அபிமான ஹீரோ, கதாசிரியர், காமெடியன், வில்லன்... கமலுக்கு 4 விருதுகள்!

By Staff

தசாவதாரம் படத்துக்காக சிறந்த மக்கள் அபிமான ஹீரோ, வில்லன், காமெடியன் மற்றும் திரைக் கதையாசிரியர் என 4 விருதுகளை கமல்ஹாசனுக்கு வழங்கியது விஜய் டிவி.

விஜய் டி.வி. ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.

2008-ம் ஆண்டுக்கான விருதுகள் சென்னையில் நேற்று வழங்கப்பட்டன.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் ரசிகர்களின் சிறந்த அபிமான ஹீரோவாக நடிகர் கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்த கமலஹாசனுக்கு அந்தப் படத்தில் பிளெட்சர் என்ற வில்லன் வேடத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் விருதும், பல்ராம் நாயுடு கேரக்டரில் காமெடி செய்ததற்காக சிறந்த காமெடி நடிகர் விருதும், தசாவதாரம் படத்தின் கதையை உருவாக்கியதற்காக சிறந்த கதாசிரியர் விருதும் வழங்கப்பட்டன. 4 விருதுகளையும் மகிழ்ச்சியுடன் கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.

ஒரு ஹீரோ, ஒரே படத்திற்காக ஹீரோ, வில்லன் மற்றும் காமெடியனுக்கான விருதைப் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் கமலஹாசன் பேசும்போது, 'நான் முதன் முதலில் வில்லனாக நடித்த பிறகே கதாநாயகன் ஆனேன். இந்த வகையில் எனக்கு விலலன் நடிப்புக்காகவும் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.

காமெடியை நான் பாலச்சந்தரிடமிருந்தும், நாகேஷிடமிருந்தும் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் காமெடிக்கான இந்தவிருதினை நாகேஷுக்கும், சக காமெடி கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன், என்றார்.

சிறந்த நடிகர் சூர்யா -நடிகை சினேகா

சிறந்த நடிகராக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த நடிகையாக பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடித்ததற்காக சினேகா தேர்வானார். சிறந்த படமாக வாரணம் ஆயிரம் படம் தேர்வானது. சிறந்த இயக்குனராக சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமாருக்கு விருது வழங்கப்பட்டது.

சாந்தனு - பார்வதி

சக்கரக்கட்டி படத்தில் அறிமுகமான சாந்தனு சிறந்த புதுமுக நடிகராகவும், பூ படத்தில் அறிமுகமான பார்வதி சிறந்த புதுமுக நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

விருது பெற்ற மற்ற கலைஞர்கள்:

சிறந்த ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர்.(படம்: சுப்பிரமணியபுரம்)
சிறந்த இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் (படம்:வாரணம் ஆயிரம்)
சிறந்த கலை இயக்குனர்கள் சமீர்சந்திரா, பிரபாகரன், தோட்டாதரணி (தசாவதாரம்).
சிறந்த படத்தொகுப்பாளர் ராஜா முகமது.

சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்- கமலஹாசன் (படம்: தசாவதாரம்)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர்- ராஜசேகர்(படம்:சுப்பிரமணியபுரம்)
சிறந்த நடன இயக்குனர்: தினா (அஞ்சாதே)
சிறந்த பாடகர்- ஹரிகரன்,
பாடகி- பாம்பே ஜெயஸ்ரீ,
பாடல் ஆசிரியர்- தாமரை.
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்- கவுதமி (படம்: தசாவதாரம்)
சிறந்த ஒப்பனையாளர்கள- பானு, யோகேஷ்( படம்: வாரணம் ஆயிரம்)

ஏ.ஆர்.ரகுமான்

சிறந்த குணசித்ர நடிகர் விருது வி.ஆர்.ரமேசுக்கும், சிறந்த குணசித்ர நடிகை விருது சிம்ரனுக்கும் கிடைத்தது.

செவாலியே சிவாஜிகணேசன் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் தேர்வானார். ரகுமான் சீனா போக இருந்ததால் விழாவுக்கு முன்னதாகவே இந்த விருதை விஜய் டி.வி. அவருக்கு வழங்கி விட்டது.

6 மணிக்கு ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி 8 மணிக்குதான் துவங்கியது. நள்ளிரவு தாண்டி 12.30க்குதான் நிகழ்ச்சி முடிந்தது. ஏராளமான ரசிகர்கள் பேருந்து இல்லாமல் நடந்து சென்றனர். பலர் கைக் குழந்தையுடன் நடந்து சென்றனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த கலைஞர்களைவிட, நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் பெரும்பான்மை நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால், மதன், சிவகுமார், ராமநாராயணன் போன்ற பலர் பேச வாய்ப்பில்லாமல் கீழே இறங்கிச் சென்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X