட்டது.
'பருத்தி வீரன்' பிரியாமணி:
அகில இந்திய அளவில் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்ட நடிகை பிரியாமணி (பருத்திவீரன்), சிறந்த நடிகராக தேர்வு பெற்ற வங்க மொழி நடிகர் சவுமித்ரா சட்டர்ஜி உள்பட மொத்தம் 53 பிரிவுகளில் பல்வேறு விருதுகளை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்.
பருத்திவீரன் படத்தொகுப்பாளர் ராஜாமுகமது, பிராந்திய மொழிகளில் சிறந்த தமிழ் படத்துக்கான விருது பெற்ற வெயில் பட தயாரிப்பாளர் ஷங்கர் மற்றும் இயக்குனர் வசந்தபாலன் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
டிராபிக் சிக்னல் இந்திப்படத்தின் இயக்குனர் மதுர் பண்டர்கருக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. நடிகர் ரித்திக் ரோஷனின் இந்திப் படத்தில் (கிரிஷ்) சிறப்பு சப்தங்கள் மற்றும் காட்சிகளை வடிவமைத்ததற்காக, சென்னையை சேர்ந்த இ எப் எக்ஸ் (பிரசாத் ஸ்டுடியோஸ்) நிறுவனத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற பின்னர் பிரியாமணி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியி்ல்,
இது நான் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு புதிய பெருமை, ஆனால் வாழ்க்கையில் ஒருமுறையாவது பெற மாட்டோமா என எல்லாரும் ஏங்கிக் கொண்டிருக்கும் விஷயம்.
ஜனாதிபதியிடம் இருந்து நேரில் விருது பெற்றது மிகுந்த உற்சாகத்தையும், சினிமாத்துறையில் மேலும் சாதிக்கவேண்டும் என்ற உந்துதலையும் எனக்குள் ஏற்படுத்தி உள்ளது.
தேசிய விருது கிடைத்ததால் இனி ஜனரஞ்சகமான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் எனக் கூறமாட்டேன். வர்த்தக ரீதியான படங்களில் சவாலான கதாபாத்திரங்களிலும் நடித்து சாதனை படைப்பேன் என்றார் பிரியாமணி.


Click it and Unblock the Notifications











