பசங்க படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது-இயக்குநருக்கு ரூ. 50,000 பரிசு

புதுச்சேரி அரசு செப்டம்பர் 10ம் தேதி இந்திய திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அப்போது இந்த விருதும், பரிசும் வழங்கப்படும் என முதல்வர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையும், நவதர்சன் திரைப்படக் கழகமும், புதுச்சேரி அலியான்ஸ் பிரான்சேவும் இணைந்து 2010-ம் ஆண்டுக்கான இந்திய திரைப்பட விழாவை செப்டம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து புதுச்சேரியில் நடந்து வருகிறது.
புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இந்திய மொழி திரைப்படத்தை தேர்ந்தெடுக்கும். அந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் விருதும், 50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கி சிறப்பித்து வருகிறது.
இந்த ஆண்டு சிறந்த இந்திய திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு தமிழ்மொழி படமான "பசங்க' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜுக்கு 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படவிருக்கிறது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூறிய "கனவு காணுங்கள் அதை நிறைவேற்றுங்கள்' என்ற குறிக்கோளை இன்றைய தலைமுறை பின்பற்ற வேண்டுமென இப்படத்தின் மூலம் இயக்குநர், வலியுறுத்தியுள்ளார்.
இத்திரைப்படம் பிக்சினிமா- ஜீவா திரையரங்கில் செப்டம்பர் 10-ம் தேதி, பள்ளி மாணவர்களுக்காக இலவசமாக திரையிடப்படும். மேலும் 10-ம் தேதி காலை 9 மணிக்கு பாலாஜி, முருகா, ராஜா ஆகிய திரையங்குகளில் பள்ளி மாணவர்களுக்காகவும், மாலை 6 மணிக்கு அலியான்ஸ் பிரான்சே திரையரங்கில் பொதுமக்களுக்காகவும் இலவசமாக திரையிடப்படுகிறது.
14-ம் தேதி வரை தினமும் ஒரு பிராந்திய மொழித் திரைப்படம் மாலை 6 மணிக்கு அலியான்ஸ் பிரான்சே திரையரங்கில் இலவசமாக திரையிடப்படும் என்றார் வைத்திலிங்கம்.


Click it and Unblock the Notifications











